வெள்ளி, 11 மே, 2018

விருதுநகர் . ஆளுநருக்கு கருப்பு கொடி... திமுக உள்ளிட்ட எதிர்கட்சி தொண்டர்கள் கைது!

ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டியவர்கள் கைது!மின்னம்பலம் : விருதுநகர் சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற திமுக உள்ளிட்ட கட்சியின் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக விழாவில் கலந்துகொண்டபோது, முதன்முறையாக அம்மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதிமுக, பாஜக தவிர, திமுக, காங்கிரஸ் உட்பட பெரும்பாலான தமிழகக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களிலும் ஆய்வு நடத்திவருகின்றார். மாவட்டத் தலைநகரங்களில் தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது; அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நிர்வாக பணிகள் என்னென்ன என்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

ஆளுநரின் இந்த ஆய்வு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக ஆளுநர் இன்று (மே 11) விருதுநகருக்குச் சென்றுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறவுள்ளார். மாலையில், தூய்மை இந்தியா பணிகளை தொடங்கி வைத்து ஆய்வுப் பணிகளிலும் அவர் ஈடுபடவுள்ளார்.
ஆளுநரின் வருகைக்கு முன்பாக அவர் வரும் பாதையில் குவிந்த திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளை ஆளுநர் செய்துவருகிறார் என்று குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், “ ஆளுநர், ஆண்டாள் கோயிலுக்கோ மாரியம்மன் கோயிலுக்கோ செல்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதையும் ஆய்வு செய்வதையுமே எதிர்க்கின்றோம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்எல்ஏக்கள் தங்கம்தென்னரசு, KKSSR ராமச்சந்திரன்,சினிவாசன்,தங்கபாண்டியன் உள்பட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: