வெள்ளி, 11 நவம்பர், 2016

தேசிய கல்விக் கொள்கை - அதிமுக, திமுக கடும் எதிர்ப்பு!


மின்னம்பலம்.காம் : புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் பல்வேறு அம்சங்களுக்கு அதிமுக, திமுக கட்சிகளின் சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தயாரித்துள்ள அறிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை அறியும் கூட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற அதிமுக குழு தலைவரும், திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான டாக்டர் வேணுகோபால், மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது… பி.வேணுகோபால் (அதிமுக): “மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பல முரண்பாடுகள் உள்ளன.
கல்வி மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கல்வியை அம்மாநிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் சார்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் கல்வித் திட்டத்தில் மாநிலங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மாநிலங்களின் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு குறுக்கிட்டால் அது கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானதாக அமையும். கல்வியில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வகையான கல்வித் திட்டங்களுக்கு மத்திய அரசின் கல்விக் கொள்கையால் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. கல்வி முறையில் சம்ஸ்கிருத மொழி திணிப்பும் கூடாது. கல்வியில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரப்படலாம். அதேவேளையில், மாநில மொழிகளின் பண்பாடு, பாரம்பரியக் கல்வி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருவதால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அமைக்க தேவை இல்லை. அவசியம் தேவை என்றால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்களை ‘வருகைதரு பேராசிரியர்கள்’ ஆக தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு வந்து செல்ல அனுமதிக்கலாம். அதேபோன்று, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் இணைப்பு கல்லூரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விஷயத்திலும் மத்திய அரசின் தலையீடு கூடாது” என்று கூறினார்.
திருச்சி சிவா (திமுக): “டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையிலான குழு தனது அறிக்கையில் சிறந்த கல்வி அறிஞர்களாக சாணக்கியர், வாத்ஸ்யாயனர், ஆரியபட்டா போன்றோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவர், தொல்காப்பியர் உள்ளிட்டோரை அக்குழு கண்டுகொள்ளவில்லை. கல்வியாளர்கள் வரிசையில் கோகலே உள்ளிட்ட குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒரு சிலரை மாணவர்கள் அறிந்து கொள்ளும் பாடங்களை அறிமுகப்படுத்த கொள்கைக்குழு யோசனை கூறியுள்ளது. ஆராய்ச்சி, விஞ்ஞான முடிவுகள் அடிப்படையில் செயல்படாத அக்குழு தயாரித்த வரைவுக் கொள்கையை ஏற்க முடியாது. அக்குழுவை மாற்றியமைக்க வேண்டும். சிறந்த மாணவர்கள் ஒரு கல்வியைக் கற்கவும் சரியாக கல்வி கற்காதவர்கள் தொழிற்பயிற்சிக் கல்வியில் பயிலவும் கொள்கைக்குழு யோசனை வழங்கியுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. பொதுவான கல்விக் கொள்கையை உருவாக்கி மத்திய அரசின் கருத்தை திணிக்கும் வகையில், மாநிலங்கள் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது போல வரைவு அறிக்கை உள்ளது. சிறுபான்மையினருக்குரிய சலுகைகளைப் பறிக்கும் வகையில் ‘சமமான கல்வி நிறுவனங்கள்’ என்ற புதிய சிந்தனையை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. சம்ஸ்கிருத மொழியை மீண்டும் திணிப்பதற்கு பதில் தமிழ் போன்ற உயிரோட்டமுள்ள மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது” என்று கூறினார்.
இதுகுறித்து, நிருபர்களிடம் திருச்சி சிவா பேசியபோது, “கல்வியாளர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்படும். சிறுபான்மையினருக்கு எந்த பாதகமும் வராத வகையில் விரைவில் புதிய வரைவு அறிக்கை தயாரிக்கப்படும். வலுக்கட்டாயமாக எந்த மொழியும் பிற மாநிலங்கள் மீது திணிக்கப்படாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: