புதன், 13 நவம்பர், 2019

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை: சிக்கிய ஆதாரம் - பேராசிரியர்களிடம் விசாரணை!

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை: சிக்கிய ஆதாரம் - பேராசிரியர்களிடம் விசாரணை!
மின்னம்பலம் : சென்னை ஐஐடியில் எம்.ஏ.முதலாம் ஆண்டு ஹுமானிட்டீஸ் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீப்(19) கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் தனது மொபைலில் குறிப்பு எழுதி வைத்துள்ளார். அதில் தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அவரது மரணம் குறித்த தமிழக போலீசார் விசாரணையைக் கேரள அரசு மேற்பார்வையிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயனுக்கு அனுப்பிய மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப். அதுபோன்று மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு பிரதமருக்கும் மனு ஒன்று அனுப்பியுள்ளார்.


ஃபாத்திமா புத்திசாலித்தனமான மாணவி, வகுப்பில் முதலிடம் வருபவர் என்று அவரது பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மாணவியின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரிய வராத நிலையில், போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்
இந்நிலையில் ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் பிரதமருக்கு எழுதிய மனுவில், ’தன்னுடைய மரணத்துபாத்திமா தனது செல்போனில் நோட்ஸ் எழுதி வைத்திருந்தார்’ என்று குறிப்க்கு இவர்தான் காரணம் என்று ஒரு பேராசிரியர் பெயரை குறிப்பிட்டு ஃபிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த மொபைல் காவல் துறையினரிடம் இருக்கிறது.

(((உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்)))
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் துறைத் தலைவர் உமாகாந்த் தாஸ் கூறுகையில், மாணவி ஏன், எப்படி உயிரிழந்தார் என்பதற்கு இன்னும் துப்பு துலங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
”இந்த மரணத்தில் ஒரு மர்மம் இருக்கிறது. ஃபாத்திமா எப்போதும் அந்த பேராசிரியர் குறித்து எங்களிடம் சொல்லுவார். அவர் எப்போதும் மாணவர்களை அழ வைப்பார் என்றும் தினசரி 9 மணியளவில் மெஸ்ஸில் உட்கார்ந்து அழுவேன் என்றும் சொல்லுவார். இதனால் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய வேண்டும்” என்று அப்துல் லத்தீப் வலியுறுத்தியுள்ளார். ”என் மகள் பேராசிரியரிடமிருந்து சாதி மற்றும் மத ரீதியான பாகுபாட்டை எதிர்கொண்டிருக்கிறாள். முன்னதாக அவர் தனது பெயரே (முஸ்லீம் பெயர்) ஒரு பிரச்சினை என்று கூறுவார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் இறப்பை அடுத்து அவரது துறை வகுப்புகள் 45 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டதாகவும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அவரது தந்தை கூறும் நிலையில் இதற்கு துறைத் தலைவர் உமாகாந்த் தாஸ் மறுப்புத் தெரிவித்துள்ளார். வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்,
”குற்றம்சாட்டப்படும் பேராசிரியர் கடந்த வாரம் தான் இம்மாணவர்களின் இண்டெர்னல் தேர்வு விடைத்தாள்களை கொடுத்துள்ளார். அனைத்து தேர்வுகளிலும் முதலிடம் பிடித்த ஃபாத்திமா இவரது பாடத்தில் இரண்டாம் இடம் பிடித்தார். இதற்காகவா அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்” என்று கூறும் துறைத் தலைவர், ஃபாத்திமாவின் நண்பர்களிடம் விசாரித்ததிலும் அவரது மரணத்துக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை என்றும் கூறியுள்ளார்
தி நியூஸ் மினிட் ஊடகத்துக்கு அப்துல் லத்தீப் அளித்த பேட்டியில், ”ஃபாத்திமா மொபைலை எனது மகள் ஆயிஷா ஆன் செய்தார். மொபைல் திரையில் தனது மரணத்துக்கு ஒரு பேராசிரியர்தான் பொறுப்பு என்று குறிப்பிட்டிருந்ததாகவும், மற்றொரு குறிப்பில் வேறு இரு பேராசிரியர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும்” தெரிவித்துள்ளார். மேலும், ”கடந்த 28 நாட்களாக எனது மகள் அவரது துறையால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கான பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும், இதற்குக் காரணமானவர்களை நீதிக்கு முன் நிறுத்த என் இறுதி மூச்சு வரை போராடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஃபாத்திமாவின் சகோதரி ஆயிஷா கூறுகையில், ”விசாரணை அறிக்கை தயாரிப்பதற்காக எனது குடும்பத்தினரைக் காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். அங்கு ஃபாத்திமாவின் மொபைல் இருந்ததைப் பார்த்தேன். அதை அவர்கள் ஸ்விட்ச் ஆன் கூட செய்யாமல் வைத்திருந்தனர். அதை எடுத்து ஆன் செய்ததில், ஸ்க்ரீன் சேவரில் இருந்த அந்த குறிப்பைப் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்,
கோட்டூர்புரம் உதவி ஆணையர் கே.என்.சுதர்சன் கூறுகையில், ’விசாரணை நடைபெற்று வருகிறது. 11 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 174ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரிடமும் விசாரிக்கப்படும்” என்றுள்ளார்.
சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் விசாரிக்கப்படுமா என்ற கேள்விக்கு அனைத்து தரப்பினரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார். தடயவியல் பரிசோதனைக்கு தொலைபேசி அனுப்பப்பட்டதால், காவல்துறையினர் அந்த தற்கொலைக் குறிப்பை ஆய்வு செய்யவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். 3 பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

மாணவியின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “தனது துறையில் இணைப் பேராசிரியராக உள்ள சுதர்சன் பத்மனாபன் தான் தனது மரணத்திற்குக் காரணம் என்று பாத்திமா தனது தற்கொலைக் குறிப்பை கைப்பேசியில் பதிவிட்டுள்ளார். மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் என்னிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து கொள்ளும் வகையில் அவர் கோழையாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.
சாதிரீதியான மதரீதியான பாரபட்சத்தைப் பேராசிரியர் தரப்பில் பாத்திமா எதிர்கொண்டார் என்றும் தனது பெயர் முஸ்லிமாக இருந்ததே அங்கு பிரச்சினையாக இருப்பதாகத் தனது மகள் குறிப்பிட்டதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு தேர்விலும் ஒரு முஸ்லிம் மாணவி முதலிடம் பெறுவது அங்குள்ள பலருக்கும் ஒரு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் அப்துல் லத்தீப் குற்றம்சாட்டியுள்ளார். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் எடுக்கும் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்டதையும் அதனை துறைத் தலைவரிடம் அவர் புகார் அளித்து திருத்தப்பட்டதையும் அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளவர், மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு, அவரது மரணத்திற்குக் காரணமான சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இன்று மாலையில் கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஐஐடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் கோட்டூர்புரம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: