புதன், 21 ஆகஸ்ட், 2019

நீதிபதி வைத்தியநாதன் கிறிஸ்தவ மிஷனரிகள் பற்றிய வெறுப்பு பேச்சை மீளப் பெற்றார்

Chennai high court : கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன என்ற கருத்தையும் நீக்குகிறோம்
tamil.indianexpress.com : சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவ – மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதில் 7 பேராசிரியர்கள் இவர்களை சுற்றுலா அழைத்து சென்றனர். கல்வி சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, இரு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் 8 மாணவிகள் பேராசிரியரருக்கு எதிராகவும், 3 பேராசிரியர்கள் குற்றசாட்டுக்கு உள்ளான பேராசிரியருக்கு ஆதரவாகவும் கல்லூரி சார்பில் அமைக்கப்பட்ட விசாகா குழுவில் சாட்சியம் அளித்தனர். அதன் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக பேராசிரியர்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றச்சாட்டுக்கள் குறித்த ஆவணங்கள், விசாரணைக்கு பின் தான் வழங்கப்பட்டதாகவும், தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு வழங்காமல் இயற்கை நீதிமீறப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.ஆனால், அனைத்து வாய்ப்புகளும் மனுதரார்க்கு வழங்கப்பட்டதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரி தரப்பு பதிலை ஏற்று, பேராசிரியர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் தன்னுடைய உத்தரவில், தற்போது கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன எனவும், இருபாலர் படிக்கும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், அவை ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்கு வரதட்சணை தடைச் சட்டமே சிறந்த சான்றாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது எனவும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வழக்குக்கும், இந்த கருத்துக்கும் எந்த தொடர்பில்லை என கிறிஸ்தவ கல்லூரி தரப்பில் நீதிபதி வைதியநாதன் முன் முறையிடப்பட்டது. இதனையடுத்து முறையீட்டை ஏற்று நீதிபதி ஏற்கனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என்பதையும் கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன என்ற கருத்தையும் நீக்குவதாக நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: