வியாழன், 1 அக்டோபர், 2020

ராம கோபாலன் ஒரு வாய்ப்பு கிடைக்காத யோகி ஆதித்தனாத் .... அவ்வளவே!

Shalin Maria Lawrence : 1992 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் அம்மாவின் தங்கைக்கு இரட்டை குழந்தைகள் piranthana .திருவல்லிகேணியிலுள்ள கோஷா ஆஸ்பத்திரி என்றழைக்கப்பட்ட கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் அவர் பிரசவத்திற்காக .எங்களின் அம்மாச்சி ஊரில் இல்லாதா காரணத்தால் என் அம்மாவே சித்தியை உடனிருந்து பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .தினமும் காலையில் பத்து மணி அளவில் வீட்டிலிருந்து அம்மா கிளம்பி ஆஸ்பத்திரி சென்று விடுவார் ,மாலை ஐந்து மணிக்கு சரியாக விடு திரும்புவார் .நடுவில் ஒரு வெள்ளிக்கிழமை குழந்தைகளை காண என்னையும் அழைத்து சென்றார்.
சித்தியையும் குழந்தைகளையும் பார்த்து பேசிக்கொண்டு அங்கேயே விளையாடி கொண்டிருக்கும்போது மாலை வேலையில் திடிரென்று வெளியில் இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டது .உள்ளே இருக்கும் யாருக்கும் வெளியே ரோட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை .சிறுது நேரத்தில் உள்ளே சாறை சாரையாக மக்கள் உடலில் அடி,ரத்த காயங்களோடு ஆஸ்பத்திரியின் உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தனர் .அதில் இளைஞர்களும் ,வெள்ளையுடை ,தொப்பி அணிந்த சிறுவர்களும் அதிகம் இருந்தனர் .அவர்கள் அதே சாலையிலிருந்த பெரிய மசூதிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக வந்தவர்கள் என்பது ஒன்பது வயது சிறுமியான எனக்கு அப்பொழுது தெரியவில்லை .வெள்ளை உடைகள் எங்கும் ரத்த கறையால் நனைந்திருந்தன .சில குழந்தைகளும் இருந்தன.ஆஸ்பத்திரியின் உள்ளே மக்கள் ஓலமிட்டு கொண்டே ஓடி வந்தனர்.வெளியே சத்தம் இன்னும் அதிகமாகியது .உள்ளே இருக்கும் பெண்களும் பயத்தில் அழ ஆரம்பித்தனர் .
அந்த நேரத்தில் ஒருவகையான இருள் அங்கே கவ்வியது .அந்த இருள் அதுவரை தமிழ்நாட்டில் இல்லாத இருள் .
ஆஸ்பத்திரியின் இரும்பு வாயில் இழுத்து பூட்டப்பட்டது .வெளியில் இருந்து அடிபட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர் .ஆனால் வெளியேயே இருந்து சில கும்பல்கள் ஆஸ்பத்திரியின் உள்ளே அத்து மீறி நுழைய முயற்சி செய்து கொண்டே இருந்தனர் .அங்கே இருக்கும் பெண்கள் பயம் இன்னும் அதிகமாகி கூக்குரல் எழுப்பி கடவுளை கூப்பிட்டு கதறி அழுகை ஆரம்பித்தனர் .வெளியே மதக்கலவரம் நடப்பதாக செய்திகள் கசிந்தன .
அப்பொழுது வரை மதக்கலவரம் என்றால் என்ன வென்று எனக்கு தெரியாது.எம்மதமும் சம்மதம் என்கிற வாக்கியம் மட்டுமே தெரியும் .அதென்ன மத கலவரம் ?
சினிமாவில் ஹிந்து முஸ்லீம் கட்டி பிடித்து கொள்ளுவார்கள் .பாரத விலாஸ் படத்தில் உணர்ச்சி போங்க சிவாஜி பாடல் பாடி விட்டு ஹார்ட் அட்டாக்கில் விழுவார்,அது தெரியும் .சென்னையின் ஒண்டி குடித்தன வீட்டில் இஸ்லாமியர்களும் ,ஹிந்துக்களும் ,கிறிஸ்த்தவர்களும் ஒரே குடும்பமாகத்தான் பழகினோம் .யாரும் யாருக்கும் மனதளவிலும் தீங்கு நினைக்கவில்லை .யாரும் யாரையும் வேறாக நினைக்கவில்லை .
ஆனால் அந்த 1992 செப்டம்பர் மாத காட்சிகள் வேறாக இருந்தன .இதுவரை தமிழர்களுக்கு பழகாத காட்சிகள் .
சில மணி நேரங்கள் கழித்து ஆரவாரங்கள் ஓய்ந்து ஆஸ்பத்திரியின் கதவு போலீசால் திறக்கப்பட்டு உள்ளே தஞ்சம் புகுந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்படன்னர் .அம்மா கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு என்னை கூட்டி கொண்டு வீட்டிற்கு செல்ல ரோட்டிற்கு வந்தால் அங்கே மயான அமைதி நிலவியது .சாலை முழுவதும் கற்கள் ,பாட்டில் துண்டுகள் கட்டைகள் கிடந்தன .கடைகள் சேதப்படுத்த பட்டிருந்தன .அந்த பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பில் வந்திருந்தது .வீடு திரும்ப வண்டிகள் கிடைக்கவில்லை .ஒரு வித பதட்டத்துடன் அங்கேயே ஒரு இரண்டு அணி நேரம் கழித்து ஒரு ஆட்டோ வர,வீடு வந்தோம் .நகரம் இருண்டிருந்தது .என் அம்மாவின் முகத்தில் ஒரு அவநம்பிக்கை .தன வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை என்று அம்மா அப்பாவிடம் சொல்லி கொண்டிருந்தார் .அவரால் அந்த அதிர்ச்சியில் இருந்து சரியாக மீள முடியவில்லை .அதில் முக்கிய காரணம் அவரின் மதம்.
அப்பொழுதுதான் முதல் முறை அப்பா அந்த வார்த்தையை சொன்னார் .'ஹிந்து முன்னணி'.
ஆம் மறைந்த ராமகோபாலன் அவர்கள் தோற்றுவித்து அறங்காவலராக இருந்த 'விநாயகர் சதுர்த்தி மத்திய குழு' என்கிற அறக்கட்டளை முன்னெடுத்த விநாயகர் ஊர்வலத்தின் பொது நடத்தவைதான் மேலே சொன்ன சம்பவம் என்று அந்த வாரம் முழுவதும் பேசி கொண்டார்கள் .அதற்கு பின்பு இரண்டு மாதம் கழித்து பாபர் மசூதியை அத்வானி,வாஜிபாய் ,உமா பாரதி அண்ட் கோ இடிக்க,இந்தியா முழுக்க கலவரங்கள் வெடித்தன. அந்த மாதம் முழுவதும் என் பெற்றோர்கள் அந்த கலவரங்களை ,குறிப்பாக பம்பாய் கலவரத்தை பற்றி பேசி கொண்டே இருந்தார்கள் .எல்லா செய்திகளும் வீட்டில் விவாதிக்கப்பட்டன .நாங்கள் திருவல்லிக்கேணியில் பார்த்தது கிட்ட தட்ட இந்த பெரிய கலவரங்களுக்கான ஒத்திகைதான் .
ஒரு ஒன்பது வயது சிறுமிக்கு மத கலவரம் என்றால் என்னவென்று செய்முறையில் விளங்க வைத்த பெருமை திருவாளர் ராமகோபாலனையே சேரும் .ராமகோபாலன் அதைத்தான் விரும்பினார்.சிறுவர்களுக்கு பயத்தை காட்ட.சிறுபான்மையினருக்கு பயத்தை காட்ட .அந்த ஊர்வலம் பயத்தை காட்ட .
1996 ஆம் ஆண்டு தமிழக அரசு ஊர்வலம் செல்ல தடை விதித்தது அதற்க்கு முக்கிய காரணமாக அரசு தரப்பு சொல்லுகிறது "இந்த ஊர்வலங்கள் பதட்டத்தை அதிகரிக்கின்றன குறிப்பாக 92 ஆம் ஆண்டு ஊர்வலத்தின் போது ராமகோபாலனின் ஆட்கள் தொழுகை நடக்கும் மசூதிக்கு முன்பு பட்டாசு வெடித்தனர் ,சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பினார்கள் ,மற்றும் மசூதியின் முன்பு நின்று கொண்டு நகராமல் சாலை மறியலை ஏற்படுத்தினார்கள் .அங்கே இருந்த கடைகளை மூட சொல்லி பிரச்சனை செய்தார்கள் .இது போல் கடந்த ஐந்து வருடங்களாக செய்து கொண்டிருக்கிறார்கள் ".
இதற்கெல்லாம் தலைமை திருவாளர் வீரத்துறவி ராமகோபாலன் .
1992 பாபர் மசூதி சம்பவத்திற்கு பின்பு இந்தியாவின் அரசியல் மாறியது .அண்ணனும் தம்பியாக பழகியவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக திருப்பப்பட்டார்கள் .பிச்சை ஓட்டுகளுக்காக .அதில் இந்தியா முழுவதும் பலர் பங்காற்றி இருக்க .தமிழ்நாட்டில் மிலிட்டன்ட் ஹிந்துத்துவா என்று சொல்ல படுகிற தீவிரவாத வெறியை பரப்பியவர் ராமகோபாலன் .தமிழகத்திலில் ,குறிப்பாக கோவையில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு பின்னே இருந்த முக்கிய ஆள் ராமகோபாலன் .
பின்பு பாஜகவின் அரசியல் செயல்பாடுகளின் மாற்றங்களினாலும் ,முதுமை காரணங்களினாலும் பின்னுக்கு தள்ளப்பட்டாலும் ,ராமகோபாலன் கடைசிவரை தமிழக மக்களின் மத நல்லிணக்கத்திற்கு எதிராகவே இருந்தார் .இது வரை எந்த பிற்படுத்தப்பட்டோர் ,தலித் சமூக நலன்களுக்காக அவர் ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டதில்லை .ஒரு குறிப்பிட்ட சாதிய சமூகத்தின் நலன் மட்டுமே விரும்பினார் .தமிழகத்தின் அமைதியை குலத்தவர் அவர்.
இன்றும் அவர் பெயரை சொன்னாலே வெறுப்பை விட அச்சமே என்னை சூழுகிறது .ஆவர் இறந்த பின்பும் கூட .
சில வருடங்களுக்கு முன்பு தலித் சிறுமி அரியலூர் நந்தினி கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்டபோது ,ஹிந்து முன்னணியை சேர்ந்த அந்த கயவர்களுக்கு துணையாக இருந்தவர் ராமகோபாலன் .
லயோலா கல்லூரி ஓவிய கண்காட்சியில் இந்தியாவில் பாஜக சேயும் அராஜகத்தை விமர்சித்து போட்ட ஓவிய கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கல்லூரிக்கு எதிராக மக்களை தூண்டியவர் ராமகோபாலன் .
ராமகோபாலன் ஒரு வாய்ப்பு கிடைக்காத யோகி ஆதித்தனாத் .அவ்வளவே .
ராமகோலன் பற்றி தமிழகத்தில் இருக்கும் எந்த ஹிந்து வுக்கும் கவலை இல்லை .ஹிந்துக்களாக இருக்கும் சாமானிய மக்களுக்கு ராமகோபாலன் யார் என்று கூட தெரியாது .நான் தமிழத்தில் இருக்கும் ஹிந்து சகோதரர்களையும் ,ராமகோபாலனையும் சம்பந்தமே இல்லாத இரு இவ்விரு விஷயமாக தான் பார்க்கிறேன் .
அவர் இறந்துவிட்டார் .இரங்கல்கள் .அவர் குடும்பத்திற்கு

கருத்துகள் இல்லை: