ஞாயிறு, 24 மார்ச், 2019

காங்.,கிற்கு செல்கிறது தென்காசி தொகுதி ? வேட்பாளருக்கு திடீர் அழைப்பு!

தினமலர் :திருநெல்வேலி, தென்காசி தி.மு.க., வேட்பாளர் தனுஷ்குமாரை கட்சி தலைமை அவசரமாக சென்னைக்கு அழைத்துள்ளது. சிவகங்கை தொகுதியை தி.மு.க., பெற்றுக்கொண்டு தென்காசியை காங்கிரசிற்கு ஒதுக்க உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளவற்றில் சிவகங்கை தவிர மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் தி.மு.க., சார்பில் நேற்று மாலை நடக்க இருந்த செயல்வீரர்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. தி.மு.க., வேட்பாளரான தனுஷ்குமார் திடீரென சென்னைக்கு அழைக்கப்பட்டார்.
சிவகங்கை தொகுதியை தி.மு.க., எடுத்துக்கொண்டு தென்காசியை காங்கிரசுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கட்சியினரிடையே தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் சிவபத்மநாபன் மறுத்தார். அவர் கூறும்போது, தனுஷ்குமாரை கட்சி தலைமை வரவழைத்ததற்கு தொகுதி மாற்றம் காரணமில்லை என்றார். இருப்பினும் தொகுதி மாற்றம் குறித்த பேச்சு இரு கட்சியினரிடையும் பரபரப்பாக பேசப்படுகிறது

கருத்துகள் இல்லை: