வியாழன், 17 நவம்பர், 2016

மம்தா பானர்ஜி மோடிக்கு மூன்று நாள் கெடு ! நிறுத்தணும்.. ஆமா எல்லாம் நிறுத்தணும்..?

நேற்று புதன்கிழமையன்று, எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக ராஷ்டிரபதி பவனுக்கு நடைப்பயணம் சென்ற மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார். பின்னர், மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு பிரச்னையில் தலையிட்டு, அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பிரணாப் முகர்ஜியை கேட்டுக் கொண்டார். நேற்று நடந்த இந்தச் சந்திப்பின்போது ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்ளவில்லை. அவருடைய சார்பில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பகவத் மன் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய எதிர்ப்புப் பேரணியில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
புதுதில்லியின் மிகப்பெரிய காய்கறி, பழ மண்டியான ஆசாத் மண்டியில் இந்தப் பேரணி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘அவர்கள்(பாஜக) அரசியலமைப்பை உடைக்க நினைக்கிறார்கள். அதை நாம் அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு (பாஜக) இந்த நாட்டை விற்க வேண்டும். வங்கியிலிருந்து எடுத்துச்செல்ல வரம்பாக இருந்த 4500 ரூபாய் தொகையை தற்போது, இரண்டாயிரமாக குறைத்திருக்கிறார்கள். உங்களுக்குத் தைரியம் இருந்தால் எங்களை சிறைக்கு அனுப்புங்கள் அல்லது சுட்டுத் தள்ளுங்கள். ஆனால் நாங்கள் போராடுவதை தொடர்வோம். ஏழை மக்கள் பட்டினியாக இருப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது. நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த முடிவை மூன்று நாட்களில் திரும்பப் பெறாவிட்டால் எங்கள் போராட்டம் தீவிரமடையும்’ என்று, மம்தா பானர்ஜி பேசியிருக்கிறார்.
அடுத்ததாகப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘ராபர்ட் வதேராவின் பெயரை உச்சரிக்கவே மக்கள் பயந்தவேளையில் அவர் குறித்து நான் பேசியிருக்கிறேன். கறுப்புப் பணத்துக்கு எதிரான அத்தனை போராட்டத்திலும் நான் பங்கெடுப்பேன். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தினால் எப்படி கறுப்புப் பணம் ஒழியும்? விஜய் மல்லையா நாட்டைவிட்டு வெளியேற பிரதமர் மோடி உதவினார். இப்போது, மல்லையா லண்டனில் உல்லாசமாக இருக்கிறார். பொதுமக்கள் வரிசையில் நிற்கின்றனர். குடும்பங்களில் திருமணங்கள் தடைப்படுகின்றன அல்லது மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த மரணங்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு?’ எனப் பேசினார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: