சனி, 3 டிசம்பர், 2016

தஞ்சையின் சின்ன கலைஞர் கோ.சி.மணி ... திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்


மின்னம்பலம்.காம்: முன்னாள் அமைச்சரும், திமுக-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய நெருங்கிய சகாவுமான கோ.சி.மணி (87) தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார். நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மேக்கிரிமங்கலம் என்ற கிராமத்தில் கோவிந்தசாமி - அஞ்சலை தம்பதிக்கு மகனாக 13 செப்டம்பர் 1929ஆம் ஆண்டு பிறந்த சிவசுப்பிரமணியன்தான் பின்னர் கோ.சி.மணி ஆனார்.
இவருக்கு சாவித்திரி, கிருஷ்ணவேணி என்று இரு மனைவிகள். இவரது மூத்த மகன் கோ.சி.மதியழகன் நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத் தலைவராக பணியாற்றி பின்னர் உடல்நலம் குன்றி இறந்தார். இவரது இரண்டாவது மகன் கோ.சி.இளங்கோவன் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியத் துணை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை

(அண்ணாவுடன் கோ.சி.மணி)
இளம்பருவத்திலேயே அண்ணாவின் பேச்சாலும், கருணாநிதியின் பேச்சாலும் ஈர்க்கப்பட்ட கோ.சி.மணி, திராவிட இயக்க ஆதரவாளராகத் திகழ்ந்தார். தான் பிறந்த மேக்கிரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய கோ.சி.மணி, பின்னர் சட்டமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அடித்தட்டு மக்களின் தேவையறிந்து அதை தீர்த்து வைத்ததால் ஒருங்கிணைத்த தஞ்சை மாவட்டத்தில் கோ.சி.மணியை வெல்ல இன்னொரு அரசியல் சக்தியால் நீண்ட காலம் வர முடியவில்லை. அப்படி அடித்தட்டு மக்களின் அடியொற்றி அரசியல் செய்தவர் கோ.சி.மணி. அதனால்தான் நான்கு முறை அவரைச் சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தனர் தஞ்சை மக்கள். கலைஞரோ அவரை கூட்டுறவு, உள்ளாட்சி, விவசாயத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார். ஊராட்சி மன்றத் தலைவர், கூட்டுறவு வங்கி தலைவர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், தமிழகச் சட்ட மேலவையின் எதிர்க்கட்சி துணை தலைவர் என்று அரசியல் பயணத்தில் பதவிகளில் அமர்ந்தாலும் அதை எல்லாம்விட கலைஞரின் வாயால் ‘சோழமண்டல தளகர்த்தர்’ என்று அழைக்கப்படுவதையே பெருமையாகக் கருதினார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக-வின் மூத்த தலைவர்கள் பலருக்கும் அந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிடுகிறவர்களின் பட்டியலை வெளியிட்டது திமுக. அதில் 119 பேர் திமுக சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்கள். அதில் 58 பேர் புதுமுகங்கள், 70 பேர் பட்டதாரிகள், அதிலே வழக்கறிஞர்கள் 24 பேர், மருத்துவர்கள் 3 பேர், முதுகலைப் பட்டதாரிகள் 27 பேர்.
பட்டியலில் விடுபட்ட பெயர்களின் முக்கியமானவர் கோ.சி.மணி. கலைஞர் திருவாரூரில் போட்டியிடுவதாக முடிவு செய்தார். அவரைச் சந்திக்கும்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் தவறாமல், ‘கோ.சி.மணிக்கு ஏன் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை?’ என்ற கேள்வியை ஒவ்வொரு சந்திப்பிலும் கேட்டார்கள். அப்போது கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் “//கோ.சி.மணிக்கு வாய்ப்பு தராவிட்டாலும், அவரால் வளர்க்கப்பட்ட மற்றொருவருக்குத்தான் அந்தத் தொகுதியிலே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கோ.சி.மணி இளமை முதல் எப்பொழுதும் எனக்கு கவசமாகவும் எதிர்ப்புக் கணைகளிலிருந்து என்னைக் காத்திடும் கேடயமாகவும் விளங்குபவர். நானும் அவரும் வாழும்வரை இந்த உணர்வு நிரந்தரமாகவே இருக்கும்.//” இதுதான் கோ.சி.மணிக்கும் கலைஞருக்கும் உள்ள பந்தம்.

அந்த தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தது. ‘தமிழக மக்கள் ஓய்வு அளித்திருக்கிறார்கள்’ என்று தலைவர் கருணாநிதி பேட்டியளிக்கிறார். கருணாநிதியைச் சந்தித்த கோ.சி.மணி கேட்கிறார், “எப்படி நீங்கள் ஓய்வு என்று சொல்லலாம்? மக்கள் அறியாமல் வாக்களித்திருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்” என்றார். “மணியே இவ்வளவு உணர்வோடு இருக்கும்போது, எனக்கும் அந்த உணர்வு தானாக வருகிறது” என்றார் கருணாநிதி. பலரும் சோர்ந்து போய் இருந்தபோது திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திமுக-வுக்கு அலுவலகம் கட்டி அதற்கு ‘கலைஞர் மாளிகை’ என்று பெயர் வைத்து, அதை கலைஞர் கையால் திறக்க வேண்டும் என்பது மணியின் விருப்பம். ஆனால், அப்போது கலைஞரின் உடல்நிலை ஒத்துழைக்காததால் அதை மு.க.ஸ்டாலின், கோ.சி.மணி தலைமையில் திறந்து வைத்தார். திராவிட இயக்கத்தின்பால் கொண்ட பற்றும், கலைஞர் மீதான அன்பும்தான் கோ.சி.மணி. அதனால்தான் அவரை தஞ்சையின் ‘சின்னக் கலைஞர்’ என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: