திங்கள், 28 நவம்பர், 2016

பிடல் காஸ்ட்ரோ ஏன் புலிகளை ஆதரிக்கவில்லை?

கொஞ்சம் முரட்டுத்தனமான தைரியமும், அநீதிகளின் மீதான கோபமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் போராளி ஆகலாம். ஏனெனில் துப்பாக்கியை யார் அழுத்தினாலும் சுடும். ஆனால் எங்கே, எப்போது அழுத்த வேண்டும் என தீர்மானிப்பதில்தான் ஒரு போராளியின் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது. அதற்கு மிகப்பெரிய அரசியல் அறிவும், பண்ணுறவாண்மையும் வேண்டும். போராட்டத்தில் வெற்றி அடைந்தபின் அந்த வெற்றியை தக்கவைக்க நிர்வாகத்திறமை வேண்டும். இன்னொரு போராளி உருவாவதற்கான வாய்ப்பை கொடுத்துவிடாது ஆட்சி நடத்த வேண்டும். இந்தியாவில் ஐந்தாண்டுகள் பதவியில் அமர்த்தும் ஜனநாயக ஆட்சிமுறையில் கூட பல கூமூட்டைகளையும், திமிர் பிடித்த சர்வாதிகாரிகளையும் நாம் சந்திக்க வேண்டியிருகிறது. ஆனால் நிரந்தர சர்வாதிகார ஆட்சி கையில் இருந்தும் கூட தலையில் திமிர் ஏறாமல், கால்களை தரையில் வைத்து ஆட்சி நடத்த நல்ல மனதும், நிர்வாகத்திறமையும், மக்கள் மீது அளப்பெரிய அன்பும் தேவை. இதெல்லாம் ஒருசேர அமைந்திருந்த ஆகச்சிறந்த போராளி/அரசியல்வாதி/நிர்வாகி தான் ஃபிடல் காஸ்ட்ரோ.

காஸ்ட்ரோ வெற்றி அடைந்துவிட்ட போராளி. அவருக்கும் சேகுவேராவுக்குமான மெல்லிய வேற்றுமை மிக அழகானது. சே உலகத்திற்கான போராளி. காஸ்ட்ரோ கூபா மக்களுக்கான போராளி. அதனால்தான் கூபாவின் வெற்றியோடு காஸ்ட்ரோ தன்னை மட்டுப்படுத்திக் கொண்டு கூபாவின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தினார். இலங்கை மனித உரிமை பிரச்சினையில் தன் நாட்டின் அரசியலை மட்டுமே கணக்கில் கொண்டு கூபா செயல்பட்டதுவரை காஸ்ட்ரோவின் இந்த கொள்கை தொடர்ந்தது. ஆனால் சே எனும் பருந்தை சகல வசதிகள் செய்துகொடுத்தும் கூட காஸ்ட்ரோவினால் கூபா எனும் கூண்டில் அடைக்க முடியவில்லை.
இருவருக்கும் இடையில் இருக்கும் இந்த வேற்றுமையினால் காஸ்ட்ரோவை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. உலகில் பல போராளிகள் பெறாத வெற்றியை காஸ்ட்ரோ பெற்றிருக்கிறார். அதற்கு முக்கியமான காரணம் கூபாவை மட்டுமே மனதில் வைத்து செயல்பட்ட அவரது இந்த கூரிய அரசியல் அறிவுதானே தவிர போர் தந்திரம் இல்லை. நம்மூர் முட்டாள்கள் மனசாட்சியே இல்லாமல் இங்கிலாந்தை வீழ்த்த ஹிட்லரை போய் சந்தித்த நேதாஜியை புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் அமெரிக்க எதிர்ப்பின் காரணமாக இலங்கை பிரச்சினையில் முடிவெடுத்த காஸ்ட்ரோவை தூற்றுவார்கள். அமெரிக்காவின் கூலிப்படையாக செயல்பட்ட/செயல்படும் யாருக்கும் காஸ்ட்ரோ ஆதரவளிக்கமாட்டார் என்பதுதான் உண்மை.
இவர்களின் பிரச்சினையே இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட நிலைக்கு யார் உண்மையான காரணம் என்பதை விட்டுவிட்டு போகிறவன் வருகிறவன் எல்லோர் முதுகிலும் அந்தக் காரணத்தை கட்டிவிட முயற்சிப்பதுதான். நம் போராட்டம், நம் லட்சியம் என செயல்படாமல் அடுத்தவர்களையே கைகாட்டி கைகாட்டி பிழைப்பை ஓட்டியதால்/ஓட்டுவதனால்தான் கூபா அடைந்த வெற்றியை ஈழத்தினால் அடைய முடியவில்லை.
அரசியல் மட்டுமல்லாமல், தனிமனிதனாகக் கூட நாம் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவரது கூரிய நோக்கமும், அதை மட்டுமே நோக்கி தடம் மாறாத அவரது நடவடிக்கைகளும் அதில் முக்கியமான ஒன்று.
உலகம் சேகுவேராவை ஒரு போராளியாக நினைவில் கொள்ளும். ஆனால் காஸ்ட்ரோவை ஒரு வெற்றியாளனாக, தான் இந்த பூமிக்கு வந்த நோக்கத்தை கனகச்சிதமாக நிறைவேற்றிவிட்டு, நிம்மதியாக கண்ணை மூடிய ஒரு வரலாற்று நாயகனாக நினைவில் கொள்ளும்.
-டான் அசோக் முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: