வியாழன், 12 ஜனவரி, 2012

நாட்டிலேயே பணக்கார முதல்வர் மாயாவதிதான்..87.27 கோடி ரூபாய்

புதுடில்லி: நாட்டிலேயே பணக்கார முதல்வர் மாயாவதிதான் என, தெரியவந்துள்ளது. இவருக்கு 87.27 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அரசு சார்பற்ற அமைப்பு வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு: தமிழக முதல்வர் ஜெயலலிதா தனக்கு 51 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தன் சொத்துக்களின் மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதுதவிர ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு 8.1 கோடி ரூபாய்க்கும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு 4.7 கோடிக்கும், அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவுக்கு 3.74 கோடிக்கும்,
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு 2 கோடிக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 1.78 கோடிக்கும், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு 1.9 கோடிக்கும் சொத்துக்கள் உள்ளன. விரைவில் சட்ட தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலுக்கு 6.76 கோடிக்கும், மணிப்பூர் முதல்வர் ஓக்ராம் இபோபிக்கு 6 லட்சத்திற்கும், உத்தரகண்ட் முதல்வர் பி.சி.கந்தூரிக்கு 1.69 கோடிக்கும், கோவா முதல்வர் திகாம்பர் காமத்திற்கு 3.23 கோடிக்கும் சொத்துக்கள் உள்ளன.

இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில், உ.பி., முதல்வர் மாயாவதிக்கு 87.27 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. இதன்மூலம் நாட்டிலேயே பணக்கார முதல்வர் இவர்தான் என்பது தெரியவந்துள்ளது. மாயாவதியின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பதற்கு, அவரின் சொத்துக்கள் எல்லாம் டில்லியில் இருப்பதே காரணம். மாயாவதிக்கு, டில்லி ஓக்லாவில் ஒரு வர்த்தக மையம் உள்ளது. சர்தார் படேல் மார்க்கில் உள்ள அவருக்கு சொந்தமான மனைகளின் மதிப்பு 54 கோடி ரூபாய். இதுதவிர, மாயாவதியிடம் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும் உள்ளன என தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: