வெள்ளி, 2 அக்டோபர், 2020

சட்டமன்ற தேர்தலில் திமுக செலவுக்கு பணம் கொடுக்காது... . வேட்பாளர்களே சமாளித்து கொள்ளவேண்டும் .. முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி..

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லனில் வந்தது ”கடந்த சில வாரங்களாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள தீவிர மோதல்களை உற்று கவனித்து வருகிறது எதிர்க்கட்சியான திமுக. 8ஆம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்புகள், 18ஆம் தேதி செயற்குழு கூட்டத்தில் பழனிச்சாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே மூண்ட நேரடி மோதல், அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் மூன்று நாட்களாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாத நிலைமை இதையெல்லாம் திமுக தலைமை ஆர்வத்தோடும் அதேநேரம் எச்சரிக்கை உணர்வுடன் பார்க்கிறது. தலைமைச் செயலகத்தில் நடந்த கலெக்டர்கள் கூட்டம், மருத்துவ நிபுணர்கள் கூட்டம் ஆகியவற்றை 29ஆம் தேதி புறக்கணித்தார் பன்னீர்செல்வம். அதன்பின் 30ஆம் தேதி நடந்த சென்னை மாநகராட்சி நிகழ்ச்சியிலும் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. நேற்று அக்டோபர் 1ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது தலைமைச் செயலகத்திலேயே தனது அறையில் இருந்த பன்னீர்செல்வம் முதலமைச்சர் நடத்திய நிகழ்ச்சியை எட்டிப்பார்க்கவில்லை. ஒரு மணி நேரம் தலைமைச் செயலகத்தில் இருந்து விட்டுப் புறப்பட்டு விட்டார்.

இவ்வாறு பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் ஒருவர் முகத்தை ஒருவர் விழித்துக் கொள்வதையும் தவிர்க்கும் அளவுக்கு மோதல் முற்றியிருப்பதை பற்றி திமுக தலைமை கழகத்திலும் விவாதம் நடந்திருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் சில முக்கிய நிர்வாகிகளுடன் இது பற்றி ஆலோசித்திருக்கிறார். அப்போது... ‘அதிமுகவில் இந்தச் சண்டை இப்போது ஓயப் போவதில்லை. சசிகலா வந்தவுடன் தான் பிரச்சனை ஆரம்பம் ஆகும் என்று நினைத்தோம். ஆனால் அதற்குள்ளாகவே அதிமுகவில் பெரிய அளவு மோதல் ஏற்பட்டு விட்டது. எனவே இது திமுகவுக்கு தான் சாதகமாகும்.

இந்த நிலையில் நம் வெற்றி முன்பை விட எளிதாகவே கிடைக்கும். அதிமுக கட்சி யாரிடம் இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி எடுத்த சர்வே ஒன்று நம் கைக்கு வந்துள்ளது. அதன்படி தற்போதைய நிலைமையில் அதிமுக நிர்வாகிகள் 89% எடப்பாடி பழனிச்சாமியிடமும் 8% சசிகலா பக்கமும் 3% பன்னீர் பக்கமும் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது ‘ என திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளிடம் ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் திமுகவுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே வந்த ஸ்டாலின் அடுத்து கூறிய தகவல்கள் தான் திமுக தலைமை கழக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

’அதிமுக வரும் தேர்தலில் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது. உட்கட்சி மோதல் அங்கே கடுமையாக உள்ளது. அதேநேரம் திமுக பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் வெற்றி பெறுவோம் என்ற சூழல் உள்ளது.

ஏற்கனவே திமுகவில் நிதி நிலைமை மிகவும் சிக்கலாக இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நமது பல வேட்பாளர்களுக்கு நிதி உதவி செய்ய முடியாமல் தலைமை இருந்தது உங்களுக்கே தெரியும். அன்று தேர்தல் செலவுக்காக நாம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை. திமுகவுக்கு உதவ முன்வரும் தொழிலதிபர்களையும் மத்திய அரசு தடுத்து நிறுத்தி வருகிறது. எனவே வரும் சட்டமன்றத்தேர்தலில் தலைமை சார்பில் பணம் கொடுப்பது என்ற பேச்சு இல்லை. அவரவர்கள்தான் சமாளித்துக் கொள்ள வேண்டும்’ என்று ஸ்டாலின் சொல்லும் போது திமுக முக்கிய நிர்வாகிகள் அதிர்ந்துவிட்டனர்,

எடப்பாடி வரும் தேர்தலில் பணத்தை அள்ளி இறைக்கப் போகிறார், இந்த நிலையில் திமுக வெறுங்கையோடு தேர்தலை எதிர்கொள்ள முடியாது. அதனால தலைமையை நம்பிக்கிட்டு இருக்காதீங்க. உங்க செலவு உங்க கையிலதான் என்று தலைமைக் கழக நிர்வாகிகள் தங்களை சந்திக்கும் மாவட்டச் செயலாளர்களிடம் கூறி வருகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: