திங்கள், 28 நவம்பர், 2016

மதன் :அம்மா கிரியேஷேன் சிவா ,பாலகுரு ,நடன நடிகரிடமும் கோடிக்கணக்கில் ..

கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக மதன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல சினிமா தயாரிப்பாளரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன் கடந்த மே 29-ம் தேதி தலைமறைவானார். மருத்துவக் கல்லூரிகளில் ‘சீட்’ வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக மதன் மீது 123 பேர் புகார் கொடுத்தனர். மொத்தம் ரூ.84 கோடியே 27 லட்சம் மோசடி செய்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதற்கிடையே, மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

மோசடி புகார்கள் மற்றும் ஆட்கொணர்வு மனு போன்றவற்றால் மதனை பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகள் எடுத்தனர். இந்நிலையில் திருப்பூரில் தனது பெண் தோழி வர்ஷா என்ற வர்ஷினி என்பவரின் வீட்டு ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை கடந்த 21-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட மதனை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து மதனை எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதன் மீதான மோசடி புகார்கள், மோசடி பணத்தில் வாங்கிய சொத்துக்கள், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, தலைமறைவாக இருந்தபோது எங்கெல்லாம் சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மதனிடம் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். அவருக்கு உதவியாக கூடுதல் துணை ஆணையர்கள் பாலசுப்பிரமணியம், அசோக்கு மார் லலிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விசாரணை மேற்பார்வை அதிகாரியாக இணை ஆணையர் மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பு பணிகளுக்கு செலவழித்ததாக தெரிவித்தார்.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பாலகுரு ஆகியோரிடம் கோடிக் கணக்கில் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் நேற்று காலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்னிலையில் ஆஜர் ஆனார்கள். மதன் முன்னிலையில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், பிரபல தயாரிப்பாளர், நடிகர் ஆகியோரிடமும் மதன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். அவர்களிடமும் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப உள்ளனர். இதையடுத்து மதனிடம் இருந்து பணம் வாங்கிய சினிமா பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளனர்.
போலீஸ் காவலில் இருக்கும் மதனுக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி மதனை நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: