வியாழன், 22 மார்ச், 2012

இதுபோல் இடைத்தேர்தலை பார்த்ததில்லை: விஜயகாந்த் கருத்து

சென்னை: ""இதுபோல் ஒரு இடைத்தேர்தலை இதுவரை பார்த்ததில்லை. உழைப்பிற்கும், பணத்திற்கும் நடந்த போட்டியில் கடைசியில் பணம் தான் வென்றுள்ளது'' என சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தோல்வி குறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் என்பது கரன்சிக்கும், கட்சிகளுக்கும் நடந்த போட்டியாகும். தேர்தலில், ஆளும்கட்சி பணத்தை வாரி இறைத்தது. எதிர்க்கட்சிகள் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. வாக்காளர்களை சந்தித்து நேரில் ஓட்டுத்தான் கேட்க முடிந்தது. உழைப்பிற்கும், பணத்திற்கும் நடந்த போட்டியில் கடைசியில் பணம் தான் வென்றுள்ளது. அதிகார துஷ்பிரயோகத்தில் துவங்கி, அளவற்ற வாக்குறுதிகள் வரை தாராளமாக அ.தி.மு.க.,வினர் வழங்கினார்கள்.
இதுபோல ஒரு இடைத்தேர்தல் இதுவரை நடந்ததில்லை. இந்த இடைத்தேர்தலில் எவ்வளவோ இன்னலுக்கு இடையில், தங்கள் நேரத்தையும், உழைப்பையும், செலவழித்து பாடுபட்ட, தே.மு.தி.க.,வினரை எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது. எவ்வளவோ, ஆசா பாசங்களுக்கு மத்தியில், உறுதியாக நின்று தே.மு.தி.க.,விற்கு வாக்களித்த மக்களுக்கு இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இடைத்தேர்தல் முடிவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இடைத்தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தல்களில் பிரதிபலிப்பதில்லை என்பது வரலாறு. மக்கள் பிரச்னைக்காக தே.மு.தி.க., தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க., அலுவலகம் "வெறிச்': சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., அலுவலகம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். சென்னையில் இருக்கும் நாட்களில், தினமும் அங்கு வந்து செல்வதை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வழக்கமாக கொண்டுள்ளார். கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் அங்கு வந்து கட்சி பணிகளை கவனித்து, அரசியல் நிலவரங்களை பேசிவிட்டு செல்வார்கள். வழக்கமாக, காலை 11 மணிக்கு கட்சி அலுவலகம் வரும் விஜயகாந்த் மதியம் 2.30 மணிக்கு, தனது விருகம்பாக்கம் வீட்டிற்கு புறப்பட்டு செல்வது வழக்கம். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவுகள், தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதை முன்கூட்டியே அறிந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் நேற்று அங்கு வரவில்லை. விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் நேற்று காலை 10 மணிக்கு அங்கு வந்தனர். தேர்தல் முடிவுகளை "டிவி' மூலம் பார்த்து தெரிந்துக்கொண்டனர். தேர்தல் தோல்வி தொடர்பாக அறிக்கை தயாரித்து கொடுத்து விட்டு, மதியம் 1.30 மணிக்கே தனது வீட்டிற்கு விஜயகாந்த் புறப்பட்டு சென்றார். தே.மு.தி.க.,வின் தோல்வி முகத்தால், ஈ, காக்கை நடமாட்டம் கூட இன்றி அக்கட்சி அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது.

கருத்துகள் இல்லை: