சனி, 12 மே, 2018

இளையராஜா வழக்கு: ஏமாற்றப்பட்டாரா முத்துசாமி?

இளையராஜா வழக்கு: ஏமாற்றப்பட்டாரா முத்துசாமி?

மின்னம்பலம் : இளையராஜாவின் உரிமை எழுப்பும் குரல் மீண்டும் ஒலித்திருக்கிறது. இம்முறை கோவையில் இயங்கிய ‘ஹனி பீ மியூசிக்’(Honey Bee Music) நிறுவனத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தனது பாடல்களை டிஜிட்டல் வெர்ஷனில் மாற்றும் முயற்சியில் இறங்கியதிலிருந்து, பெருமளவில் பாடல் சிடிக்களை விற்று வந்த அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் இளையராஜா. அதற்காக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் பெரும்பாலானவை இளையராஜாவுக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கப்பட்டன. காரணம், அவற்றுக்கான காப்புரிமை ராஜாவிடம் இருந்தது. ஆனால், தற்போது கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இளையராஜாவின் கோவை வழக்கறிஞர் சிவசாமி கொடுத்துள்ள புகார், இளையராஜாவின் காப்புரிமை போர் நிலையை வேறு விதமாக மாற்றியிருக்கிறது.

Honey Bee Music நிறுவனத்தின் உரிமையாளராக அறியப்பட்ட முத்துசாமி இளையராஜாவின் பாடல்களை DTS வெர்ஷனில் டிவிடிக்களாக விற்றுவருவதாகவும், இதற்கான அனுமதி அவரிடம் இல்லையென்றும் தனது புகாரில் தெரிவித்துள்ள சிவசாமி, இளையராஜாவின் பாடல்கள் அடங்கிய டிவிடிக்களை கைப்பற்றுவதுடன், முத்துசாமியின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து முத்துசாமியை தொடர்பு கொண்டு மின்னம்பலம் சார்பில் பேசியபோது, “அவர்கள் புகார் கொடுத்ததுமே என்னிடம் இருக்கும் அத்தனை ஆதாரங்களையும் காவல் துறை ஆணையரிடம் சமர்ப்பித்துவிட்டேன். இளையராஜா கைப்பட எழுதிக்கொடுத்த உரிமை என்னிடம் இருக்கிறது. நான் உருவாக்கிய டிவிடிக்கள் அனைத்தும் முறைப்படி இளையராஜாவின் அனுமதியுடனும், அந்தப் பாடல்களின் காப்புரிமையை வைத்திருந்த புரொடக்‌ஷன் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட அனுமதியுடனும் உருவாக்கப்பட்டவை. தயாரிப்பு இளையராஜா என அந்த டிவிடிக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒவ்வொரு டிவிடிக்கும் 120 ரூபாய் ராயல்டியாக இளையராஜாவுக்கு கொடுக்கப்பட்ட ஆதாரம் என்னிடம் இருக்கிறது. பிறகெப்படி நான் சட்டத்திற்கு புறம்பாக பாடல்களை விற்பனை செய்கிறேன் என சொல்லமுடியும். அவர்கள் கொடுத்த புகார் எனக்கு சாதகமானது தான். எப்படிப்பட்ட சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நான் காத்திருக்கிறேன்” என்று கூறினார் முத்துசாமி.
இளையராஜாவுடன் முத்துசாமியின் உறவு என்ன என்பது குறித்து புதிதாகச் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. டிஜிட்டல் ஊடகம் வளர்ந்த நாட்களில், சேட்டிலைட் அலைக்கற்றைகளில் இளையராஜாவின் இசை மிதந்துச் சென்றபோது, அதன் பின்னாலேயே அப்பாடல்களின் டிவிடியும் பயணப்படும் ஏற்பாடு செய்தவர் முத்துசாமி. அப்படிப்பட்டவருக்கும் இளையராஜாவுக்கும் என்ன ஆனது என்பது குறித்து காலை 7 மணி அப்டேட்டில்.

கருத்துகள் இல்லை: