புதன், 16 நவம்பர், 2016

நோட்டு ஒழிப்பு: மம்தா தலைமையில் பேரணி!


500, 1000 ரூபாய் நோட்டுகளை திடீரென செல்லாக்காசாக அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில், ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தனர்.
முன்னதாக, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று மக்களவை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

அதையடுத்து, வெளியேவந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்னர் கூட்டமாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்புநிற போர்வைகளை அணிந்தபடி, ’பொருளாதார அவசரநிலையை உடனடியாக திரும்பப் பெறு’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.
இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று பேரணியாகச் சென்று சந்திக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டிருந்தார். அதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆமோதித்தன. மற்ற கட்சிகளுக்கு இதில் உடன்பாடு இல்லை. உடனடியாக குடியரசுத் தலைவரை சந்திப்பது நல்லதல்ல. அரசு என்ன சொல்கிறது என்று கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடக்கூடாது என்று அக்கட்சிகள் கருத்துத் தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் முதலில் விவாதித்துவிட்டு பிறகு குடியரசுத் தலைவரை சந்திக்கலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
ஆனால் திட்டமிட்டபடி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில், இன்று அவரது கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி.க்கள் 35 பெரும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பெரும் சேர்ந்து அவருடன் ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்றனர். அவருடன், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா மற்றும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆகியோர் உள்பட மொத்தம் 5௦க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: