சனி, 19 நவம்பர், 2016

மூன்று தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு!


minnambalam,com  :தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பொதுத் தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலுமாக 3 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த முறை நடந்த பொதுத் தேர்தலின்போது தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக - எம்எல்ஏ சீனிவேல், பதவி ஏற்புக்கு முன்னரே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் எம்எல்ஏ ஜான்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தமிழகம், புதுவையில் 4 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று(19/11/2016) நடைபெறுகிறது. தமிழகத்தில் தஞ்சை தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, பாமக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகிறார்கள். அதிமுக வேட்பாளராக ரெங்கசாமியும் திமுக வேட்பாளராக டாக்டர் அஞ்சுகம் பூபதியும் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, பாமக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 39 பேர் களத்தில் உள்ளனர். அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் திமுக வேட்பாளராக கே.சி.பழனிசாமியும் போட்டியிடுகின்றனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸும் திமுக வேட்பாளராக டாக்டர் சரவணனும் போட்டியிடுகின்றனர்.புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளராக முதல்-அமைச்சர் நாராயணசாமியும் அதிமுக வேட்பாளராக ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர்.4 தொகுதிகளிலும் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று(17/11/2016) மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. பிரச்சாரம் முடிந்ததையடுத்து, மாலை 5 மணிக்குமேல் வெளியாட்கள் அனைவரும் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தொகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக் கூடங்கள், விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி, வெளியாட்களை வெளியேற்றினர்.வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விரலில் வைக்கும் ‘மை’ உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் நேற்று(18/11/2016) காலை முதல் கொண்டு செல்லப்பட்டது. வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் நேற்று இரவே வாக்குச்சாவடிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இன்று(19/11/2016) வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை வரும் 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’அரவக்குறிச்சியில் 245, தஞ்சையில் 276, திருப்பரங்குன்றத்தில் 291 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. நாட்டில் முதல்முறையாக இந்தத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் 76 புகார்கள் உட்பட மொத்தம் 127 புகார்கள் வந்துள்ளன. இதில் 39 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
மேலும், வாக்குச்சாவடி அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் என அரவக்குறிச்சியில் 1,482, தஞ்சையில் 1,807, திருப்பரங்குன்றத்தில் 1,745 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் 812 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,593 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, 122 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 240 மின்னணு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. அரவக்குறிச்சியில் 96, தஞ்சையில் 275, திருப்பரங்குன்றத்தில் 254 என 625 வாக்குச்சாவடிகளில் இணைய வழி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 39 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிலவரத்தை பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தமிழக தேர்தல் துறை இணையதளத்தில் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 5:30 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். 5 மணிக்கு மேல் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் தேர்தலுக்காக 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை விரிவாக செய்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலையொட்டி நேற்று(18/11/2016) காலை 10 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்போடு வேன்களில் நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வாக்குப்பதிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பயிற்சி பெற்ற 270 வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கு தேர்தல் துறை மூலம் புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இந்த பூத் ஸ்லிப்பைக் காட்டி எளிதில் தங்கள் வாக்குகளை செலுத்தலாம். பூத் ஸ்லிப் கிடைக்கப்பெறாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட தேர்தல் துறை குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு முழுமையாக பதிவு செய்யப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடிகளுக்கு வெளியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.வாக்காளர்கள் தங்கள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாக்குப்பதிவு செய்யும்போது எடுத்துவரக்கூடாது என்று தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
(தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி,தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகள் பற்றிய விரிவான அலசல் கட்டுரைகள் ‘டிஜிட்டல் பார்வை’ என்னும் பெயரில் வெளியிட்டிருக்கிறோம்.
இதற்காக ‘தேர்தல் 16’ என்ற சிறப்புப் பக்கத்தையும் உருவாக்கியுள்ளோம்.வாசகர்கள் தமிழகத்தின் மூன்று தொகுதிகள் பற்றிய கடந்த கால வெற்றி தோல்வி வரலாற்றை தேர்தல் 16 பகுதியில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளலாம்)

கருத்துகள் இல்லை: