திங்கள், 28 செப்டம்பர், 2020

உடுமலை நாராயண கவி நினைவு நாள் (செப்டம்பர் 25, 1899 - மே 23, 1981) பகுத்தறிவு கவிராயர்

dinamani : உடுமலைப் பேட்டை, பூளவாடியில் பிறந்த நாராயணசாமி பின்னாட்களில் தமிழ்த்திரையுலகின் ‘கவிராயர் நாராயணகவி’ யாக எண்ணற்ற பாடல்களை எழுதிக் குவித்தார். இளமையில் வறுமையில் உழன்று ஒவ்வொரு வாழ்வில் அடுத்து எடுத்து வைக்கவிருக்கும் ஒவ்வொரு அடிக்கும் தன் சகோதரரை நம்பி வாழ்ந்த ஒரு இளைஞர் ஆரம்பத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காக செய்தது தீப்பெட்டி வியாபாரம். அதில் அவருக்குக் கிடைத்தது நாளொன்றுக்கு 25 பைசா வருமானம். வீட்டில் வசதியற்ற காரணத்தால் நான்காம் வகுப்போடு பள்ளிப்படிப்பிற்கு முழுக்குப் போட்ட நாராயண கவி எழுதிக் குவித்தார் 650 க்கும் மேற்பட்ட கருத்துச் செறிவு மிகுந்த பாடல்களை.

நாராயணசாமியால் பள்ளிப் படிப்பைத் தான் தொடர முடியாமல் போனதே தவிர கிராமியக் கலைகளில் அவருக்கு ஆர்வம் அதிகம். கொங்கு மண்ணின் பாரம்பர்யக் கலைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டு ஊரில் நடக்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவின் ராமாயண நாடகத்தில் லக்குவன் வேடம் தரித்து நடிப்பார். அப்படியோர் சமயத்தில் தான் மதுரை சங்கர தாஸ் சுவாமிகளின் ஆப்த நண்பராக இருந்த சரபம் முத்துச்சாமிக் கவிராயரின் பார்வையில் நாராயணசாமி விழுந்தார். அன்று நாராயணசாமிக்கு வயது 12. அன்று முதல் முத்துச்சாமிக் கவிராயருடன் தொடங்கிய நாராயணசாமியின் கலைப்பயணம் அவரது 25 ஆம் வயது வரை நீடித்தது. முத்துச்சாமி கவிராயர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அவருடன் இணைந்து சென்று நாடகம் நடிப்பது, பாடல் எழுதுவது, பாடுவது என நாடகத் தொழிலின் அத்தனை நுட்பங்களையும் கற்றார்.

25 ஆம் வயதில் சொந்த ஊர் திரும்பிய நாராயணசாமி அங்கு ஒரு கதர்க்கடை துவங்கினார். அப்போது நாடு முழுவதும் சுதந்திர வேள்வித்தீ கொழுந்து விட்டுப் பற்றியெரிந்து கொண்டிருந்தது. நாராயணசாமி தமக்கே தமக்கான புரட்சிக்கனல் மிகுந்த விடுதலைக் கவிதைகளை இயற்றி அதை ஊர் ஊராகச் சென்று பாடி கதர்த்துணிகளை விற்றார். அச்சமயத்தில் அவருக்கும் பேச்சியம்மாளுக்கும் திருமணமும் ஆனது. தம்பதியினருக்கு நான்கு ஆண்மக்களும் பிறந்தனர். இச்சூழ்நிலையில் கதர்க்கடையில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் தொல்லையில் மாட்டிக் கொண்டார் கவி. தனது திறமையைக் கொண்டு சம்பாதித்து எப்படியாவது கடனை எல்லாம் திருப்பிச் செலுத்தும் வரை ஊர் மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று சூளுரைத்த நாராயணகவி கையில் வெறும் 100 ரூபாயுடன் மதுரை சங்கரதாஸ் சுவாமிகளைச் சென்றடைந்தார். அவரிடம் ஐயம் திரிபர யாப்பிலக்கணம் முழுதும் கற்றுத் தேர்ந்த கவி மதுரையில் பற்பல நாடக சபைகளில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். நாராயண கவியின் பாடல்கள் மற்றும் நாடக வசனங்களில் தேச பக்தி சுடர் விட்டுப் பிரகாசித்தது.

கடனை அடைக்காமல் ஊர் மண்ணில் கால் வைக்க  மாட்டேன் என்ற சபதத்தை, பின்னாட்களில் திரைப்படங்களில் பாட்டு எழுதத் தொடங்கி, கிராம போன் ரெக்கார்டுகளை வெளியிட்டுப் பொருளீட்டி அவற்றைக் கொண்டு ஊர் எல்லைக்கு வெளியில் நின்று கொண்டு கடனைச் செலுத்தி விட்டு பிறகே ஊருக்குள் கால் வைத்து தம் கடனை முடித்தார் உடுமலையார். அவரது வைராக்யம் அந்த அளவுக்கு செல்லுபடியாகக் காரணம் தாம் கொண்ட கொள்கையில் அவருக்கு இருந்த பிடிப்பு.

மதுரையில் இருந்த போது தான் டி.கே.எஸ் நாடகக் குழுவினர் மூலமாக கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனுடன், உடுமலை நாராயண கவிக்கு பரிச்சயம் ஏற்பட்டது. கலைவாணரது தொடர்பால் திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணாதுரை, கலைஞர் போன்றோரது நட்பும் பாவேந்தர் பாரதிதாசனின் அணுக்கமும் நாராயண கவிக்குக் கிட்டியது. 

தம் காலத்தில் சிறந்த விளங்கிய மற்றொரு பாடலாசிரியரான பாபநாசம் சிவனைக் காட்டிலும் அதிக அளவில் பாடல்களை எழுதிக் குவித்த பெருமை நாராயணகவிக்கு உண்டு. நாராயண கவி எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலங்களாக இருந்தன. புதிய உத்திகளைக் கையாண்ட நாராயணகவி, உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த கவிஞர், நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டார்.

‘கா…கா…கா…சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க -

ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க.

உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க என்றால்

தாப்பாளைப் போடுறாங்க பாருங்க…’ (பராசக்தி திரைப்படப்பாடல்)


‘அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ...
யாருமில்லா வேலையிலே இந்த வெட்கம் ஏனோ?...’ (காவேரி திரைப்படப் பாடல்)

‘தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே. (1952 ல் வெளிவந்த பராசக்தி திரைப்படப் பாடல்)’

‘சைக்கிள் வண்டி மேலே ஒரு தங்கநிறப் பொம்மை போலே நீ தனியாய்ச் செல்லலாமா?’ 

‘ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், கொண்டாட்டம்!
தேதி ஒன்னுல இருந்து சம்பளத் தேதி 
ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், கொண்டாட்டம்
இருபத்தொன்னுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்...
திண்டாட்டம் திண்டாட்டம்’

‘ என்று தான் திருந்துவதோ நன்றி கெட்ட ஆடவர் உலகம்...’

‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கனும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கனும்’ (விவசாயி திரைப்படப் பாடல்)

‘இன்னைக்கு காலையிலெழுந்திருச்சு கஞ்சித்தண்ணி இல்லாமே கஷ்டப்படுகுறேனே கடவுளே!
கொஞ்சம் கண்ணத் தொறந்து பாரேன் கடவுளே!
என்ன இப்பொறப்பு பொறக்க வச்சியே கடவுளே!’

‘மாலையிட்ட மங்கை யாரோ, என்ன பேரோ அந்த மானினியாள் எந்த ஊரோ!
உங்கள் மனம் நாடிய சுகமே தரும் அதி மேவிய வனிதாமணி’

‘கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி’ 

விடுதலை விடுதலை விடுதலை
அடிமை ஏழை என எவருமில்லை இனி விடுதலை!’

‘அன்பே கடவுளென்பது எதனாலே...
அதில் ஆன்மசக்தி இன்பம் இருப்பதாலே
சாத்திரங்கள் பொய்யென்பது எதனாலே...
ஏமாற்றுகிற வார்த்தைகளும் இருப்பதாலே
ஜாதி மதம் இல்லையென்பது எதனாலே
மனம் சமத்துவம் கொள்வதென்பது அதனாலே!

நாடு செழிக்க வேண்டும்
ஆமடி தங்கம்
நாகரீகம் ஆக வேண்டும்
ஆமடி தங்கம்
பாடிபட்டு வாழ வேண்டும்
ஆமடி தங்கம்
பசியாற உண்ண வேண்டும்
ஆமடி தங்கம்’

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது (இரத்தக் கண்ணீர் திரைப்படப் பாடல்)

இவையெல்லாம் உடுமலை நாராயண கவியின் பாடல்கள் தாம்.  அவரது சிறந்த 40 பாடல்களின் திரட்டு யூடியூபில் கிடைக்கிறது. அதற்கான காணொளி இணைப்பு இதோ... 

 

முதன்முறை கேட்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அனைத்துப் பாடல்களிலும் ஏதோ ஒரு சமூகப் பங்களிப்பு இருக்கிறது. வெற்று வார்த்தைகளின் குட்டைகளாக அவரது எந்தப் பாடல்களுமே இல்லை என்பது தான் உடுமலை நாராயணகவி பாடல்களின் தனிச்சிறப்பு.

நாராயண கவி தனது பாடல்களில் கிராமிய மணத்தை மட்டும் கொண்டு எழுதவில்லை தீவிரமான அரசியல் விமரிசனங்களைக்கூட போகிற போக்கில் கேட்பவர் மனதில் ஆழப் பதிகிற அளவில் நறுக்கென்று நெருஞ்சி முள் குத்தினாற் போல புகுத்தி எழுதினார். அவரது பாடல்கள் அனைத்திலும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சாமானிய மக்களுக்கும் சேர்த்து ஆயிரமாயிரம் படிப்பினைகள் இருந்தன. அதனால் தான் அவரது பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.

இன்றைப் போல ஒரு படத்திற்கு 7 அல்லது 8 பாடல்கள் மட்டுமே கொண்டவை அல்ல அந்தக்கால திரைப்படங்கள். 1934 ஆம் ஆண்டில் இந்தியாவில் பேசும் படங்கள் வரத் தொடங்கின. அப்போதெல்லாம் திரைப்படங்களில் பாடல்களே அதிகம் இருந்த காலகட்டம் அது. ஒரு திரைப்படத்தில் சுமார் 30 முதல் 50 பாடல்கள் வரையிலும் கூட இடம்பெறக் கூடும். அத்தனை திரைப்படங்களையும் ஒருவரே கூட எழுதுவார். அப்படிப்பட்ட திரைப்படப் பாடலாசியர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் நாராயண கவி.

கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. 'கலைமாமணி' என்னும் பட்டம் பெற்றார். தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.5.1981 இல் மறைந்தார்.இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

அண்ணாவின் கைவண்ணமான வேலைக்காரி, ஓர் இரவு முதல கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா முதற்கொண்டு ஆதிபராசக்தி, தேவதாஸ், தெய்வப்பிறவி வரை பல்வேறு விதமான திரைப்படங்களுக்கு உடுமலை நாராயணகவி பாடல்கள் எழுதியுள்ளார். அவரது பாடல்களை இப்போது கேட்டாலும் இன்றைய காலகட்டத்துக்கும் ஏற்றவை போன்றதான சமூகக் கருத்துக்களை உள்ளடக்கியதாகவே இருக்கின்றன. அவருடைய பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி நினைவு கூர்வது ஒன்றே நாராயண கவிக்கு நாம் செய்யக் கூடிய மிகச்சிறந்த மரியாதையாக இருக்கக் கூடும்.

antrukandamugam.wordpress.com : தமிழ்த் திரையுலகிலும், நாடக உலகிலும், இசையுலகிலும் மன்னராக விளங்கியவர் உடுமலை நாராயண கவிராயர். அந்த நாளில் தமது பாடல்களால் உடுமலைப்பேட்டைக்கு ஒரு தனி மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தவர். 25.9.1899 அன்று உடுமலைப்பேட்டை வட்டம், பூவினை வாடி (தற்போது பூளவாடி) கிராமத்தில் பிறந்தார். தந்தையார் கிருஷ்ணசாமி செட்டியார். தாயார் முத்தம்மாள். அற்புதமான சீர்திருத்தப் பாடல்களால் புகழ் பெற்ற இவர், ‘நாராயண கவி’ என்று பெயர் சூட்டிக் கொண்டு தான் கவிஞர் இனமென்று அடையாளம் வைத்தார்.

தமது 5 ஆவது வகுப்பு வரை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். 12 ஆவது வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய், தந்தையரின் இறப்பிற்குப் பின்னர் தமது உறவினர் வீட்டில் வளர்ந்தார். கைத்தொழில்கள் புரிந்தும், சிறு சிறு வியாபாரங்கள் செய்தும் பொருளீட்டினார். சிறு வயதிலேயே இசையார்வம் மிகக் கொண்ட கவிஞர், உடுமலை சரபமுத்துச்சாமிக் கவிராயர் ஆசிரியராக இருந்த ஆரிய கான சபையில் சேர்ந்து நாடகக் கலைஞராக விளங்கினார். அவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றதோடன்றி, அவரின் உதவியால் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக் கலையை முறையாகக் கற்றார்.

இந்த நேரத்தில் நாராயண கவிக்கு, பேச்சியம்மாளுடன் திருமணம் நடந்தது. போதிய வருமானம் இல்லாத நிலையில் வறுமைக்கு ஆளானது. ஒரு நாள் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் மதுரைக்குச் சென்றுவிட்டார். அங்கு மதுரையில் நாடகக் கலைஞர் எம்.எம்.சிதம்பரநாதன் அவர்களுடன் நாடகக் கலையில் தொடர்பு கொண்டார்.  அங்கு மதுரையில் இருந்த நாடகக் குழுக்களுக்கு மேடை நாடகப் பாடல்களை எழுதிக் கொடுத்தார். அவரது துணைவியார் குழந்தைகளுடன் மதுரை சென்று கவிராயரை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் கிராமஃபோன் கம்பெனியிலிருந்த நாராயண ஐயருடைய அறிமுகம் ஏற்பட்டது. நாராயண ஐயருடன் சென்னைக்குச் சென்றார். அவரின் உதவியினாலேயே கிராமஃபோன் இசைத்தட்டுக் கம்பெனிக்குப் பாடல்களை எழுதிக்கொடுக்கத் துவங்கினார். இவரின் கவித்திறமையைக் கண்ணுற்ற திரைப்பட இயக்குநர் ஏ.நாராயணன், இவரைத் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழிதிடச்செய்தார். அந்நாட்களில் தமிழ்த் திரைப்படங்கள் பல கல்கத்தாவிலேயே தயாரிக்கப்பட்டன. அந்த வகையில் கல்கத்தா சென்று ‘கிருஷ்ணன் தூது’ படத்திற்குப் பாடல்களை எழுதினார். இதேபோல் கல்கத்தா ராயல் டாக்கீஸ் தயாரிப்பான ‘தூக்கு தூக்கிக்கு’ கதை, வசனம், பாடல்களை எழுதினார். 1936 இல் பல நாடகங்களுக்கு இவருடைய பாடல்கள் சிறப்பைக் கொடுத்தன. பின்னர், ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’, ‘நல்ல தம்பி’, ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பிரபாவதி’, ‘காவேரி’, ‘சொர்க்கவாசல்’, ‘தூக்கு தூக்கி’, ‘தெய்வப்பிறவி’, மாங்கல்ய பாக்கியம், ‘சித்தி’, ‘எங்க வீட்டு மகாலட்சுமி’, ‘ரத்தக் கண்ணீர்’, ‘ஆதி பராசக்தி’, ‘தேவதாஸ்’ போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன் போன்றோர்களுக்கு பல தனிப் பாடல்களை எழுதிக்கொடுத்திருக்கிறார்.

மக்களிடையே இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவருடைய சீர்திருத்தக் கருத்துக்கள் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டின. தொடக்கத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயண கவிராயர், மகாகவி பாரதியாரின் நட்பிற்குப் பிறகு சமுதாயப் பாடல்களை எழுதத் துவங்கினார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு, நாராயண கவிராயர் ஆஸ்தான கவிஞரானார். கலைவாணருக்காக கவிஞர் எழுதிய ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் மிகவும் புகழ் பெற்றது.

மகாகவி பாரதியாருடைய நண்பர் வ.ரா., புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார், கவியோகி சுத்தானந்த பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் போன்றோர்களுடன் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தார். அவரது காலத்திலிருந்தே அனைத்து அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், கவிஞர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார்.

இயல்பாகவே இனிமையான சுபாவம் படைத்த கவிராயர், நேர்மையும், சொல் திறமையும் மிக்கவர். எவ்வகையிலும், தலை வணங்காத உறுதியுடையவர். பிறருக்கு என்ன உதவியாயினும், செய்யக்கூடியவர். அவருடைய சிறப்பான பாடல் திறத்திற்கு சில சான்றுகள்:

மாங்கல்ய பாக்கியம் படத்தில்

ஒன்றே மாந்தர்குலம் ஒருவனே கடவுள்

 

 

கதிர் நிலவன்   :  · சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி நினைவு நாள் 23.5.1981. முடை நாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைக் கொள்கைகளை நகைச்சுவையின் மூலம் துவைத்து எடுத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது பகுத்தறிவுப் பாடலுக்குப் பின்னே கவித்துவம் ஒன்று மறைந்தே முழக்கமிட்டது. அதன் சொந்தக்காரர் உடுமலை நாராயணகவி என்பது பலருக்கும் தெரியாது. அன்றைக்கு பகுத்தறிவுக் கொள்கையை வீரியத்தோடு பறைசாற்றிய கவிஞருள் முதன்மையானவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்றால் அதே சமகாலத்தில் வாழ்ந்த மற்றொருவர் கவிஞர் உடுமலை நாராயணகவி என்பதில் ஐயமில்லை. தமிழிசை உலகம், தமிழ் நாடக உலகம், தமிழ்த் திரையுலகம் ஆகிய மூன்று உலகத்திலும் கால்பதித்து கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்து தமிழர்களை எழுச்சி கொள்ளச் செய்தவரே உடுமலை நாராயணகவி.

இவர் 1899ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் நாளில் உடுமலைப் பேட்டை வட்டம் பூவிளையாடி (தற்போதைய பெயர் பூளவாடி) கிராமத்தில் கிருஷ்ணசாமி- முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்றார். தனது 12ஆம் வயதில் பெற்றோரை இழந்த நிலையில் கைத்தொழில், சிறு வியாபாரம் மூலமாகப் பிஞ்சு வயதிலேயே உழைப்பை அறிந்தார்.

நாராயணகவி வாலிப வயதை எட்டும் வரை வறுமைக்கு முகம் கொடுத்துக் கொண்டே தனது இசையார்வத்திற்கும் முகம் கொடுக்கலாயினார். சரபமுத்துச்சாமி கவிராயரிடம் மாணாக்கராக அறிமுகமாகி இசையின் ஊற்றுக் கண்ணை முழுவதும் கண்டு தேர்ச்சியடைந்தார். அத்தோடு அவரது ஆரியகானச் சபையில் சேர்ந்து நாடகக் கலையையும் கற்றுத் தெளிந்தார். அன்றிலிருந்து 'முத்துச்சாமி சீடன்' என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். அதன் பிறகு தனது குருவின் பரிந்துரையின் பேரில் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகளிடம் சேர்ந்து நாடகக் கலையின் பரிமாணங்களைத் தெரிந்து கொண்டார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களோடு பழக்கம் ஏற்பட்ட பிறகு அவரின் பெரும்பான்மையான படங்களுக்கு நாராயணகவி தான் சீர்திருத்தப் பாடல்களை எழுதினார். அவர் மூலமே திராவிட இயக்கத் தலைவர்களோடும் நெருக்கம் கொண்டார். அண்ணா எழுதிய 'நல்ல தம்பி' படத்திலே 'ரயிலே' எனத்தொடங்கும் கதாகாலட்சேபம் பாடலை எழுதி புகழின் உச்சிக்குச் சென்றார். அப்படத்தில் கலைவாணர் கிருஷ்ணன் அவர்கள் கிந்தனார் கதாகாலட்சேபம் நடத்துவார். கிந்தன் பள்ளிக்குச் செல்லும் போது தொடர்வண்டியைக் கண்டு பரவசமடைவான். ஐயரென்றும் பள்ளரென்றும் சாதி பார்க்காமல் அனைவரையும் சமமாக அமர்த்திக் கொண்டு புறப்படும் தொடர்வண்டியைப் பாடியவாறு சாதிச் சழக்கருக்கு சவுக்கடி கொடுப்பான்.

அதே போல், டாக்டர் சாவித்திரி படத்தில்,

"காசிக்குப் போன கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு-
இப்ப ஊசியப் போட்ட உண்டாகுமென்ற உண்மை தெரிஞ்சு போச்சு"

-பாடல் மூலம் மூடப் பழக்க வழக்கங்களை தகர்த்து எறிந்தார்.

தொடக்கத்தில் பாரதிதாசன் போலவே ஆன்மிகப்பாடல்களை எழுதி வந்த நாராயணகவியார் பாரதியாரின் தோழமை கிடைத்தவுடன் அவரைப் போலவே சமுதாய சீர்திருத்தப் பாடல்களை எழுதத் தொடங்கினார். சமூக கால மாறுதலுக்கேற்ப நாராயண கவியின் சிந்தனையிலும் சீர்திருத்தத் தாக்கம் வெளிக்கிளம்பின. இயக்குநர் நாராயணன் மூலமாக வெள்ளித் திரையில் மின்னத் தொடங்கிய நாராயண கவியார் இளங்கோவன் எழுதிய கண்ணகி, மகாமாயா, கிருஷ்ணபக்தி, ஓர் இரவு, நல்ல தம்பி, பராசக்தி, மனோகரா, சொர்க்க வாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, இரத்தக்கண்ணீர் ஆகிய எண்ணற்ற படங்களுக்கு பாடல்களை எழுதி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா முத்திரை பதித்தார்.

காதல், தத்துவம், சீர்திருத்தம், அரசியல் போன்ற பல்வேறு தளங்களில் பன்முகத் தன்மையை நாராயணகவி வெளிக்காட்டிய போதிலும் பெண்ணடிமைச் சிந்தனைக்கு ஆதரவாக இவர் பாடல் எழுதியது பலரையும் அதிர்ச்சியடைய வைக்கும்.

1954இல் வெளிவந்த 'தூக்குத் தூக்கி' படத்தில்,
பெண்களை நம்பாதே! கண்களே, பெண்களை நம்பாதே!
கண்டவரோடு கண்ணால் பேசிக் காமுறும் மாது இந்தப்பூமியின் கொண்ட கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள்!
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு

என்றும்,

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே!
மானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ?
பெண்கள் காரியத்தை ஆம்பிளை பார்க்கிறான் வீட்டுலே

என்றும்

வேறொரு படத்திலே ஆணாதிக்கக் கருத்தியலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். திரைப்படத்தின் கதைக்கேற்ப அமைக்கப்பட்ட பாடல் என்ற போதிலும் இது போன்ற பாடல்கள் அவரது முற்போக்கு எண்ணக் கடலில் விழுந்த நச்சு மழையென்றே கருதிடுவோம்!

தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தான் பிறந்த ஊருக்குச் சென்று மண்வாசம் புரிந்திட்ட நாராயணகவி 1981ஆம் ஆண்டில் தாய்மண்ணின் மடியிலே உயிர் துறந்தார். தன்னை ஈன்ற உடுமலை என்கிற தாயை மறக்காமல், தனது பெயருடன் இணைத்து தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்த இந்த மகா கவிஞனை இந்நாளில் நினைவு கூறுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்!

நன்றி - கதிர் நிலவன்

கருத்துகள் இல்லை: