ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

முஸ்லிம் பெண்கள் குறிப்பிட்ட உடை உடுத்தியிருக்கவேண்டுமா?

Sharmila Seyyid : அதிக முறை முகநூல் என்ற சமூக வலைத்தளத்தில் பாலியல்
வன்முறையும், கொலையும் செய்யப்பட்ட, செய்யப்படுகின்ற ஒரு பெண் என்றால் அது நானாகத்தான் இருப்பேன். இதைச் சொல்வதில் ஒரு பெருமையும் இல்லை. ஆனால் இந்தத் தொடர் வன்முறைகளுக்கு ஏன் ஆண்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதைப் பற்றிப் பேச வேண்டியது அவசியம்.
நானொரு முஸ்லிம் என்ற வகையில் இந்த வன்முறைகளை முஸ்லிம் ஆண்கள்தான் நிகழ்த்துகிறார்கள் என்பது தெட்டத் தெளிவான உண்மை.
என்னை வன்முறை செய்வதிலும், கொலை செய்வதிலும் முஸ்லிம் ஆண்களுக்கு ஒரு தனிச் சுகம் இருந்து கொண்டே இருக்கின்றது. கிட்டத்தட்ட ”சுய இன்பம்” பெறுவதுபோல. இதற்குச் சில தெளிவான காரணங்கள்தான் உண்டு. ஒன்று நானொரு பெண். இரண்டு நானொரு முஸ்லிம் பெண். மூன்று நானொரு தனியாக வாழ்கின்ற பெண். இந்த மூன்று காரணங்களும் ஆண்களுக்கு விசேடமானவை.

இவர்களைப் பொறுத்தவரை ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சில சட்டகங்கள் வைத்திருக்கிறார்கள். நான் அந்த சட்டங்களுக்குள் இல்லை என்பது அவர்களது நீண்டகாலக் குறைபாடு. ஏக்கம். வருத்தம். இரண்டாவது நானொரு முஸ்லிம் பெண்ணாக இல்லை என்பதிலுள்ள கோபம். முஸ்லிம் பெண் என்றால் முஸ்லிம் பெண் என்று சொல்லத்தக்க வகையில் உடை உடுத்தியிருக்கவேண்டும். நாவை அடக்கிப் பேச வேண்டும். முக்கியமாக ஆண்கள் தான் பெண்களின் எஜமானர்கள் என்று பேச வேண்டும். அப்புறம், மதம் கலாசாரம் என்று வரும்போது அடக்க ஒடுக்கமாக ஒதுங்கிப் போய்விடவேண்டும். விமர்சனம் கிமர்சனமெல்லாம் பேசவே கூடாது. அதெல்லாம் ஆண்கள் பார்த்துக் கொள்ளவேண்டிய காரியங்கள். அடுத்தது மூன்றாவது காரணம், தனியாக வாழ்கின்ற பெண். இவர்களைப் பொறுத்தவரை, தனியாக வாழ்கின்ற பெண், தனியாக வாழ்வதாக வெளியே சொல்லவே கூடாது. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் தனியாக ஒரு பெண் வாழவே கூடாது. அவள் எப்போதும் ஒரு ஆணுடன், ஆணின் துணையுடன், அவனது பாதுகாப்புடன்தான் வாழவேண்டும்.
இந்த மூன்று காரணங்களும்தான் பொதுவாக நான் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் தாக்கப்படக் காரணம். இந்தக் காரணங்களை விடவும் இந்தக் காரணங்களுக்குப் பின்னாலுள்ள கூட்டு மனநிலை மிக முக்கியமானது. இந்த மூன்று காரணங்களும் பொருந்துகின்ற ஒரு பெண் என்றால் அவளுக்கு யாரும் புத்தி சொல்லலாம் என்று லுங்கியை மடித்துக் கொண்டு கிளம்பிவிடுகின்ற உளவியல், வெறுமனே ஆணுக்கு மட்டுமே இருக்கக் கூடியது. ஆண் என்கின்ற ஒரேயொரு தகுதியும், அதிகார உணர்வும்தான் இதனைச் செய்யத் தூண்டுகிறது. தன்னைப் பற்றியோ, பிறரைப் பற்றியோ, சமூக வாழ்வு, ஒழுங்கு பற்றியோ எந்தத் தெளிவும் அறிவும் அற்றவர்கள் மட்டும்தான் இப்படிச் செய்ய முடியும். இந்த மூன்று பொருத்தங்களும் உள்ள பெண் இருந்து, அவள் சமூகத்தில் தன்னிறைவாக வாழ்கிறாள் என்று தெரியும்போது ஆண்கள் மிரண்டு போகிறார்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று மூளையைக் கசக்கிப் பிழிந்து காரணங்களை உருவகிக்கத் துவங்குகிறார்கள். அவர்கள் கண்டறிகின்ற காரணங்களில் நிறைய ஆண்கள் இருப்பார்கள்.
இந்த மனநிலை கொண்ட ஆண்கள்தான் நாம் வாழும் சமூகத்தில் அதிகம். ஒரு பறவை இறந்து கிடந்தால் நாய்கள் பல சேர்ந்து தெருவையே நாசப்படுத்தி வைப்பதுபோல ஒரு பெண்ணைக் குதறுவதில் ஆண்கள் மகத்தான் மகிழ்ச்சியை அடைகிறார்கள்.
இந்த வகை ஆண்களிடம் நான் கவனித்த இன்னொரு ஒற்றுமை உள்ளது. அவர்கள் பெரும்பாலும் ”தனிமையில்” இருக்கும் ஆண்கள். (தனியாக அல்ல, தனிமையில்) ஒன்றில் திருமணமாகாத ஆண்கள். அல்லது திருமணமாகியும் வேலை நிமித்தம் மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து தனிமையில் இருப்பவர்கள். இவர்களில் அனேகர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கொண்டு இந்த மகத்தான் சமூகக் கடமையைச் செய்கிறார்கள். சில போராளிகள் இங்கேதான் நம் திருநாட்டில் வாழ்ந்து கொண்டு பல்வேறு ஏக்கங்கள், ஏமாற்றங்களை மனத்தில் ஒழித்துக் கொண்டு சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகத்தில் இதனைச் செய்கிறார்கள். இவர்களது சமூகக் கடமையெல்லாம் ஒரு பெண்ணைத் துகிலிருப்பதுடன் முடிவடைவதுதான்.
இது ஒரு நீண்ட காலமாக நடக்கின்ற விளையாட்டு ஆதலால் இவற்றைக் கடப்பதற்கு நானும் பல உத்திகளை கற்றுத் தேறியிருக்கிறேன்.
சில நாட்கள் முன்பு கொழும்பு கனத்தை வீதியிலிருந்து பொரள்ளை வழியாக பத்தரமுல்லைக்குச் செல்வதற்காக வந்து கொண்டிருந்தபோது தெருவில் குடித்துவிட்டு மல்லாந்து விழுந்துகிடந்த ஒரு மனிதனைக் கண்டேன். அவன் இறந்துபோய்க் கிடக்கிறானோ என்று தோன்றுகிறளவுக்கு அவனில் ஈக்கள் மொய்த்திருந்தன. அவன் உடுத்தியிருந்த ”சாரங்” அவிழ்ந்து ஆணுறுப்பு முற்றிலுமாக வெளிப்பட்டுத் தெரிந்தது, அந்த வழியாகச் சென்றவர்கள் அந்த மனிதனை நின்று நிதானமாகப் பார்க்கக்கூடவில்லை. போகிற போக்கில் ஒரு பார்வையை வீசிவிட்டு அப்படியே தங்கள் வேலைகளைப் பார்க்க, என்ன காரணத்திற்காக வந்தார்களோ அந்த நோக்கத்துடன் நடந்து கொண்டிருந்தார்கள். நானும் அப்படியே அவ்விடத்தை விட்டுக் கடந்து போனேன்.
என்னைப் பொறுத்தவரை, முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் பெண்களை வன்முறை செய்கின்ற ஆண்களும் தெருவில் அப்படிக் கிடந்த ஆணும் ஒன்றுதான். நாம் செய்யவேண்டியது, கடந்து போகவேண்டியது மட்டுமே. இவர்களைக் காலம் சரியான நேரத்தில் தண்டிக்கும். தடை செய்யப்பட்ட தீவிரவாத தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உறுப்பினவர்கள் பலரும் இப்படி பெண்களின் சதைகளைப் பிளந்து ருசித்தவர்களும்தான்.

1 கருத்து:

Thayalini சொன்னது…

You are really great. May God bless you.