புதன், 16 நவம்பர், 2016

500 கோடியில் திருமணம் முன்னாள் பாஜக அமைச்சர்+ சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் மகளுக்கு பெங்களூருவில் ..

உஷார் சித்து
பெங்களூரு: சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி மகளுக்கு ரூ500 கோடியில் நடத்தி வைக்கப்பட்ட ஆடம்பர திருமணத்தில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக சூளுரைக்கும் பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர். கருப்பு பண விவகாரத்தில் பாஜகவை சாடும் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலை நடத்தி நாட்டுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்திய குற்றவாளி ஜனார்த்தன ரெட்டி. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டு அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. தற்போது ஜாமீனில் இருக்கிறார் ஜனார்த்தன ரெட்டி. இவரை இன்னமும் கட்சியில் இருந்து நீக்காமல் வைத்திருக்கிறது பாஜக.

ரூ 500 கோடி திருமணம்

அவர் தமது மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பரமாக இன்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மத்திய பாஜக அரசின் கோமாளித்தனமான நடவடிக்கையால் மக்கள் ரூ500, ரூ1,000க்கு நாள்தோறும் போராடுகின்றனர்.

ரகசிய உத்தரவுகள்

ஆனால் ஜனார்த்தன ரெட்டியோ மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணத்தை நடத்தியிருக்கிறார். கருப்பு பணத்தை பற்றி மத்திய பாஜக அரசு பேசி வரும் நிலையில் இந்த திருமணத்தில் பாஜக தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என டெல்லியில் இருந்து ரகசிய உத்தரவும் போடப்பட்டதாம். இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் அந்த பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என உத்தரவிடப்பட்டதாம்.

பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்

இருப்பினும் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எதியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். கர்நாடக அமைச்சர்கள் பரமேஷ்வர், சிவகுமார் உள்ளிட்டோரும் இத்திருமணத்தில் பங்கேற்று ஜோடியாக விருந்து சாப்பிட்டுள்ளனர்.

உஷார் சித்து

ஆனால் உஷாராக முதல்வர் சித்தராமையா இத்திருமணத்துக்குப் போகவில்லை. அதேபோல் கர்நாடக காவல்துறையும் இத்திருமணத்துக்கான போக்குவரத்து ஒழுங்குகளை கண்டுகொள்ளவில்லை. இதனால் 3,000 தனியார் பாதுகாவலர்களை நிறுத்தி போக்குவரத்து ஒழுங்கு செய்யும் பணிகளை மேற்கொண்டது ஜனார்த்தன ரெட்டி குடும்பம்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: