சனி, 3 அக்டோபர், 2020

ஹத்ராஸ் செல்ல ராகுல் உள்ளிட்ட 5 பேருக்கு மட்டுமே அனுமதி- உ.பி. எல்லையில் காங்கிரசார் தடுத்து நிறுத்தம்

maalaimalaar : ஹத்ராஸ்:உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் ஹத்ராஸ் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களின் கிராமத்தை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை போலீசார் திருப்பி அனுப்பினர். ராகுல் காந்தி,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் ஆகியோரை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளினர். காவல்துறையின் இந்த செயலைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டனர். அவர்களுடன் காங்கிரஸ் எம்பிக்களும் ஹத்ராஸ் நோக்கி புறப்பட்டனர். காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டனர்.இதனால் டெல்லி-உ.பி. எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

ராகுல், பிரியங்கா, எம்பிக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் டெல்லி-நொய்டா பறக்கும் சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களுடன் வந்த எம்பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் ஹத்ராஸ் நோக்கி செல்ல அனுமதிக்கும்படி ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். 

ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், ராகுல் காந்தி மற்றும் 4 நிர்வாகிகள் மட்டும் ஹத்ராஸ் செல்ல நொய்டா போலீசார் அனுமதி அளித்தனர்

கருத்துகள் இல்லை: