சனி, 12 மே, 2018

மம்தா பானர்ஜி : என்னைக் கொல்ல சதி !

என்னைக் கொல்ல சதி: மம்தாமின்னம்பலம்: கூலிப்படை மூலம் தன்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, சாவுக்குத் தான் அஞ்சவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்கிவருகிறார். இதற்காக பல்வேறு தலைவர்களிடமும் அவர் பேச்சு நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று (மே 11) மாலை ‘ஜி 24 கண்டா’ என்ற வங்க ஊடகத்துக்கு மம்தா பேட்டியளித்திருந்தார். அப்போது, “ என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அரசியல் கட்சி என்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளது என்பது எனக்குத் தெரியும். என்னைக் கொலை செய்யும் பணி கொடுக்கப்பட்டு உள்ள நபர்கள் என்னுடைய வீடு, அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை எல்லாம் உளவு பார்த்துவிட்டார்கள்.
கலிகட் பகுதியில் உள்ள வீட்டை மாற்றுமாறு எனக்கு போலீசார் பலமுறை அறிவுரை வழங்கினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இறப்பதற்கு நான் பயப்படவில்லை. பாதுகாப்புடன் நான் வாழ்ந்தால், மக்களுக்கும் எனக்குமான தூரம் அதிகரித்துவிடும்” என்று தெரிவித்தார்.

சதித் திட்டம் தீட்டியவர்களின் பெயர்களைத் தெரிவிக்க மம்தா மறுத்துவிட்டார். “இது தொடர்பாக இதுவரை நான் யாரிடமும் பேசியதில்லை. என் கட்சியைச் சேர்ந்தோருக்கும் இது தெரியாது. என் குடும்பத்தாருக்கும் கூடத் தெரியாது. இப்போதுதான் முதன்முறையாக பொதுவெளியில் இந்தத் தகவலைக் கூறுகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ”எனது இறப்புக்குப் பின் கட்சிக்கு எதுவும் ஆகாது. எனக்குப் பின் யார் கட்சியை நடத்துவது என்ற பெயர்களையும் எழுதி வைத்துள்ளேன்” என்றும் மம்தா தெரிவித்தார்.
கர்நாடகத் தேர்தல் குறித்துப் பேசும்போது, “பாஜக மற்றும் காங்கிரஸ் சம அளவில் தொகுதிகளைப் பெற வாய்ப்புள்ளது. முடிவெடுக்கும் சக்தியாக தேவகௌடா இருப்பார். தேவகௌடாவின் மகன் குமாரசாமி முதல்வராக வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை: