திங்கள், 28 செப்டம்பர், 2020

ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது... நடிகர் சத்யராஜ் மகள் திட்டவட்டம்.

Arsath Kan  - tamil.oneindia.com : சென்னை: ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் செப்டம்பர் 17-ம் தேதி பாஜக ரதயாத்திரை தொடங்கவிருப்பதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகிய நிலையில் அந்த ரத யாத்திரைக்கு அனுமதி தரக்கூடாது என குரல் கொடுத்தார் திவ்யா சத்யராஜ். இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்  அவர். 
அதில், மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உடல்நலம் மீதும் உயிரின் மீதும் இல்லாததது தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். 
கொரோனா நேரத்தில் ரத யாத்திரை நடந்தால் அது நோய் பரவலுக்கு வழி வகுக்கும் என்ற காரணத்தினால் அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அப்படி ஒரு எண்ணம் தமக்கு இல்லை எனவும் திவ்யா சத்யராஜ் தெரிவித்திருக்கிறார். 
அரசியலுக்கு வரும் திட்டத்தோடு செயல்பட்டு வரும் இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்துறையில் நடக்கும் பேரங்கள் மற்றும் மோசடிகள் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் மகிழ்மதி என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வரும் இவர் ஒரு தமிழ் மகளாக தமிழ்நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்பதே தனது லட்சியம் என அவரது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 
இதனிடையே ரத யாத்திரை நடத்துவதாக பாஜக தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது. இதனால் திவ்யா சத்யராஜின் இந்த திடீர் அறிக்கை பற்றி விளக்கம் அறிய அவரை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது, 'இப்போது வேண்டாமே உரிய நேரம் வரும், அப்போது இதுபற்றி விரிவாக பேசுகிறேன்' எனக் கூறினார்.


கருத்துகள் இல்லை: