சனி, 24 ஆகஸ்ட், 2019

சென்னை 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய என்ஜினீயர் கைது

maalaimalar.com : வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த சென்னை என்ஜினீயரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். சென்னை: சென்னையில் உள்ள புகழ்பெற்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ராஜ்செழியன் என்ற பிரதீப்.
இவரது மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பிரதீப் இரவு நேர பணிக்கு சென்று விட்டு காலையில்தான் வீடு திரும்புவார்.
ஆனால் பிரதீப்பின் மனைவி காலையில் பணிக்கு சென்று விட்டு மாலையில்தான் வீடு திரும்புவார். இதனால் பகலில் பெரும்பாலும் பிரதீப் வீட்டில் தனிமையில்தான் இருப்பார்.
அப்போது பொழுது போக்காக பெண்களின் தொலைபேசி எண்களை சேகரிக்க தொடங்கினார். தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து அவர் இந்த தொலைபேசி எண்களை சேகரித்து வந்தார். அந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெண்களிடம் பேசி வந்தார்.
நாளடைவில் வேலை தேடிக்கொண்டிருக்கும் அழகான பெண்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிக்க முடிவு செய்தார். அவரது இந்த திட்டத்துக்கு அவரது பெண் தோழிகளில் ஒருவரான அர்ச்சனா ஜெகதீஸ் என்பவர் உதவி செய்தார்.
முதலில் அர்ச்சனா வேலை தேடும் பெண்களிடம் போன் செய்து 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் முன் அறையில் அமர்ந்து பணிபுரிய அழகான பெண்கள் தேவைப்படுகிறது. லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும். நீங்கள் அந்த வேலைக்கு வர விரும்புகிறீர்களா? என்று துண்டில் போடுவார்.

அர்ச்சனாவின் பேச்சில் மயங்கும் பெண்களிடம் பிரதீப் மற்றொரு தொலைபேசியில் இருந்து பேசுவார். இன்டர்வியூ செய்வது போல நிறைய கேள்விகள் கேட்பார். பிறகு இன்னொரு தடவை இன்டர்வியூ நடத்தப்படும் என்று சொல்வார்.
சில தினங்கள் கழித்து வேறு ஒரு போனில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு மூலம் அந்த பெண்ணிடம் பிரதீப் தொடர்பு கொள்வார். அந்த பெண்ணை வாட்ஸ்அப்பில் பார்த்துக்கொண்டே மீண்டும் இன்டர்வியூ செய்வதாக தெரிவித்தார்.
நட்சத்திர ஓட்டலில் முன் அறையில் அமர்ந்து பணிபுரிய வேண்டும் என்பதால் அழகான உடல் அமைப்புடன் இருக்க வேண்டும் என்பார். உங்களுக்கு அத்தகைய உடல் அமைப்பு இருக்கிறதா? என்பதை அறிய நிர்வாண படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள் என்று தெரிவிப்பார்.
பிரதீப்பின் இந்த வக்கிரத்தை அறியாத பல பெண்கள் தங்களது நிர்வாண படத்தை அவரது வாட்ஸ்அப்புக்கு அனுப்பி உள்ளனர்.
அந்த நிர்வாண படங்களை ரசித்து பார்த்து விட்டு அந்த பெண்களுடன் மீண்டும் பிரதீப் தொடர்பு கொள்வார். உங்களை 5 நட்சத்திர ஓட்டலில் முன் அறை பணிக்கு தேர்வு செய்து இருக்கிறோம் என்று சொல்வார்.
அதில் மகிழ்ச்சி அடைந்து உடனே வேலைக்கு வர தயாராகும் பெண்களிடம் உங்களது உடல் அமைப்பு மிக முக்கியம். எனவே ஆடைகளை களைந்து காட்டுங்கள் என்று சொல்வாராம். அதையும் ஏற்று சில பெண்கள் அப்படி செய்துள்ளனர்.
அப்படி ஆடைகளை களைந்து காட்டிய பெண்கள் வீடியோ காட்சியை நூதன முறையில் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து கொள்வார். இது அந்த பெண்களுக்கே தெரியாது. சில தினங்கள் கழித்து அந்த பெண்களிடம் பிரதீப் தொடர்பு கொள்வார்.
நீங்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக தோன்றிய வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அதை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்று மிரட்டி பணிய வைப்பார்.
அந்த வகையில் அவர் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பகல் நேரம் முழுவதும் பெண்களிடம் தொடர்பு கொண்டு இதே வேலையை பிரதீப் செய்து வந்ததால் 16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600 பெண்கள் அவரது வலையில் விழுந்ததாக தெரிகிறது. அவர்களில் பெரும்பாலானவர்களிடம் பிரதீப் ஆபாச படங்களை கேட்டு வாங்கியதாக தெரிகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமும் பிரதீப் இப்படி தன் கைவரிசையை காட்டி இருக்கிறார். அந்த பெண்ணுக்கு பிரதீப் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து உண்மையிலேயே பிரதீப் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறாரா? என்பதை ஆய்வு செய்தார். அப்போது பிரதீப் பற்றிய குட்டு அம்பலமானது.
பிரதீப் போலி நிறுவனம் நடத்தி பெண்களிடம் ஆபாச படங்களை வாட்ஸ்அப்பில் பெற்று ஏமாற்றுவது ஆந்திரா பெண்ணுக்கு தெரிய வந்தது. அவர் ஐதராபாத் போலீசில் இதுபற்றி புகார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஐதராபாத் போலீசார் சென்னை வந்து பிரதீப்பை கைது செய்தனர். அவர் வைத்திருந்த கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐதராபாத் போலீஸ் தீவிர விசாரணையில் பிரதீப் சுமார் 600 பெண்களை மிரட்டியது தெரிய வந்தது.
வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பல பெண்கள் தங்களது உடல் அமைப்பு கொண்ட அரைகுறை ஆபாச படங்களை பிரதீப்புக்கு அனுப்பி உள்ளனர். அந்த ஆபாச படங்களை அவர் தனியாக ஒரு கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்துள்ளார்.
அந்த கம்ப்யூட்டரையும் ஐதராபாத் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தவிர 16 மாநிலங்களில் அதிகளவு எந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் பிரதீப்பிடம் ஏமாந்துள்ளனர் என்றும் விசாரணை நடந்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள்தான் பிரதீப்பிடம் அதிகளவு ஏமாந்துள்ளனர். ஐதராபாத் போலீசார் பிரதீப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

கருத்துகள் இல்லை: