புதன், 30 ஜூன், 2010

இந்திய நிபுணர்குழு இலங்கை வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47 ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலேயே

வன்னியில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய இந்தியாவின் விஷேட நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47 ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை சந்தித்துள்ளது. இம் மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்திய அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யுனிசெப் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் பல வழிகளில் உதவிகளை வழங்கியுள்ளன. அடுத்த இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள அனைத்து மக்களும் மீள்குடியமர்த்தப்படுவர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வாழ்வாதாரத்திற்கு தேவையான வளங்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனடிப்படையிலேயே இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நிதி வழங்க முன்வந்துள்ளதும் மேலும் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றது. மீள்குடியேற்றப்படும் அனைத்து மக்களுக்கும் தலா 75 ஆயிரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு தேவையான பொருட்களும் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் பிரதேச செயலக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும்.

அத்தோடு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இராணுவ தடைகள் என்பவை தொடர்பாக பாதுகாப்பு செயலாளரினதும் ஜனாதிபதியினதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வன்னியில் மக்கள் தமது தொழில்களை சுமூகமான முறையில் செய்து கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கடலில் மீன் பிடித்தலும் காடுகளுக்கு சென்று விறகுகளை வெட்டவும் விவசாயம் செய்யவும் அனுமதி பெறுவதில் எவ்விதமான தடைகளும் கிடையாது. 

கருத்துகள் இல்லை: