சனி, 16 நவம்பர், 2019

இஸ்லாமிய சமூக பெண்கள் படிப்புக்காக வெளியே வருவதை பிடிக்காதவர்கள் .. ....


M.m. Abdulla : இஸ்லாமிய சமூகத்தில் இருந்து மிகச் சமீபகாலமாகத்தான் பெண் குழந்தைகள் படிப்பதற்கு வெளியில் வருகிறார்கள்.
வயதுக்கு வரும் வரை பள்ளிக்கல்வி..பிறகு சராசரியாக 16 வயதில் திருமணம். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.
என் மனைவியையே திருமணமான பிறகு நான் தான் ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு அனுப்பினேன்! என் வீட்டிலேயே இதுதான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த நிலை!!
வீட்டுச் சுவர்களின் பின்னும், பர்தாவின் உள்ளேயேயும் மறைந்திருந்த சிறுபான்மைச் சமூகப் பெண்கள் பரவலாக மெல்ல வெளியில் தலை காட்டத் துவங்கி இருப்பது தற்போதுதான்!! இதற்கே எத்தனை தூரம் சொந்த சமூக ஆண்களின் எதிர்ப்பை கடக்க வேண்டி இருக்கும் கொடுமையை அவர்கள் மட்டுமே அறிவார்கள்!!
உள்ளிருந்து தங்கள் சமூகத் தொடர்பில் மட்டுமே வாழ்ந்து வந்த அவர்களுக்கு புறச் சமூகம் குறித்த புரிதலோ சாதிய மதவாத அழுத்தங்களோ அவர்களுக்கு அறவே புரியாது!!
ஒரு விசயம் நடக்கும் போது இதற்குக் காரணம் இதுதான் என்பதை உணரும் அளவிற்கு இன்னும் அவர்களிடம் தெளிவு இல்லை. புரிந்து கொள்ளவும், எதிர்த்து நிற்கவும் இன்னும் சில பத்தாண்டுகள் ஆகும்.
ஆதிக்க சமூகங்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒரே செய்திதான்... இந்த உலகம் மிகப் பெரியது. அனைவருக்குமான இடம் அனைவருக்கும் இருக்கிறது! தன் சொந்த சமூக ஆண்களின் எதிர்பின் ஊடே வெளியில் வரும் அந்தப் பெண்களும் ஒரு ஓரமாக இருந்துவிட்டு போகட்டும். பாவம் விட்டுவிடுங்கள்.

கருத்துகள் இல்லை: