ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

வெமூலாவின் தாயார் ராதிகா: போராட்டத்தை தொடருங்கள், ஒரு தாயாக உடனிருப்பேன்!”

ரோஹித் வெமூலாவின் தாய் ராதிகா ரோஹித் வெமூலாகுண்டூரைச் சேர்ந்த ராதிகாம்மாவை நீங்கள் அவ்வளவாக அரசியல் மேடைகளில் பார்த்திருக்க முடியாது. ஆனால் தனது மகனை ஒடுக்குமுறைக்குப் பறிகொடுத்தது அவரைத் தற்போது மேடைகளில் ஏறிப் பேசவைத்துக் கொண்டிருக்கிறது. சரியாக ஓராண்டுக்கு முன்பு ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டிருந்த மாணவர் ரோஹித் வெமூலா.
அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு வழியாக பல்கலைக்கழகத்தில் நடந்த பிரச்னைகளைத் தட்டிக் கேட்டதுதான் அவர் செய்த குற்றம். அவரது ஆராய்ச்சிக்கான செலவுத் தொகை நிறுத்தப்பட்டு, பிறகு மாணவர் விடுதியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணமாகவும் கூறப்பட்டது. வெமூலாவை தற்கொலைக்குத் தூண்டியது அவர் மீதான இந்த தொடர் ஒடுக்குமுறைதான். இறப்பதற்கு முன்பு ‘நான் வானில் நட்சத்திரமாக இருக்க விரும்புகிறேன்’ என்கிற கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுக் கொண்டார். அந்தக் கடிதம் நாடெங்கும் உள்ள மாணவர்களை ரோஹித்தின் மரணத்திற்காக நீதி கேட்டு எழுச்சியுறச் செய்தது. அதே எழுச்சிதான் அவரது தாயார் ராதிகாம்மாவையும் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் மேடைகளுக்குத் தற்போது அழைத்து வந்திருக்கிறது.

வெமூலா இறந்த ஓராண்டின் நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடலில் மாணவர்கள் உரிமைகளுக்கான தேசிய மாநாட்டில் அனுசரிக்கப்பட்டது. இதில், ரோஹித்தின் தாய் ராதிகா, விடுதியில் இருந்து ரோஹித்துடன் வெளியேற்றப்பட்ட அவரது இதர நண்பர்கள் பிரசாந்த், முன்னா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஹெஃபா அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித், பாடலாசிரியர் உமா தேவி, கவிஞர் சுகிர்த ராணி மற்றும் 'எவிடென்ஸ்' கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"ஒரு தாயாகப் போராட்டத்தில் உடனிருப்பேன்"
பேச்சில் எவ்வித ஆர்பாட்டமும் இல்லாமல், தான் கூற வந்ததை எளிமையாக எடுத்துரைத்தார் ராதிகாம்மா. "இந்திரா காந்தி 1970-களில் அமல்படுத்திய அவசர நிலையை தற்போது பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்காமலேயே பிரகடனப்படுத்தியுள்ளார். நாம் என்ன உண்கிறோம், எப்படி உடை உடுத்துகிறோம், என்ன வேலை செய்கிறோம் என்பதை சுட்டிக்காட்டித்தான், அவர்கள் நம்மை ஒடுக்குகிறார்கள். தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்குமான உரிமைகளைப் பறிக்கிறார்கள். நாம் எதை உண்ண வேண்டும், எதை உண்ணக் கூடாது என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
ஆனால் தலித்துகளும், இஸ்லாமியர்களும் வெவ்வேறானவர்கள் இல்லை. இறந்த என் மகனின் நெருங்கிய நண்பன் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன். எனது இரண்டாவது மகனின் நண்பனும் ஒரு இஸ்லாமியனே. தலித்துகளுக்கு நெருங்கிய நண்பர்களாக இஸ்லாமியர்களே இருக்க முடியும். என் மகன் வெமூலா ஹைதராபாத்தில் இஸ்லாமிய மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்தான். அதற்காகத்தான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் அவன் மீது ஒடுக்குமுறைகளைத் திணித்தார்கள். எனவே, இஸ்லாமியர்களும், தலித்துகளும் நண்பர்களாக ஒன்றிணைய வேண்டும். உங்கள் போராட்டத்தில் ஒரு தாயாக நான் என்றுமே உடனிருப்பேன்” என்றார்.
"நாம்தான் வெமூலாவைக் கொன்றோம்!"
ரோஹித் வெமூலா நினைவேந்தல்
இந்த மாநாட்டில் மாணவர்களிடையே உணர்ச்சி பொங்கப் பேசிய இயக்குநர் இரஞ்சித், "வெமூலாவைக் கொன்றது நாம்தான். நம்மிடையே இல்லாத ஒற்றுமைதான் அவரைக் கொன்றது. ஒடுக்கப்பட்டவர்களிடையே சமத்துவமும் சகோதரத்துவமும் தேவை. அப்போதுதான் அம்பேத்கரின் கனவு மெய்ப்படும். வெமூலா ஒடுக்கப்பட்டவரே இல்லை என்று தற்போது பல்கலைக்கழகத்தினர் கூறி வருகிறார்கள். அப்படியே இருந்து விட்டுப்போகட்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அரங்கத்திலிருந்து வெளியேறும்போது வெமூலாவின் சிந்தனைகளை உடன் எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.
விழாவில் வெமூலாவைப் பற்றிய கவிஞர் உமாதேவியின் வரிகளில் அமைந்த பாடலிசைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. வெமூலா நினைவு நூலகமும் திறக்கப்பட்டது.  விகடன்

கருத்துகள் இல்லை: