செவ்வாய், 29 ஜூன், 2010

சிவாஜிலிங்கம் மற்றும், சித்தார்த்தன்,சம்பந்தன் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றதாக

தேசியரீதியாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, மற்றும் தமிழ் மக்களின் மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்தல் போன்ற விடயங்களுக்கான தீர்வு குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.சிவாஜிலிங்கம் மற்றும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தன் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு தெரிவித்தார்.

இம் மாதம் 25 ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இடையே கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்ற போது இதில் கலந்துக் கொள்ளாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகள் ஆகிய கட்சிகளுடனே சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தனுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.சிவாஜிலிங்கம் மற்றும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துரையாடிதாகவும், இதன் போது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு காண பொதுவான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களின் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தவும், தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என எம்.சிவாஜிலிங்கம் மற்றும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தனிடம் கேட்டு கொண்டதாகவும் இதற்து அவர் இணங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து தான் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவுடன் தொலைபேசியில் கதைத்ததாகவும், நாளை கூட உள்ள பாராளுமன்றத்தில் இதைப்பற்றி கலந்துரையாட உள்ளதாகவும் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தன் இக் கலந்துரையாடலின் போது தெரிவித்தாக எம்.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: