திங்கள், 19 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் சிறைகளில் இடமில்லை! .... இயல்பு நிலை திரும்புகிறது ?...

காஷ்மீர் சிறைகளில் இடமில்லை!மின்னம்பலம் : கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை உத்தேசமாக 4,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது. கைதானவர்களைக் காவலில் வைக்க காஷ்மீர் மாநிலச் சிறைகளில் இடமில்லை என்பதால் அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அரசுத் தரப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு மாவட்ட நீதிபதி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் சொன்ன தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, “பொது பாதுகாப்புச் சட்டம் (Public Saftey Act) என்ற சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சட்டப்பிரிவின்படி கைது செய்யப்பட்டவர்களை இரண்டு வருடங்கள் வரை விசாரணையோ, குற்றப்பத்திரிகை பதிவு இல்லாமலோ சிறையில் வைக்கலாம். இன்னும் பலர் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோருக்குச் செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்குள் தகவல் பகிர முடியும்” என்று அவர் தெரிவித்ததாகச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சல் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களின் பொதுவான எண்ணிக்கையைக் கூற மறுத்திருந்தார். ஆனால், ஏஎஃப்பி நிறுவனம் ஏராளமான அரசு அதிகாரிகளிடமும் அரசு ஊழியர்களிடமும் போலீசாரிடமும் பேசி ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்வதாகத் தெரிவிக்கிறது.
அதே நேரம் பிடிஐ செய்தி நிறுவனம் கடந்த சனிக்கிழமை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்ததாகத் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், காஷ்மீரில் நேற்று வரை 50,000 தரைவழித் தொலைபேசி இணைப்புகள் இயங்கத் தொடங்கிவிட்டதாகவும், இன்று திங்கட்கிழமை முதல் காஷ்மீரில் பள்ளிகள் செயல்படத் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: