வியாழன், 14 நவம்பர், 2019

மு.க.அழகிரி : தமிழக அரசியலில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்:

வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.க.அழகிரிமின்னம்பலம் : தலைமைக்கான வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
‘தமிழக அரசியலில் சரியான தலைமைக்கான வெற்றிடம் இன்னும் உள்ளது’ என்று நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேட்டியளித்தது விவாதத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என அதிமுகவும், வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாட்களாகிவிட்டதாக திமுகவும் ரஜினிக்கு பதிலளித்தனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 14) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ரஜினி கூறியது போல தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான். அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்பிவிடுவார்” என்று பதிலளித்தார். ரஜினி கட்சி தொடங்கினால் அதில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அதுகுறித்து தற்போது கூற முடியாது என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவில் சேர எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அதன் காரணமாக அண்மைக் காலமாக அமைதியாகவே இருந்துவருகிறார். மேலும், ரஜினிகாந்துடனும் அழகிரி நல்ல நட்பில் இருக்கிறார். இந்த நிலையில்தான் இவ்வாறான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார் அழகிரி. ஏற்கனவே நேற்று காரைக்குடியில் ஹெச்.ராஜாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரியிடம், திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவரோ, “நான் திமுகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. அப்படியிருக்கும்போது அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்று கோபத்துடன் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்த நிலையில், அவற்றிற்குப் பதிலளிக்காமல் கிளம்பினார்.

கருத்துகள் இல்லை: