வியாழன், 14 நவம்பர், 2019

திருமாவளவனின் தேர்தல் அரசியலை பகுஜன் சமாஜ் தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

Satva T : கேள்வி: ஏன் அண்ணன் தொல் திருமாவின் தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளை பகுஜன் சமாஜ் தொண்டர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்?
பதில்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்து இன்றளவும் பகுஜன் சமாஜ் தொண்டர்கள் கடுமையான மொழியில் விமர்சனங்கள் செய்துவருகின்றனர். குறிப்பாக கடந்த நாடாளமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இடம் பெற்றது குறித்து மிகவும் கோபத்தோடு அவர்கள் வசைபாடலை தொடர்ந்து வருகின்றனர். ஓரிரண்டு சீட்டுகளுக்காக சிறுத்தைகள் திராவிட கட்சிகளிடம் சரணடைந்து விட்டதாக எழுதுகின்றனர்.
பொதுவாகவே மூன்றாம் தர மொழியில் எழுதுவதை வழக்கமாக வைத்து இருக்கும் அவர்கள் கர்ர், தூ, சொம்பு, முட்டு மாதிரி சொற்களை பயன்படுத்துவதன் மூலம் மேற்கொண்டு விவாதத்தை தொடர இயலாத வகையில் ஒரு வழிபாதையாக வாதம் செய்து வருகின்றனர்.
இது ஏன்? என்று ஆராய்வோமேயானால் கடந்த இரண்டு நாடாளமன்ற தேர்தல்களில் உத்திரபிரதேசத்தில் என்ன நடந்தது என்பதை அறிய வேண்டியுள்ளது. அங்கு 2014 தேர்தலில் 72/80 இடங்களிலும், 2019 ல் 63/80 இடங்களிலும் பி.ஜே.பி அபார வெற்றி பெற்றது. உத்திர பிரதேசம் எனும் ஒற்றை மாநிலத்தில் இவ்வாறு கணிசமான இடங்களை தக்க வைத்தது அவர்களுக்கு தனிப்பெரும்பாண்மை கிடைக்க வழிகோலியது. இவ்வாறு அதீத வெற்றி அவர்களுக்கு அங்கு கிடைக்க காரணம் அந்த மாநிலத்தில் 2014 ல் நான்கு முனை போட்டியும், 2019 ல் மூன்று முனை போட்டியும் நிலவியது. காங்கிரஸ், பி.ஜே.பி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி என்றபவை அவை.

இவ்வாறு, பி.ஜே.பியின் வெற்றிக்கு இந்த மூன்றாம் அணி மிகவும் ஏதுவாக அமைந்தது. ஆகவே இவ்வாறான மூன்றாவது / நான்காவது அணியை பிராமணிய ஊடகங்கள் ஊதிப்பெருக்குவதை வழக்கமாக வைத்துள்ளன. தேர்தல் இல்லாத சமயங்களில் எல்லாம் மாயாவதி அவர்களை ஒரு ஊடகமும் கண்டு கொள்ளாது. ஆனால் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு மாயாவதி தான் அடுத்த பிரதமர் என்று எழுதுவார்கள், பேசுவார்கள். மாயாவதி அவர்களின் காலுக்கு கீழே சுபாஷ் சந்திர மிஷ்ரா அமர்ந்திருப்பது போன்ற ஒரு பழைய விடியோ கிளிப்பை தொடர்ந்து ஒளிபரப்புவார்கள். இதன் மூலம் பகுஜன் தொண்டர்களிடையே ஒரு கிளர்வை உருவாக்கி, மூன்றாவது அல்லது நான்காவது அணி அமைவித்து அதன் மூலம் பி.ஜே.பிக்கு எதிராக வலுவான கூட்டணி ஏதும் அமைந்து விடாமல் தடுக்கப்படுகிறது.
இதனால் பகுஜன் தொண்டர்களும் அடுத்த பிரதமர் நாம் தான் என்று மூன்றாவது, நான்காவது என்று ஏழாவது அணிக்கு கூட ஒவ்வொரு முறையும் தயாராக உள்ளனர்.
கூடுதலாக தாங்கள் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பிக்கு மாற்று என்று ஏற்கனவே அறிவித்து விட்டதால் இவ்வாறான மூன்றாவது, நான்காவது அணி அமைவதில் அதன் மூலம் பி.ஜே.பி வெற்றி பெறுவதில் அவர்களுக்கு எந்த குற்றவுணர்வும் இருப்பதில்லை
மேற்கண்ட பகுஜன் சமாஜின் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாடு விசிக கடந்த தேர்தலில் எடுத்த நிலைப்பாடு ஆகும். விசிக + திமுக கூட்டணி அமைந்தது. தமிழகத்தில் 38/39 என்று திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதுவே பகுஜன் தொண்டர்களை கோபமடைய செய்துவிட்டது. கடந்த இரண்டு தேர்தல்களில் நாங்கள் மூன்றாவது, நான்காவது அணி அமைத்து பி.ஜே.பியின் வெற்றிக்கு சாதகமான களத்தை உருவாக்கி தந்து இருக்கிறோம். ஆனால் இங்கு திருமா அவ்வாறு ஒரு வாய்ப்பை வழங்காமல் கூட்டணி அமைத்துவிட்டார் என்பதே அவர்களின் நியாயமான கோபம் ஆகும்.
இதன் காரணமாகவே பி.ஜே.பியின் தலைமை முதல் கடைகோடி தொண்டர்கள் வரை யாரும் மாயாவதி அவர்களையோ அல்லது பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைப்பாட்டையோ எப்போதும் விமர்சிப்பதில்லை. மோடி, அமிட்ஷா வை விடுங்கள், பேஸ்புக்கில் எழுதும் அடிப்படை பி.ஜே.பி தொண்டர் கூட பகுஜன் சமாஜ்'ஐ விமர்சனம் செய்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு கோபம் வருமளவு எப்போதும் இவர்கள் நடந்து கொண்டதில்லை.
குறிப்பு: தலித் மக்கள் தனியாக கட்சி நடத்துவதை விமர்சிக்கும் பதிவு அல்ல இது. மாறாக இது நூறு சதவீதம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு பற்றிய பதிவு. இது தலித்துகளுக்கு எதிரான பதிவு என்று யாரும் வந்து அறிவீனமாக உளற வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: