திங்கள், 28 நவம்பர், 2016

சரத்குமார், ராதாரவி நீக்கம் ஏன்? விஷால் விளக்கம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் நிரந்தரமாக நீக்கப்பட்டது தொடர்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரையும் நிரந்தரமாக நீக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொதுக்குழுவிற்கு பிறகு, நடிகர் சங்க நிர்வாகிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.அதில், பொதுச் செயலாளர் விஷால் அளித்த பேட்டி
விதிகளை மீறியதால் நீக்கம்
 அறக்கட்டளையின் விதிகளை மீறியதால் சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் சங்க நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக, அவர்கள் இருவரையும், சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்குவது என முடிவு செய்தோம். அதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நீக்கம் குறித்து அவர்களுக்கு முறையாக கடிதம் அனுப்பப்படும்.

ஸ்கைப்பில் பேசிய கமல்

பொதுக்குழு கூட்டம் சட்டப்படி முறையாக நடத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் யாரையும் உள்ளே விடக்கூடாது என சொல்லவில்லை. நடிகர் சங்க உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். நடிகர் கமல் கூட ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
கல் வீச்சு

அனுமதி பெற தகுதியற்றவர்கள் சிலர் உள்ளே நுழைய முயற்சித்து கலவரத்தில் ஈடுபட்டார்கள். என்னுடைய அலுவலகத்தில் கல் வீசி தாக்கியிருக்கிறார்கள். கருணாசின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் உதவியால் பொதுக்குழு கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
கட்டடம் கட்டியே பிறகே திருமணம்

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ரூ.8.5 கோடி நிதி கையிருப்பில் உள்ளது. நடிகர் சங்கத்திற்காக படம் எடுப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.நடிகர் சங்க கட்டடம் கட்டிய பிறகே எனது திருமணம். நடிகர் சங்க கட்டடத்தில் நடக்கும் முதல் திருமணம் என்னுடையதாகவே இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

3 வருடங்களில் கட்டடம் கட்டி முடிக்கப்படும்


பொன் வண்ணன் பேசுகையில், " நடிகர் சங்க நிலத்தை மீட்பதற்கே இவ்வளவு நாட்கள் ஆகி உள்ளது. கட்டடம் கட்வதற்கு சி.எம்.டி.ஏ.,வின் அனுமதி பெற வேண்டும். 3 வருடங்களுக்குள் கட்டடம் கட்டி முடிக்க தீர்மானித்துள்ளோம்" என்றார்.
சட்டப்படி சந்திப்போம்

இச்சம்பவம் தொடர்பாக, நடிகர் ராதா ரவி தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், " நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டத்தை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன்.. தற்போது உள்ள நிர்வாகிகள் ஒரு வருடத்தில் 750 பேரை சங்க உறுப்பினர்களாக முறைகேடாக நியமித்திருக்கிறார்கள். எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் பொதுக்குழுவில் அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி சந்திப்போம். தற்போது நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் ஒட்டுமொத்தமாக நீக்குவோம்" என கூறினார்.
நிரந்தர நீக்கம் சட்டத்திற்கு உட்பட்டதல்ல: சரத்குமார்

சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கிறோம் என்பது ஏற்புடையதல்ல என சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது நிரந்தர நீக்கம் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. தன்னிச்சையான முடிவை சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம். நீக்கம் குறித்து ரசிகர்களும், தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும். என கூறினார்.  dinamalar,com

கருத்துகள் இல்லை: