திங்கள், 19 ஆகஸ்ட், 2019

இந்தியாவிலேயே ஒரே கட்சி.. தனி குரலாக ஒலிக்கும் திமுக.. காஷ்மீர் நிலைப்பாட்டால் அதிரும் டெல்லி!

tamiloneindia : ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன்
சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் கடந்த இரண்டு வாரம் முன் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை இரண்டு அவையிலும் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.
இந்த மசோதாவை இரண்டு அவையிலும் திமுகவும் திமுக கூட்டணி கட்சிகளும் மிக கடுமையாக எதிர்த்தது. அதேபோல் மற்ற எதிர்க்கட்சிகள் பலவும் இதை கடுமையாக எதிர்த்தது.
 இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்த்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே அதை பலர் ஆதரித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்தாலும் அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதேபோல் பகுஜன் சமாஜ் மசோதாவை ஆதரித்தது. சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மசோதாவை பெயருக்கு எதிர்த்தது.
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வடஇந்தியாவில் உள்ள மக்களுக்கு அதீத பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாடு உள்ளது. இந்த விஷயத்தை உணர்வு பூர்வமாக அணுகும் வடஇந்தியர்களிடம் கெட்ட பெயர் எடுக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூட பாஜக அரசு தாக்கல் செய்த இந்த மசோதாவை எதிர்க்க முடியாமல் குழம்பியது.
ஆனாலும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது. ராஜ்யசபாவை வைகோ தனது பேச்சால் அசைத்து பார்த்தார். டி.ஆர் பாலுவோ நேரடியாக அமித் ஷாவிடம் கேள்வி கேட்டு பாஜகவினரை திரும்பி பார்க்க வைத்தார்.

தயாநிதி மாறன் பேச்சு.. அவரின் வாழ்நாளில் முக்கியமானது. அன்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பேசியது மொத்த எதிர்கட்சிகளுக்குமான ஒரே குரலாக இருந்தது. இப்போது அதே திமுக இந்த பிரச்சனையை அவைக்கு வெளியிலும் எழுப்ப உள்ளது.

டெல்லியில் திமுக எம்பிக்கள் எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். 22ம் தேதி நடக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மற்ற எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்களையும் ஸ்டாலின் அழைத்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இப்படி களத்தில் இறங்கி எதிர்கட்சிகளை இணைத்து போராட்டத்தில் குதிக்கும் ஒரே கட்சியாக திமுக உருவெடுத்து உள்ளது.

அதிலும் காஷ்மீர் விவகாரத்தில் யார் இது பாஸ் இவங்க, இப்படி எதிர்க்கிறாங்க என்று மொத்த வடமாநிலங்களும் திமுகவை திரும்பி பார்த்து இருக்கிறார்கள்..
அவர்களுக்கு இந்த எதிர்க்குரல் கண்டிப்பாக புதிதாக இருக்கும். காஷ்மீர் விவகாரத்தில் கெட்ட பெயர் வருமோ என்று எதை பற்றியும் கவலை படாமல் திமுக இப்படி அதிரடியில் இறங்கி உள்ளது. 39 எம்பிக்களை வைத்து திமுக கூட்டணி என்ன செய்யும் என்று எழுந்த கேள்விகளுக்கு இப்போது திமுக பதில் அளிக்க துவங்கி இருக்கிறது என்று கூட கூறலாம்.

நாடு முழுக்க தனிப்பெரும் கட்சியாக வலம் வரும் பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சியாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மாறி உள்ளது. > இதனால் 22ம் தேதி நடக்க உள்ள போராட்டம் கண்டிப்பாக நாடு முழுக்க பெரிய அளவில் கவனம் ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் அரசியல்வாதிகளை விடுவிக்க கோரி ஸ்டாலின் ஒருங்கிணைக்கும் இந்த போராட்டம் தேசிய அரசியலில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது<

கருத்துகள் இல்லை: