வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ஜெயலலிதா கைதும் சிதம்பரம் கைதும் ஒரு ஒப்பீடு .....

LR Jagadheesan : ”சிதம்பரம் கைது என்பது ஜெயலலிதாவை கருணாநிதி கைது செய்ததைப்போன்றது” என்று உளற ஆரம்பித்திருக்கும் அரசியல்
அரைவேக்காடுகளுக்கு ஒரு சின்ன நினைவூட்டல்.
ஜெயலலிதா கைது என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் அன்றைய நீதிபதி சிவப்பாவின் பகிரங்க வற்புறுத்தலால் நடந்த செயல். அதுவும் தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைகளில் ஒத்துழைக்க மறுத்த ஜெயலலிதாவும் சசிகலாவும் இந்தியாவில் எங்குமே தங்களை கைதுசெய்யக்கூடாது என்று ஒட்டுமொத்தமாக தடைபிறப்பிக்கும்படி தலைக்கனத்தோடு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக, அவர்கள் மீதான குற்றப்புகார்கள் மற்றும் ஊழல் பட்டியலை பார்த்து அதிர்ந்துபோன நீதிபதி சிவப்பா இவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று நீதிமன்றத்திலேயே தமிழக அரசையும் தமிழக காவல்துறையையும் பகிரங்கமாக திட்டியபின் மறுநாள் பட்டப்பகலில் முறையாக முன் அறிவிப்பு கொடுத்து, ஜெயலலிதா காலை நேர பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு தானாக வரும்வரை காத்திருந்து அவரை கைது செய்தது காவல்துறை. சிறைக்குள் சகல வசதிகளும் செய்யப்பட்டன.

இப்படி தன் கைதுக்கு முதன்மைக் காரணமானவரை பழிவாங்கத்தான் வாஜ்பாயி ஆட்சி அமைத்ததும் முதல் வேலையாக நீதிபதி சிவப்பாவை சில்லறைத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நிலையில் பாதியிலேயே டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கனுப்பினார் ஜெயலலிதா. இது தான் நடந்த வரலாறு. இது எதுவும் தெரியாமல் எடுத்தமேனிக்கு ஜெயலலிதாவை கைதுசெய்த கருணாநிதி என்று பொத்தாம் பொதுவாக சொல்வது போக்கிரித்தனம்.
நடந்துகொண்டிருப்பது ஊழல் ஒழிப்புமல்ல; சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட சட்டரீதியான நடவடிக்கையும் அல்ல; தன்னை முன்பு கைது செய்தவரை இப்போது தான் கைது செய்து துன்புறுத்தி அவமதிக்க விரும்பும் அருவெறுப்பான அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்.
சட்டப்படி நடத்தப்படவேண்டிய ஒரு வழக்கை முழுக்க முழுக்க தன் தனிப்பட்ட பழிவாங்கலுக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஆட்சியாளர்களின் அகங்காரம் மற்றும் ஆணவத்தின் வெளிப்பாடு.
அதை கண்டிப்பதை விட்டுவிட்டு கருணாநிதி ஜெயலலிதாவை கைது செய்ததைப்போன்ற நடவடிக்கை என்பது பசப்புவாதம். இது கலைஞரை காட்டி அமித்ஷாவை நியாயப்படுத்துவதில் தான் போய் முடியும். அது பச்சை அயோக்கியத்தனம்

கருத்துகள் இல்லை: