தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை
ரஞ்சனி தற்போது வசிப்பது கேரளாவில். தமிழ்நாட்டில் எது நடந்தாலும் அவரது
ஃபேஸ்புக் பக்கம் அனலாக கொதிக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
மறைவுக்குப் பின்னர் சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக
தேர்வுசெய்யப்பட்டதற்கே பொங்கினார். தமிழக முதல்வர் ஆவதற்கான முயற்சியில்
சசிகலா இருந்தபோது, 'தமிழகத்தை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது' என
ஃபேஸ்புக் பக்கத்தில் கூறி அதிரவைத்தார். தற்போது, தமிழகத்தில் நடக்கும்
அரசியல் அட்டகாசங்களைப் பார்த்து வெட்கமில்லையா என்று கேட்டு
அதிரடித்துள்ளார். அவருடன் பேசியபோது...''அ.தி.மு.க. கட்சி மேல எனக்கு பெரிய அபிமானம் இருக்குது. ஜெயலலிதா அம்மா அந்தக் கட்சியை எப்படி வழி நடத்தினாங்க. மக்கள் மனசில இப்பவும் இருக்காங்க. அவங்களுக்கு அப்புறம் தமிழ்நாட்டிலும் அ.தி.மு.க. கட்சியிலும் நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சியா இருக்கு. சசிகலா முதல்வராக முயற்சி செய்தாங்க. அது முடியாத நிலையில், அவங்க ரெகமெண்ட் பண்ற ஒருத்தர் முதல்வராகிறார்.
அதனால், சித்தப்பாவை முதல்வராக்கினால் தமிழ்நாடு என்னாகும் என்று ஃபேஸ்புக்கில் எழுதினேன்.
சித்தப்பா முதல்வரானால் இன்று
அசெம்பிளியில் நடப்பது மாதிரிதான் நடக்கும். தமிழ்நாட்டு மக்களே... ஆள்
யாருன்னு பார்க்காதீங்க. புது தேர்தலுக்கு டிமாண்ட் பண்ணுங்க.
அசெம்பிளியில் தி.மு.க அடிச்ச கூத்துகளையும் பார்த்தோம். சித்தப்பா நிலைமை
ஊசலாடிட்டு இருக்கு. ஓ.பி.எஸ். போராடிட்டு இருக்கார். காங்கிரஸ் கட்சி
எதுவும் பேசாம இருக்கு. பா.ஜ.க. வேடிக்கைப் பார்க்குது. இதுதான், இப்போ
தமிழ்நாட்டில் நடக்கிற அரசியல். இதில் இவர்கள் மக்கள் பிரச்னைகளைப் பற்றி
எப்போ யோசிப்பாங்க. தமிழக மக்கள் முக்கியமான முடிவு எடுக்கவேண்டிய நிலையில்
இருக்காங்க. மக்களும் இளைஞர்களும் தேர்தல் கொண்டுவர முயற்சிக்கணும்.
அப்போதான் மக்களுக்காக செயல்படும் அரசை அமைக்க முடியும்'' என்கிற ரஞ்சனி
சட்டமன்ற உறுப்பினர்களையும் விளாச ஆரம்பித்தார்.''நாட்டில் நிறைய பிரச்னைகள் இருக்கு. மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாம அலையும் நிலை. இந்த 15 நாட்களா எம்.எல்.ஏ.க்கள் இது பற்றியெல்லாம் கவலையேபடலை. இதையெல்லாம் பார்க்கும் மக்கள் இனியாவது மாறனும். பணம் கொடுக்கிறவங்களுக்கு ஓட்டுப் போடறதை நிறுத்தனும். நல்ல ஆட்சியை யார் நடத்துவாங்கன்னு பார்த்து ஓட்டுப் போடணும். பணம் கொடுத்து ஓட்டு வாங்கத் தடை வரணும். பணம் கொடுத்து வாங்கும் ஓட்டு செல்லாம போகணும். இதற்காக ஒரு சட்டம் கொண்டு வரணும். அரசியலுக்கு, சமூக அக்கறை உள்ள இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் வரணும். அப்போதுதான் மாற்றம் வரும். தமிழன் வீரம்னு சொல்லிட்டு இப்படியெல்லாம் இருக்கிறது அவமானமா இருக்கு. சேரன், சோழன், பாண்டியன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்னு நம்ம தமிழ் இனம் ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாம எதிர்த்து நின்று போராடினாங்க. இப்போ இருக்கிற அரசியல் நிலைமையப் பார்க்கும்போது நமக்கே வெக்கமா இல்லையா? பாரதியார் சாதிகள் இல்லைன்னு சொல்லியிருக்கார். சாதிகளை ஒழிக்க பலரும் போராடி இருக்காங்க. நாம எல்லாருமே மனுசங்கதான். நம் உடல்ல ஓடும் ரத்தத்தில் ஏதாவது சாதி பிரித்து பார்க்க முடியுமா. அப்படி இருக்கும்போது சாதியை அடையாளமா சொல்லிட்டு ஓட்டு வாங்க வர்றதை தடுக்கணும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆகிறார்னா அவர் இந்தச் சாதியைச் சேர்ந்தவர்னு அடையாளப்படுத்தப்படறார். சாதியைச் சொல்லி அரசியல் ஆதாயம் தேடறதையும் நிறுத்தணும். இப்படியான ஓர் அரசியல் சூழலில் மக்கள் இறங்கிப் போராடணும். அதுக்கான சரியான நேரம் இதுதான்'' என்று பொங்குகிறார் நடிகை ரஞ்சனி.
- யாழ் ஸ்ரீதேவி விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக