செவ்வாய், 29 நவம்பர், 2016

இந்திய பொருளாதாரத்தின் மீது உலகம் நம்பிக்கை இழந்துவிட்டது? உலக ஊடகங்கள் கண்டனம் !

minnambalam.com :கடந்த நவம்பர் 8ஆம் தேதி, இந்திய மக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் இந்தியப் பிரதமர் மோடி. இந்த அறிவிப்பு, இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இந்தியாவின் சமூக, பொருளாதார அறிஞர்கள் பலரும் இதுதொடர்பாக கருத்துகளை வெளியிட்டு வந்தனர். உலகளவில் பெரும் கவனஈர்ப்பை நிகழ்த்திய இந்த அறிவிப்பின் மீதான உலக ஊடகங்களின் பார்வை மற்றும் அமெரிக்க கரூவூலச் செயலாளரின் பார்வையும் என்ன என்பதை நமக்குத் தருகிறது இக்கட்டுரை.
அமெரிக்க முன்னாள் கரூவூலச் செயலாளர் லாரன்ஸ் ஹெச்.சம்மர்ஸ்
‘குழப்பம் ஏற்படுத்தும்’ அறிவிப்பு என்று விமர்சித்துள்ளார். “நரேந்திர மோடி அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் இந்திய அரசு நிர்வாகத்திறன் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அரசு இழக்கும். பெரும்பான்மையான அரசுகள் குற்றவாளிகளை தண்டிப்பதற்குப் பதில் அப்பாவி மக்களையே தண்டிக்கின்றனர்.
நரேந்திர மோடி இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழிவையே கொடுத்திருக்கிறார். குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவானது நாடகத்தன்மை வாய்ந்தது. இதனால் இந்தியப் பொருளாதாரமானது பெருமளவில் பாதிக்கப்படும். இந்த அறிவிப்பால் மேல்தட்டு மக்கள் ஒருபோதும் பாதிக்கப்படப் போவதில்லை, ஏழை மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். மேலும் கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தங்கள் பணங்களை தங்கமாகவும் ரியல் எஸ்டேட்களிலும் முதலீடு செய்துள்ளனர். 1.3 பில்லியன் அளவிலான ஏழை மக்கள் மொத்தமாக பாதிக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு வங்கிக்கணக்கே இல்லாதபோது அவர்கள் எங்கு சென்று பணத்தை மாற்றுவார்கள்” என்று தெரிவித்துள்ள அவர், மேலும் “மோடி ஒரு ஹிந்து தேசியவாதி. அவர் எத்தனையோ முஸ்லிம்களைக் கொன்றுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் டிரம்ப்பும், ஸ்டீவ் பானனும் நரேந்திர மோடியின் வெற்றியை ‘உலக கிளர்ச்சி’யின் ஒரு பகுதி என்று வரவேற்றனர். அவர் வெற்றியின் கிளர்ச்சி இதுதானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூயார்க் டைம்ஸ்…
“இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் மன்னன் போன்றது. 78 சதவிகித பரிமாற்றங்களுக்கு ரூபாய் நோட்டுகளே உபயோகப்படுகின்றன. பல மக்களிடம் கிரெடிட் கார்டுகள் இல்லை. ஆகையால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆதலால் இப்பிரச்னையைப் போக்க அரசு விரைவில் புதிய ரூபாய் 500, 2000 நோட்டுகளை அதிகளவில் புழக்கத்தில் விடவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
அல்ஜசீரா..
“இந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோட்டுகளை நம்பியிருக்கும் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.
தி எக்கானமிஸ்ட் ஸ்டேட்ஸ்…
86 சதவிகிதம் நீக்கியிருப்பது பெரிய ஆச்சர்யத்தைத் தருகிறது. இது, நரேந்திர மோடியின் மிக மோசமான தவறு என்றும் விமர்சித்துள்ளது. “இந்தியாவில் 80 சதவிகித மக்கள் ரொக்கத்தை நம்பியே இருக்கின்றனர். மேலும் கிராமப்புறங்களில் வங்கிகள் இல்லாதபோது அவர்கள் எப்படி ரூபாய் 1000, 500 நோட்டுகளுக்கு ரூபாய் 100 நோட்டுகளை மாற்றுவார்கள். மோடியின் இத்திட்டம் நல்லதா, கெட்டதா என பின்னால் தெரிந்து கொள்வோம். ஆனால், நான் இன்று வங்கிக்கு முன்னால் பட்டினியாக நிற்கிறேன்” என்கிறார் தொலைக்காட்சியில் ஒருவர். மேலும், “கிராமத்தில் விவசாயிகள், ஓட்டுநர்களுக்கு எவ்வாறு பணம் கொடுப்பது என தெரியாமல் இருக்கிறார்கள்?” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் ஊடகம் ஒன்று…
“உண்மையான பிரச்னை என்பது இந்த அறிவிப்பால் ஏழைகள், சிறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே. சிறிது சிறிதாக சேமித்து வந்தவர்களையும் குறைவான வருமானம் பெறுபவர்களையும் வங்கிகளுக்குச் சென்று பணம் மாற்றிக்கொள்ளும் முறை பாதித்திருக்கிறது” என்கிறது.
அசோசியேட் பிரஸ்…
‘அடிப்படையில், நீங்கள் குழப்பத்தை உருவாக்குகிறீர்கள்’ என்ற தலைப்பில், ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் எக்கானமிஸ்ட்டான ஸ்டீவ் ஹெங்க் எழுதியுள்ள பத்தியில், “இந்தியா என்பது பணப்பொருளாதாரம் கொண்ட நாடு. எல்லோரும் கிரெடிட் கார்டுகளுடன் இருக்க இந்தியாவானது ஐரோப்பா, அமெரிக்கா அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தபோது சில காலம் மட்டும் பொறுத்திருங்கள் என்றார். ஆனால் இப்போது ‘கேஷ்லெஸ் இந்தியா’ என்ற கோஷத்தை பாஜக முன் வைத்துள்ளது. நாம் இதுநாள் வரை பணப்பற்றாக்குறை என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் பணமற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்குடன் மக்களைத் திண்டாட வைத்து வங்கி அட்டைகள், மொபைல் பேங்கிங், இணைய பரிவர்த்தனைகளின் பக்கம் திருப்புவதே இதன் உண்மையான நோக்கம் என்பது அரசின் பிரச்சாரங்களின் மூலம் புலனாகியிருக்கிறது. ஆனால் மொத்த இந்தியாவில் சில கிராம மக்களே ஏடிஎம் வசதி பெற்றுள்ளனர். பெரும்பான்மை மக்கள் வங்கிகளுக்கே செல்கின்றனர். ஆதலால், அவர்கள் உழைப்புக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பல பேர் குறிப்பாக, பெண்களுக்கு வங்கிக்கணக்கு இல்லை. அவர்களின் சேமிப்பு பணம் என்னாவது? என்ற கேள்வியும் நியாயமான கோபமும் எழுவதை தடுக்க இயலவில்லை.
தமிழில்: விக்ரம்

கருத்துகள் இல்லை: