திங்கள், 7 மே, 2018

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமில்லை: உச்ச நீதிமன்றம்!

மின்னம்பலம்: திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால்
குற்றமாகக் கருத முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் துசாரா என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். துசாராவுக்கு 18 வயது நிரம்பிய நிலையில் நந்தகுமாருக்குத் திருமண வயதான 21 வயது பூர்த்தியடையவில்லை.
‘இந்தத் திருமணத்தை ரத்து செய்து தனது மகளை தன்னிடம் அனுப்ப வேண்டும்’ என்று கேரள உயர் நீதிமன்றத்தில் துசாராவின் தந்தை வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
எனினும் இருவரும் கணவன் மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதைத்தொடர்ந்து தனது மகளை நந்தக்குமாரிடமிருந்து பிரித்து அனுப்புமாறு உச்ச நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் (மே 5) நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக்பூஷண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘திருமண வயதைப் பூர்த்தி செய்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் குற்றமாகக் கருத முடியாது’ என்று கூறியுள்ளனர்.
அதோடு, ‘ஒரு பெண் 18 வயது நிரம்பிவிட்டால் அவள் ஓர் ஆணோடு திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழலாம். அந்த ஆணுக்குத் திருமண வயது வரவில்லை என்றாலும்கூட இருவரும் சேர்ந்து வாழ்வதை குற்றமாகக் கருத முடியாது’ என்று தெரிவித்துள்ளனர்.
‘திருமணமாகாமல் ஆண் பெண் சேர்ந்து வாழ்வதும், குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் 2005இன் கீழ் பாதுகாப்பு பெறுவதற்குரிய சுய தகுதி பெறுவதாகும்’ என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக ஹாதியா வழக்கில் திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன் செய்துகொள்ளும் திருமணத்தை ரத்து செய்வதற்கு கேரள உயர் நீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: