வியாழன், 22 ஆகஸ்ட், 2019

சிதம்பரம் கைது .. நாக்பூரில் ஆர் எஸ் எஸ் தலைமையகத்தில் . எடுக்கப்பட்ட முடிவு .. சுப்பிரமணியன் சாமி ஆலோசனையாம்

டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.
“முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (ஆகஸ்டு 21) இரவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாஜகவுக்குள்ளேயே பல விதமான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்து பாஜகவுக்கு கட்சிப் பணிக்காக அனுப்பப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஒருவர் நேற்று இரவு தன் நண்பர்களிடம் இதுபற்றி விரிவாக பேசியிருக்கிறார்.
‘காங்கிரஸ்காரர்கள் அண்மைக் காலமாக தங்கள் கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் ஊருடுவிவிட்டதாக வெளிப்படையாகவே பேசி வந்தார்கள். காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு எடுத்த முடிவுக்கு சில காங்கிரஸ்காரர்கள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தனர். அவர்களைத்தான் காங்கிரஸுக்குள் இருக்கும் ஆர் எஸ் எஸ் காரர்கள் என்று காங்கிரஸுக்குள் அழைத்தனர்.

ஆனால் ப.சிதம்பரம் விவகாரத்தில் நாம் இது நாள் வரை பாஜகவுக்குள்ளேயே ஒரு காங்கிரஸ்காரரை வைத்துக் கொண்டிருந்தோம். அவருக்கு பவர் இருக்கும் வரை ப.சிதம்பரத்தை இந்த வழக்கு மட்டுமல்ல, ஏர் செல் மேக்சிஸ் வழக்கில் இருந்தும் பல காலமாக காப்பாற்றி வந்தார். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியிலேயே நாம் சிதம்பரத்தை சிறையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் மோடிக்கு அருகிலேயே இருந்துகொண்டு அந்த புண்ணியவான் செய்த வேலைகளால்தான் சிதம்பரத்தை சிபிஐ நெருங்குவதற்கு தயக்கம் காட்டியது. இப்போது அரசுக்குள் அந்த புண்ணியவான் இல்லை என்பதால், சிதம்பரம் மீது இவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை எடுக்க முடிந்திருக்கிறது’ என்று பகிர்ந்துகொண்டிருக்கிறார் அந்த ஆர். எஸ். எஸ். சீனியர்.
இப்படி பாஜகவினராலேயே சிதம்பரத்தைக் காப்பாற்றியவர் என்று புகாருக்கு உள்ளாகியிருப்பவர் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிதான். கடந்த ஐந்தாண்டுகளில் அவர்தான் சிதம்பரத்தை சட்ட ரீதியாக காப்பாற்றி வந்திருக்கிறார் என்பது ஆர்.எஸ். எஸ். காரர்களின் வெளிப்படையான புகார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கும் பலர் அருண் ஜேட்லியின் ஜூனியர்களாக ஒரு காலத்தில் பணியாற்றியவர்கள்தான். அந்த அடிப்படையில் தனக்கு நீதித்துறையில் இருக்கும் நெருக்கத்தை சிதம்பரத்துக்கு சாதகமாக அருண் ஜேட்லி பயன்படுத்தினார் என்பது சங்கத்தினர் குற்றச்சாட்டு.
இந்த ஆட்சியில் அருண் ஜேட்லியின் பங்கு இல்லாத நிலையில் சுப்பிரமணியன் சுவாமிதான் சிதம்பரத்தின் மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று ஆட்சி மேலிடத்திடம் சொல்லியிருக்கிறார். ஆனால், சிதம்பரம் மூத்த தலைவர், இப்போது அவர் மீது கை வைத்தால், அது, துவண்டு கிடக்கும் காங்கிரசுக்கு உயிர் கொடுத்தது போல் ஆகிவிடாதா என்று மோடியே கொஞ்சம் யோசித்திருக்கிறார். இதை உணர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, நேராக ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமைக் கதவைத் தட்டியிருக்கிறார். கார்த்தி சிதம்பரத்துக்கு இருக்கும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்களை எல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் ஆவணப்படுத்திய சுப்பிரமணியன் சுவாமி, ‘இதுதான் சரியான நேரம். சிதம்பரத்தை இப்போது கைது செய்வதால் காங்கிரசுக்கு மேலும் சிக்கல் ஏற்படுமே தவிர, உயிர் கொடுத்தது போல் ஆகாது. ஏனென்றால் சிதம்பரத்துக்கு காங்கிரஸிலேயே நிறைய எதிரிகள் இருக்கின்றனர்’ என்று நாக்பூரிடம் வாதாடியிருக்கிறார். இதன் பிறகே சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். தலைமை உத்தரவு கொடுக்க உடனடியாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். காரர்களே சொல்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: