சனி, 24 ஆகஸ்ட், 2019

மதுரை கருப்பாயி பாட்டி .. பொதுக்கழிப்பறையில் 19 வருடங்களாக வசித்து வருகிறார் ..

சமையல் மதுரை நகர் tamil.oneindia.com - hemavandhana.; பொது கழிப்பறையை வீடாக மாற்றி வசித்துவரும் கருப்பாயி-
மதுரை: கருப்பாயி பாட்டி பற்றி கேள்விப்பட்டீங்கன்னு வெச்சுக்குங்க.. டிஜிட்டல் இந்தியாவே பல்லிளித்துவிடும்! அந்த அவலத்துக்கு ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கண்ணீர் பொது கழிப்பறை மோடி பதவிக்கு வந்த 2-வது வருஷம் ரொம்ப பெருமையாக அறிவித்த ஒரு திட்டம்தான் "எல்லோருக்கும் வீடு திட்டம்"என்ற திட்டம். ஆனால் இந்த திட்டம் மோடி 2-வது முறையாக பிரதமரான பிறகும் எல்லாருக்கும் போய் சேர்ந்ததா என்பது கோடி, கோடி கேள்வியே!
இப்படி வீடு இல்லாத ஏழைகள், நாடு முழுவதும் பரவி கிடக்கின்றனர்.. நம்ம மதுரையிலும் இந்த அவலம் உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டிதான் கருப்பாயி. 70 வயசு.
கருப்பாயி பாட்டிக்கு சொந்த ஊர் பனையூர் ரெட்டக்குளம்தான். கணவர் இறந்துவிட்டார்.. ஒரே ஒரு பெண்ணையும் கல்யாணம் செய்து தந்துவிட்டார். ஆனால் அந்த பெண் எங்கு இருக்கிறார் என்றே கருப்பாயிக்கு தெரியாதாம். பிழைப்புக்கு வழி இல்லாமல் மதுரை நகருக்கு வந்தார் பாட்டி.

பல இடங்களில் கேட்டு பார்த்தும் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை.. அதனால் அனுப்பானடியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாக கழிப்பறை அறையில் தங்கிவிட்டார். அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு சென்று சாப்பாடு வாங்கி சாப்பிட்டுள்ளார். நாளடைவில் இந்த கழிப்பறைதான் கருப்பாயிக்கு வீடு. ஒருகட்டத்தில் இந்த பொது கழிப்பறையை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

 ஒருநாளைக்கு 20, 30 பேர் இந்த பாத்ரூமை பயன்படுத்த வருகிறார்களாம். ஆனால் அவர்களிடம் வாய் திறந்து காசு தரும்படி கருப்பாயி கேட்டதே இல்லையாம். அவர்களாக இரக்கப்பட்டு தரும் அந்த பணத்தில்தான், அரிசி, பருப்பு வாங்கி அந்த பாத்ரூமிலேயே வைத்து சமைத்து சாப்பிடுகிறார்.. அங்கேயே தூங்கி எழுந்து.. மறுநாள் அதே பாத்ரூமை சுத்தம் செய்யும் வேலையில் இறங்குகிறார். இப்படியே 19 வருஷமாக இந்த பாத்ரூமிலேயே கருப்பாயி வசித்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

 கருப்பாயி தங்கியுள்ள அறையில் வளைந்து நெளிந்த பாத்திரங்கள் கொஞ்சம் உள்ளது.. கசங்கி கிழிந்த துணிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை பற்றி ஏஎன்ஐக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் மூத்த குடிமக்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தேன், ஆனால் அது கிடைக்கவில்லை. அதனால் கலெக்டர் அலுவலகத்தில் பல அதிகாரிகளை அணுகினேன், எதுவுமே நடக்கவில்லை. எனக்கு வருமானத்துக்கு வேறு வழி இல்லை. என்னை என் மகள்கூட வந்து பார்க்கவில்லை" என்கிறார் கண்ணீருடன்.

இத்தனை காலமாக எத்தனை பேர் கருப்பாயி கதையை அறிந்திருப்பார்கள்.. அதில் ஒருவர் கூடவா கருப்பாயிக்கு ஒரு வீட்டுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று தோன்றவில்லை.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. கூடவே வேதனையாவும் இருக்கு.. இந்த லட்சணத்தில் நாம் நிலவுக்கு ஆராய்ச்சி செய்யப் போய் விட்டோம். என்ன சொல்வதென்றே தெரியவில்லை

கருத்துகள் இல்லை: