திங்கள், 14 நவம்பர், 2016

டொனால்ட் ட்ரம்ப் ; 30 லட்சம் சட்டவிரோத வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள் .

வாஷிங்டன்: சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார், இவர் 2017 ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு ட்ரம்ப் இன்று பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் அதிபரானதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற்றப்படுவர்.

கிரிமினல் பின்னணி இருப்பவர்கள், ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள், போதை மருந்து கடத்தல்காரர்கள் என சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைந்து இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். இந்த எண்ணிக்கை 20 லட்சமாக இருக்கலாம் அல்லது 30 லட்சமாகக் கூட இருக்கலாம். அவர்களை வெளியேற்றுவேன் அல்லது சிறையும் பிடிப்பேன்.
ட்ரம்ப் தநது தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று உறுதியளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்பார்த்தே, அவர் அதிபராக தகுதியில்லாதவர் என்று அமெரிக்காவில் பல பிரிவினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை: