திங்கள், 28 செப்டம்பர், 2020

முதலமைச்சர் ஆக்கியது யார்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்.. 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் -கே.பி.முனுசாமி தகவல்

 maalaimalar : அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர் செல்வம் இடையே முதல்வர் பதவி குறித்து வாக்குவாதம் நடந்துள்ளது.  அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது.கட்சியின் அவைத்தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளதால், சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே முதல்வர் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

>கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓ. பன்னீர் செல்வம், தற்போதைய ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன். என்னை முதல்வராக்கியது மறைந்த ஜெயலலிதா. ஆனால் உங்களை முதலமைச்சராக்கியது சசிகலா எனக் கூறியதாக தெரிகிறது.

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு பேரையும் முதல்வராக்கியது சசிகலாதான். எனது தலைமையிலான ஆட்சி (முதல்வராக) சிறப்பாக செயல்படவில்லையா? பிரதமர் மோடியே பாராட்டு உள்ளாரே.. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அடுத்த மாதம் 7-ந்தேதி யார் முதல்வர் வேட்பாளர் என்பது அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
 
 
சென்னை:

தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். கொரோனா பரவல் தீவிரமாக உள்ள போதிலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. 

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்படும் முதல்வர் வேட்பாளர் குறித்த விவகாரம் எழுந்தது. தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவிக்குமாறு ஒரு தரப்பினரும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர். ஓ.பி.எஸ், ஈபிஎஸ் இடையேயும் காரசாரமான விவாதம் நடந்துள்ளது.

இவ்வாறு சுமார் 5 மணி நேரம் வரை நீடித்த செயற்குழு கூட்டம் பிற்பகல் நிறைவு பெற்றது. முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.பி. முனுசாமி, 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்றார். வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவிப்பார்கள் என்றும் கே.பி.முனுசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை: