புதன், 30 நவம்பர், 2016

மாதர் திரையுலகு 13- அபர்ணா சென்!

minnamalam.com :ஜா.தீபா :இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதை அடிக்கடி உலகத்துக்கு நினைவுபடுத்துகின்றன வங்காளத் திரையுலகம். நாடகத்திலிருந்து தன்னை அதிகம் மாற்றிக்கொள்ளாத திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தான் வங்காளத் திரையுலகம் புதிய திரைப்பட மொழியைத் தனதாக்கியது. அந்தத் திரைப்படங்கள் அரசியல் பேசின, சித்தாந்தங்களை விமர்சித்தன, அதிகமும் தணிக்கைத் துறைக்கு வேலை தந்தன.
ஆனாலும்கூட வங்காளத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு பெண் இயக்குநர் உருவாவதற்கு தொண்ணூறு ஆண்டு காலம் ஆனது. 1980இல் அபர்ணா சென் தனது பிரபலமான 36, chowrangi lane படத்தை இயக்குகிறார். இந்த முதல் படம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கவனஈர்ப்பைப் பெற்றது. வங்காளத்தினர் மட்டும் ‘அபர்ணா இயக்கிய படமா இது?’ என்று கூடுதல் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஏனெனில் அபர்ணா அப்போது நடிப்புலக ‘சூப்பர் ஸ்டாராக’இருந்தவர்.
சத்யஜித் ரேயின் படத்தில்தான் அபர்ணா முதன்முதலாக நடித்தார்.
அப்போது அபர்ணாவுக்கு வயது 15. அபர்ணாவின் அப்பா சிதானந்தா தாஸ் குப்தாவும் சத்யஜித் ரேயும் நெருங்கிய நண்பர்கள். சிதானந்தா தாஸ் குப்தாவும் திரைப்பட இயக்குநர் தான். சிறந்த திரைப்பட விமர்சகர் என்று பெயர் வாங்கியவர். சத்யஜித் ரேயுடன் சேர்ந்து கல்கத்தா திரைப்பட சங்கம் அமைத்தவர். அபர்ணாவின் அம்மா திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தார்.
வங்காளத்தின் திரைப்பட மேதைகள் அனைவரின் இயக்கத்திலும் அபர்ணா நடித்தார். இப்போது போலவே அப்போதும் ஒரு நடிகையின் வளர்ச்சி என்பது இந்தி படங்களில் நடிப்பதை வைத்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அபர்ணாவைத் தேடி வந்தது.

இந்த வாய்ப்புகள்தான் அபர்ணாவை இயக்குநராக்கியது. வங்காளப் படங்கள் யதார்த்தமாக இருக்கும். அதேசமயம் அதன் படப்பிடிப்பும் கூட ஆர்ப்பாட்டமில்லாமலேயே நடைபெற்று கொண்டிருந்தது. இதன் பின்னணியில் பழகிய அபர்ணாவால் இந்தி படப் படப்பிடிப்பில் தன்னை இணைத்துக் கொள்ள முடியவில்லை. அதிகாலையிலேயே கதாநாயகிகளுக்கு ஒப்பனை செய்ய வைத்து நீண்ட நேரக் காத்திருப்புக்கு பின் ஒரு ‘ஷாட்’ எடுக்கும் கலாச்சாரம் அபர்ணாவுக்கு புதிது. தினமும் இப்படி நடக்கிறபோது வந்த சலிப்பை மறைக்க வேண்டி அவர் தனது வாழ்க்கைக் குறித்து யோசிக்கத் தொடங்கினார். ‘இப்படியே வாழ்நாளெல்லாம் நடித்துக்கொண்டே இருக்கப் போகிறோமா? ‘ஆமாம்’என்றால் எனது தொழிலின் மேல் எனக்கு ஏன் சலிப்பு வருகிறது? என்று கேள்விக் கேட்டுக் கொண்டார். தனது கவனம் திசைத்திருப்பப்பட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. சிறுகதை எழுதிப் பார்க்கலாமே என்று நினைத்ததின் பலனாக ‘36, chowrangi lane’ கதையை உருவாக்கினார்.
கதை நன்றாக இருப்பதாகத் தோன்ற, அதை சத்யஜித் ரேயிடம் வாசித்துக் காண்பித்தார். இதைத் திரைப்படமாக்கலாம் என்று ரே யோசனை கூறினார். திரைக்கதையையும் அபர்ணாவே எழுதலாம் என்றார். உற்சாகமாகிவிட்டார் அபர்ணா. இந்தச் சிறுகதை அபர்ணாவின் பள்ளிப் பிராயத்தில் அவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்த ஓர் ஆசிரியை பற்றியது.
வயலட் என்கிற வயதான ஆங்கிலோ இந்தியப் பெண்மணி ஒரு பள்ளியில் வேலைப் பார்க்கிறார். பள்ளியும், சௌரங்கி பகுதியில் உள்ள வீடும் தான் அவரது தினப்படி இடங்கள். இவரின் தனிமையை விரட்டுவது வளர்ப்புப் பூனையும், ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் தான். வயலட்டின் வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான காலங்கள் வருகின்றன. வீட்டில் தன்னோடு தங்கிக்கொள்ள மணம் செய்து கொள்ளவிருக்கும் ஒரு காதல் தம்பதிக்கு அழைப்பு விடுக்கிறார். வயலட் பள்ளி சென்றிருக்கும் நேரத்தில் அந்தரங்கமாக இருக்கலாம் என்ற எண்ணத்திலேயே அவர்களும் இவரது வீட்டுக்கு வந்து சேருகின்றனர். அவர்கள் வந்த பிறகு வயலட்டின் பொழுதுகள் உற்சாகமாகின்றன. அவர்களோடு சேர்ந்து சமைப்பது, பேசுவது, விளையாடுவது, பாடுவது என உற்சாகமாக இருக்கிறார். அவர்களுக்குத் திருமணம் ஆகி தனி வீடு போகின்றனர். மீண்டும் வயலட்டுக்குத் தனிமை சூழ்கிறது. ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று தம்பதியினரை தன் வீட்டு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். அவர்களோ தங்கள் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருக்கின்றனர். வயலட்டை அழைத்தால் அந்த விருந்தில் தனிமையாக உணர்வார் என்பதால் அவருக்கு சொல்லாமலேயே விருந்து ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர். இதனை மறைப்பதற்காக வேண்டி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியூருக்கு செல்வதாக வயலட்டிடம் சொல்லி விடுகின்றனர். இந்தத் தம்பதியினருக்காக செய்த கேக்கை மட்டுமாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று சேர்த்துவிட வேண்டுமென்று அவர்கள் வீட்டுக்குச் செல்கிறார் வயலட். அங்கு போன பின்பு தான் அவர்கள் தன்னிடம் பொய் சொன்னது தெரிய வருகிறது.

அங்கிருந்து கிளம்பும் வயலட் யாருமற்ற இரவில் கொல்கத்தா வீதியில் நடந்து வருகிறார் ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’வரிகளை உரக்க சொல்லியபடி. அவரின் அப்போதைய ஆத்ம துணைகளாக காது கொடுத்து அவற்றைக் கேட்கின்றன தெரு நாய்கள்.
இதற்கான திரைக்கதை எழுதியவுடன் கோவிந்த் நிஹ்லானி இயக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார் அபர்ணா. ஆனால் அவரால் முடியாமல் போகவே தானே இயக்கினார். இது அவரைக் குறிப்பிடத்தக்க வங்காள இயக்குநர் பட்டியலில் சேர்த்தது. இதோடு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் அந்த ஆண்டு அவருக்குப் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே திரைப்பட இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். முதல் படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து அவர் இயக்கியது ‘PAROMA’ திரைப்படத்தை. இந்தக்கதை அவருக்குத் தனது பள்ளிக் காலத் தோழியை சந்திக்கச் சென்றபோது தோன்றியது. அபர்ணாவின் பள்ளி தோழி விளையாட்டிலும், மேடை நாடகங்களிலும் பிரபலமானவள். கட்டுரை போட்டி தொடங்கி எல்லாவிதமான போட்டிகளிலும் பரிசோடு வரும் ஒரு மாணவி. பிற்காலத்தில் அவள் உயர் பொறுப்புகளில் இருக்கப் போகிறாள் என்றே ஆசிரியர்களும், மாணவிகளும் கணித்து வைத்திருந்தனர். பாரம்பரியமான பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் அந்தத் தோழிக்குத் திருமணம் ஆனது. அதன்பின் அவளைப் பார்க்க அபர்ணா சென்றிருந்தபோது தன்னுடைய தோழி அங்கு மருமகளாக, இரு குழந்தைகளுக்குத் தாயாக, அண்ணியாக, பெரியம்மாவாக, கணவனுக்கு மனைவியாக மட்டுமே அடையாளம் காணப்படுவதைப் பார்க்கிறார். அவளுடைய அடையாளமாக இருந்த அனைத்துமே இந்த உறவுமுறைக்குள் காணாமல் போனதை அபர்ணா அதிர்ச்சியுடன் எதிர்கொள்கிறார். இந்தியப் பெண்கள் அனைவரின் நிலையும் இதுதான் என்பது அபர்ணாவுக்குத் தெரியுமென்றாலும் நேரடி சாட்சியைப் பார்த்த தாக்கத்தைக் கொண்டு ‘PAROMA’-வை எழுதினார்.

வீட்டு வேலைகளை செய்வதன் மூலமாக குடும்பத்தினரைத் திருப்திபடுத்தும் பரோமாவுக்கு அதைத் தாண்டிய திறமைகள் இருக்கின்றன. ஆனால், அவை சுவர்கள் அடைத்த வீட்டுக்குள் செயலிழந்து விடுகின்றன. ஒரே வட்டப்பாதையில் சுழலும் அவளது வாழக்கைக்குள் ராகுல் என்கிற புகைப்பட பத்திரிகையாளன் வருகிறான். தன்னுடைய கட்டுரை ஒன்றுக்காக பரோமாவை புகைப்படங்கள் எடுக்கிறான். ‘இந்தியக் குடும்பத் தலைவிகள்’ என்பது அவன் கட்டுரையின் மையம். பரோமாவை விட வயது குறைந்த அவன் மேல் பரோமாவுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இது தெரியவந்ததும் கோபம் கொள்கிற கணவன், பரோமாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். மனநிலை பாதிக்கப்படுகிறாள் பரோமா. அவள் நிலையறிந்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மீண்டும் தங்களுடன் வாழ வருமாறு அழைகின்றனர் கணவர் குடும்பத்தினர். மறுத்து விடுகிற பரோமா இனி தான் சுயமாக வாழப்போவதாக சொல்கிறாள். அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்படும்போது ராகுல் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்கிறாள் பரோமா. அந்தக் கணங்களில் தான் தன்னுடைய அடையாளத்தை அவள் மீட்டுக் கொண்டு வருகிறாள். படம் பார்க்கும் எவரும் தங்களைச் சுற்றியுள்ள பெண்களை நினைத்துக்கொள்ள வைக்கும் ஒரு படமாக அமைந்தது. அதுவே அபர்ணாவுக்கு பாராட்டையும் படத்தின் மூலம் பெற்றுத் தந்தது.
2000இல் ‘PAROMITAR EK DIN’ வெளிவருகிறது. மாமியார், மருமகள் உறவினை நேர்மறையாகக் கையாண்ட படம். கணவனுடன் மனச்சிக்கல் ஏற்பட்டாலும் மாமியாரிடம் நட்பாகப் பழகுகிறாள் மருமகள். ஒரு கட்டத்தில் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிடுகிறாள் மருமகள். ஆனாலும் எப்போதும் போல் மாமியாரிடம் பழகிக் கொண்டிருக்கிறாள். மருமகளுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது. முன்பு போல முதல் கணவனின் அம்மாவிடம் பழக முடியாமல் போகிறது. தனது அன்பான சிநேகிதியான மருமகளை பிரிந்த மாமியார் படுக்கையில் விழுகிறாள். தனது புதிய உறவுகளை மீறி முதல் மாமியாருக்கு சேவகம் செய்கிறாள் மருமகள். மாமியாரின் தனிமையும், புதிய உறவுகள் சூழ இருந்தும் மருமகளுக்குள் இருக்கும் ஏக்கமும்தான் படத்தின் ஆதாரம். இந்தப் படத்தில் மாமியாராக அபர்ணா நடித்திருந்தார்.

இதன் பின் இவர் இயக்கியத் திரைப்படம் ‘MR & MRS IYER’. பனி படர்ந்த மலையில் இருக்கிற தனது அம்மா வீட்டிலிருந்து புகுந்த ஊரான சென்னையை நோக்கி கைக்குழந்தையோடு வருகிற மீனாட்சிக்கு வழித்துணையாக அமைகிறார் புகைப்பட நிபுணரான ராஜா. ராஜா ஒரு ஆண். அதோடு இஸ்லாமியர் என்பதாலும் அவரிடமிருந்து ஒதுங்கியே இருக்கிறாள் மீனாட்சி. ஆனால் மீனாட்சிக்குத் தேவைப்படுகிற சிறு சிறு உதவிகளை ராஜா செய்ய இருவருக்குள்ளும் நட்பு உருவாகிறது. பயணம் முழுக்கவே இந்து – இஸ்லாமிய வெறுப்பு கலவரங்களை இருவரும் சந்திக்கின்றனர். இது ஆபத்தான பயணமாகவும் மாறிவிடுகிறது. இந்த நேரத்தில் இருவருக்குள்ளும் ஏற்படுகிற ஈர்ப்பு, அதை இருவருமே லகவமாய் கடப்பது என்று அனைவரின் மனதுக்குகந்த இந்தப் படம் அபர்ணாவை இன்னும் பிரபலமாக்கியது. இந்தியா முழுவதும் உள்ள வெகுஜன மக்களை இந்தப் படம் அடைந்தது. இதற்கு மற்றொரு காரணம் ஆங்கிலத்தில் பெரும்பாலான வசனங்கள் அமைந்தது தான். அபர்ணாவின் மகள் கொண்கனாசென் சர்மா மீனாட்சியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அபர்ணா ‘ITI MIRNALINI’ படத்தை இயக்கப்போவதாகச் சொன்னதும் கூடுதலான எதிர்பார்ப்பு அந்தப் படத்தக்கு உருவாகிவிட்டது. காரணம், அது அபர்ணாவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை. அபர்ணாவுக்கு மூன்று திருமணங்கள் நடந்திருக்கிறது. மூன்றுமே காதல் திருமணங்கள்தான் என்றபோதும் முதலிரண்டு திருமணங்களில் அதிகமும் தனிமையையே அனுபவித்திருந்தார்.
இளம் வயது மிர்னாளினியாக கொண்கனாவும், வயதான மிர்னாளினியாக அபர்ணாவும் நடித்த படம். மிர்னாளினி என்கிற புகழ்பெற்ற நடிகை ஒருவர் வயதான காலத்தில் தனிமையில் வசிக்கிறாள். தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்கிறாள். அதற்கு முன்பாகத்தான் வாழ்க்கையை அவள் திரும்பிப் பார்ப்பதுதான் கதை.
கல்லூரியில் படிக்கும்போது சமூகப் போராட்டங்களில் பங்கெடுக்கும் மிர்னாளினி உடன் படிக்கும் மாணவனின் ஆவேசக் கருத்துகளால் அவனைக் காதலிக்கிறாள். கருத்துகளுக்கும், வாழ்க்கை ஓட்டத்துக்கும் தொடர்பில்லை என்று தெரிய வரும்போது அவனிடமிருந்து பிரிகிறாள். அதன் பின் நடிகையாகிறாள். இயக்குநர் ஒருவருடன் நட்பும் பின்பு காதலும் ஏற்படுகிறது. அந்தத் திருமணமும் தோல்வியில் முடிகிறது. அவர் மூலம் பிறந்த பெண் குழந்தையும் ஒரு விபத்தில் இறந்து போகிறது.
சத்யஜித் ரே இறந்து போன செய்தி மிர்னாளினிக்குத் தெரிந்ததும், ‘தான் நல்ல நடிகை என்று பெயரெடுத்தும் ரே தன் படங்களில் நடிக்கக் கூப்பிடவில்லை. இனி நடித்து என்ன பயன்? அதனால் இனி தான் நடிக்கப்போவதில்லை’ என்று அறிவிக்கிறாள். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு இளம் இயக்குநர் மிர்னாளினியை குந்தியாக நடிக்க அழைக்கிறார். ஒப்புக்கொள்கிறாள் மிர்னாளினி. இளம் இயக்குநருடன் அவளுக்கு காதல் ஏற்படுகிறது. பட வெளியீட்டு விழா அன்று தன்னை நாசூக்காக புறந்தள்ளிவிட்டு இளமையான கதாநாயகியை அனைவரும் கொண்டாடுவதைக் காண சகிக்காமல் போகிறது. இளம் இயக்குநரும் அந்தக் கதாநாயகியை ஈர்க்க பல்வேறு முயற்சிகளைச் செய்கிறார். இதெல்லாம் மிர்னாளினிக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.
மீண்டும் நடிப்பதிலிருந்து விலகுகிறாள். இறந்துபோகும் முடிவுக்கு வரும் மிர்னாளினி தன் மனதை மாற்றிக் கொள்கிறாள்.
அபர்ணாவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் தொகுப்பாகவே இந்தப் படம் இருந்தது. இதனைப் படம் முதன்முதல் சென்னைத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

முப்பத்தைந்து வருடங்களாக தொடர்ந்து அபர்ணா சென் திரைப்படங்கள் இயக்கிவருவது இந்தியாவில் அசாதாரண நிகழ்வுதான். அவரின் ஆரம்ப காலப் படம் தொட்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்கள் சந்திக்கிற வெவ்வேறு வகையான பிரச்னைகளையே தன் படைப்பின் மூலம் முன் வைக்கிறார். இதனை அவரின் ‘GOYNAR BAKSHO’ படத்தில் ஒரு தொகுப்பாகப் பார்க்கலாம்.
ஒரு குடும்பத்தின் மூத்த தலைமுறை பெண் அடுத்த தலைமுறை பெண்களை தனது அனுபவத்தின் சாட்சியோடு வழிநடத்துவது போலவே இவரது படைகளும் அமைந்திருக்கின்றன. தனிமை உணர்வில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் தான் அபர்ணா சென்னின் படங்கள் முழுக்கவுமே வருகிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கையிலும், விதிக்கப்பட்ட வாழ்க்கையிலும் பெண்களுக்கு நேருகிற தனிமையை அவரின் படங்கள் விரிவாக்குகின்றன.
பெண்களுக்கு துணை ஒன்று வேண்டும் என்ற அர்த்தத்தில் செய்யப்படும் திருமணங்கள்கூட அவர்களது தனிமைக்கு எப்போதும் தீர்வாக இருந்து விடுவதில்லை என்பதே இவரது பெரும்பாலான படங்கள் சொல்கின்றன. உலகம் முழுமைக்குமான பெண்களின் மன ஆழத்தின் குரலாக ஒலிப்பதாலேயே அபர்ணாவின் படங்கள் அனைத்துமே சர்வதேச அளவில் அங்கீகாரமும், வரவேற்பும் பெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை: