திங்கள், 9 ஜனவரி, 2012

தியாகராயநகரில் சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சென்னை தியாகராயநகரில் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை தற்காலிக வியாபாரத்திற்காக 6 வாரங்களுக்குத் திறக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை தியாகராயநகரில் பல வியாபார நிறுவனங்களின் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுபற்றி நடவடிக்கை எடுக்க சென்னை சிஎம்டிஏவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தி.நகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 28 வியாபார நிறுவனங்களின் கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக சென்னை சிஎம்டிஏவும் அறிவித்தது. விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள 26 வணிக வளாகங்களுக்கு கடந்த அக்டோபர் 30ஆம் தேதி சிஎம்டிஏவும், மாநகராட்சியும் சீல் வைத்தது.
தியாகராயநகரில், இதனால் 500க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் வேலை செய்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை தியாகராயநகரில் 'சீல்' வைக்கப்பட்டு இருக்கும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தி.நகர் வியாபாரிகள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வியாபாரிகள் வழக்கும் தொடர்ந்தனர்.  நீதிபதிகள் பண்டாரி, தீபக் மிஸ்ரா, ஆகியோர் அடங்கிய குழு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சீல்வைக்கப்பட்ட கடைகளை தற்காலிகமாக 6 வாரங்களுக்கு வியாபாரத்திற்காக திறக்கலாம் என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை: