வியாழன், 14 நவம்பர், 2019

உள்ளாட்சி: திமுக கூட்டணியில் காங்கிரசின் 30 வீத இடங்களை கேட்க வேண்டுமாம் ...உரிமைக் குரல்!

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சி: திமுக கூட்டணியில் காங்கிரசின் உரிமைக் குரல்!மின்னம்பலம : மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட தேர்தல் பணிகளைத் தொடங்கி பாதி கடந்து விட்டார்கள். திமுக கூட்டணியில் திமுக பொதுக்குழுவுக்கு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னால் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.
நவம்பர் 11 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’இடைத்தேர்தல் தோல்விக்காக ரெண்டு கமிட்டி போட்டு அறிக்கை வாங்கி வச்சிருக்கேன். சம்பந்தப்பட்டவங்க எவ்வளவு பெரியவங்களா இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். அதேபோல உள்ளாட்சித் தேர்தலுக்கும் கமிட்டி போட வச்சிடமாட்டீங்கனு நம்பிக்கை இருக்கு. வர்ற உள்ளாட்சித் தேர்தல்ல ஆளுங்கட்சி அத்தனை பலத்தையும் பயன்படுத்தும். அதையெல்லாம் மீறி நாம் 50% இடத்துல ஜெயிச்சாலே பெரிய வெற்றிதான். அதனால அதையே இலக்காக நாம வச்சி வேலை பார்க்கக் கூடாது. கடுமையாக பணியாற்றுங்க’என்று கூறியிருக்கிறார். அப்போது சில மாவட்டச் செயலாளர்கள், கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன ஒதுக்கீடு என்று கேட்டிருக்கிறார்கள். விரைவில் முடிவு செய்வோம் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இதன் பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன் போன்றோர் ஸ்டாலினை சந்தித்தார்கள். பொதுக்குழுத் தீர்மானத்துக்கு பாராட்டு தெரிவிக்க வந்ததாகச் சொன்னாலும் உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு என்ன பங்கு என்ற முதற்கட்ட ஆலோசனைக்காகவே அவர்கள் ஸ்டாலினை சந்தித்தார்கள்.
எப்போதுமே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதில் முக்கியப் பங்கு இருக்கும். சில மாதங்களுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அப்போதைய தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், ‘உள்ளாட்சியில திமுககிட்ட உரிய பங்கை நாம வாங்கணும். இல்லேன்னா காங்கிரஸ் தனித்து நின்னாலே தனிப்பட்ட செல்வாக்கு உள்ள இடங்கள்ல நாம ஜெயிக்க முடியும்’என்றெல்லாம் பேசினார். இது சர்ச்சையாகி பின்னர் காங்கிரஸில் இருந்தே கராத்தே நீக்கப்பட்டிருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு என்ன பங்கு என்ற கேள்வி காங்கிரஸாரிடம் எழுந்திருக்கிறது. கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியின் உத்தரவுப்படி சத்தியமூர்த்தி பவனில் அழகிரிக்கு நெருக்கமான மாவட்டத் தலைவர்கள் சிலர் முகாமிட்டு, காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகள் என்னென்ன என்ற பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
‘உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 30% இடங்கள் கேட்க வேண்டுமென்பது தலைவரின் திட்டம். அதற்கேற்ற வகையில்தான் தமிழகம் பூராவும் காங்கிரஸ் வலுவாக இருக்கும் ஏரியாக்களின் பட்டியலை தயார் செய்துகொண்டிருக்கிறார். மேயர் முதல் அனைத்து பதவிகளிலும் காங்கிரஸுக்கு 30% வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் தற்போதைய உத்தேச டிமாண்ட். இதுபற்றி இரு கட்சிகளின் தலைவர்களும் பேசும்போதுதான் மேலதிக விவரங்கள் தெரியவரும்’ என்கிறார்கள் சத்தியமூர்த்திபவனில் இருக்கும் அழகிரியின் நிழல் போன்றவர்கள்.
இதற்கிடையேதான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவிடம் பேசியிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, ’நானும், திமுக தலைவர் ஸ்டாலினும் பிசிராந்தையாரும் கோப்பெரும் சோழனும் போன்றவர்கள். இருவரும் பார்க்காமலேயே பேசிக்கொள்வோம். வரும் 17ஆம் தேதி கட்சியினருடனான கூட்டத்திற்குப் பிறகு பேசுவோம்’ என்று பதிலளித்திருக்கிறார் அழகிரி. 17 ஆம் தேதி கூட்டத்தில் 30% என்ற காங்கிரஸின் உரிமைக் குரல் ஒலிக்கக் கூடும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: