சனி, 24 ஆகஸ்ட், 2019

பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?

பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்? மின்னம்பலம:  கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சோழவல்லியைச் சேர்ந்த ரங்கேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விசிகவில் இருந்து விலகி இருந்தவரை தூண்டில் போட்டு இழுத்த பாஜக, அவருக்கு இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவியையும் வழங்கியிருக்கிறது. கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்த ரங்கேஷ், தற்போது ஆர்எஸ்எஸ்ஸில் தொடர்புகளை உருவாக்கிக்கொண்டு, பாஜகவுக்காகத் தீவிரமாக உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறார்.
விசிகவின் கோட்டை என்று அக்கட்சியினரால் அழைக்கப்படும் நெல்லிக்குப்பத்தில், ரங்கேஷ் தனது குழந்தைகளுக்குக் காதணி விழா ஏற்பாடு செய்து, அதற்காக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்திருந்தார். அதன்படி, கடந்த 18ஆம் தேதி நடந்த காதணி விழாவில் தமிழிசை கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்.

விழாவில் தமிழிசை, “ஏரி குளங்களில் மட்டுமல்ல; கடலிலும் தாமரை மலரும். நாங்கள் பிள்ளைகளுக்குத்தான் காது குத்துவோமே தவிர, மற்றவர்களுக்குக் காது குத்த மாட்டோம். சிறுத்தைகளெல்லாம் தற்போது சிரித்துக்கொண்டே பாஜகவில் இணைந்து வருகிறார்கள். ரங்கேஷ் போன்ற இளைஞர்கள் பாஜகவை வலுப்படுத்தி வருகிறார்கள். தற்போது உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விரைவில் பாஜக ஆட்சி மலரும். அதில் ரங்கேஷின் பங்கும் இருக்கும்” என்று வாழ்த்தி பேசி விடைபெற்றார்.
ரங்கேஷ் பாஜகவுக்குச் சென்றாலும் பழைய நட்பின் அடிப்படையில் விழாவில் விசிக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
திருமாவளவனை அண்ணன் என்று அன்போடு அழைக்கும் விசிக இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இணைவது அபூர்வம். அதிலும் பாஜகவில் இணைவது அபூர்வத்திலும் அபூர்வம். இந்த நிலையில் தமிழிசையின் பேச்சு நமக்கு வியப்பையே ஏற்படுத்தியது. விசிகவினர் பாஜகவில் இணைகிறார்களா என்பதை அறிய காதணி விழாவில் கலந்துகொண்ட விசிக பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்.
ஆரம்பத்திலேயே, “நாங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறோம். தலைமை ஒரு வலுவான முடிவை எடுக்க வேண்டும். இல்லையெனில் விசிக கோட்டையில் பாஜகவினர் கொடியேற்றும் நிலைகூட வரலாம். ஆகவே, கடலூர் மேற்கு, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் செயலாளர்களை அழைத்து ஆய்வு செய்து, புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், தலைமையிடம் அவர்கள் கெஞ்சியதன் காரணமாக அவர்கள்மீது தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை”
சஸ்பென்ட் செய்யப்பட்ட பல நிர்வாகிகளும் தலைவர் இருக்கும் மேடையில் ஏறுகிறார்கள். இதுபோன்ற செயல்களை யார் கவனிப்பது. சில மாவட்டச் செயலாளர்கள் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல் குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் பத்திரிகை அடித்து அவரது பெயரைப் போட்டு பேனரும் வைத்துவிடுகிறார்கள். தலைவர் வரவில்லை என்றால் குடும்பத்தினரும் அந்தப் பகுதி பொறுப்பாளர்களும் விரக்தியடைந்து விடுகிறார்கள். நேற்று உருவான கட்சிகள்கூட உறுப்பினர் அட்டை வழங்கியுள்ளது. அவர்கள்கூட கட்சியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று சரியான எண்ணிக்கையைச் சொல்கிறார்கள். ஆனால், விசிகவில் யார் யார் உறுப்பினர், எத்தனை பேர் உறுப்பினர் என்பதே தெரியவில்லை” என்று நம்மிடம் பொங்கினார்.
மேலும், தலைமையுடன் உள்ளவர்களுக்கும் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு ஓர் இடைவெளி ஏற்பட்டுவருவதாகத் தெரிவித்தவர், “உதாரணமாகக் கடலூர் கிழக்கு மாவட்ட விசிக துணை செயலாளர் அஸ்கர் அலி, விழுப்புரம் தொகுதிக்கு இஸ்லாமியர்களை அழைத்துச் சென்று இரண்டு வாரம் தங்கி சொந்தப் பணத்தைச் செலவு செய்து எங்கள் பொதுச் செயலாளர் ரவிக்குமார் வெற்றிபெற கடுமையாக உழைத்தார். அப்படிப்பட்டவர் ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல, ரவிக்குமார் பிசியாக இருப்பார் என்பதால் முதலில் எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு, பின்னர் செல்போனுக்குத் தொடர்புகொண்டுள்ளார். எதிர்முனையில் பேசிய ரவிக்குமாரோ, அஸ்கர் அலி என்ன சொல்ல வருகிறார் என்று கூட கேட்காமல் நாடாளுமன்றத்தில் இருக்கிறேன் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
அஸ்கர் அலி ஒன்றும் சொந்தப் பிரச்சினைக்கு ரவிக்குமாரைத் தொடர்புகொள்ளவில்லை. புழல் சிறையில் பேரறிவாளன் உண்ணாவிரதம் இருந்த தகவல்களைத் தலைவரிடம் சொல்லி, நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால், ரவிக்குமாரிடமிருந்தோ திரும்பவும் அவருக்கு அழைப்பு வரவில்லை. இதனால் அவர் ஒதுங்கியே இருக்கிறார். இதுபோல்தான் பல நிர்வாகிகளும் விரக்தியில் ஒதுங்கி நிற்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு வருடத்துக்கும் குறைவான காலமே உள்ளது. தேர்தலைச் சந்திக்க வேலைத் திட்டங்களில் ஈடுபடாமல் தலைமை அலட்சியமாக இருந்து வருகிறது. எனவே கட்சியில் விரைவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை: