ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஜெ’ மரணம்: தேவை பிரேத பரிசோதனை - நீதிமன்றத்துக்கு கடிதம்!


“மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் இருக்கின்றன. பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என்று பெங்களூருவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து நரசிம்மமூர்த்தி ‘தி இந்து' பத்திரிகைக்கு அளித்த பேட்டி இதோ:
“கடந்த செப்டம்பர் மாதம் வரை நலமுடன் இருந்த ஜெயலலிதா திடீரென இரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று முதலில் சொன்னார்கள். அடுத்த சில தினங்களில் வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தார்கள். அவரது உடலுக்கு என்ன பிரச்னை என்று வெளிப்படையாக அறிவிக்காததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தமிழக அரசுக்குக் கடிதம்!

எனவே, ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்த தகவல்களை தெரிவிக்கக்கோரி, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பினேன். ஆனால், தமிழக அரசு உரிய பதில் அளிக்காமல் எனது கோரிக்கையை திருப்பி அனுப்பியது. எனவே மீண்டும் முதல்வரின் தனிச்செயலர், தலைமைச்செயலர் ஆகியோருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. இதனால் எனது சந்தேகம் வலுத்தது. அதற்கு வலுசேர்க்கும் விதமாகவே, மருத்துவமனைக்கு வந்த ஆளுநர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் யாரையும் ஜெயலலிதாவைச் சந்திக்க விடவில்லை என்று செய்திகள் வந்தன. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த, அதுவும் உடல்நிலை முற்றிலும் தேறிய‌ ஒருவருக்கு எப்படி திடீரென மாரடைப்பு வரும்? என்ற சந்தேகம் எழுந்தது. அடுத்த ஓரிரு நாட்களில் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று அறிவித்து விடுவார்கள் என சந்தேகித்தேன்.
உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம்
அதன்பேரில் ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே, அதாவது கடந்த 5ஆம் தேதி காலை 10 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச்செயலர், முதல்வரின் தனிச்செயலர் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் “ஜெயலலிதா இறந்தால் கட்டாயம் அவரது உடலை பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தேன். எனது கடிதத்தை பரிசீலிக்காமல் ஜெயலலிதா உடலை அவசர அவசரமாக மறுநாள் மாலையே அடக்கம் செய்துள்ள‌னர். ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோடானுகோடி மக்கள் வெளியூர்களில் இருந்து வந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்”.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பெங்களூருவைச் சேர்ந்த சமூக‌ செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி, கடந்த 36 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் பல்வேறு பொதுநல வழக்குகளை தொடுத்துள்ளார். கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் ஆடம்பர திருமணம் குறித்து இவர் புகார் அளித்த பிறகே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: