வியாழன், 10 நவம்பர், 2016

மோடியின் கருப்புப் பண மோசடி! பிஜேபி தலைமை அலுவலகம் முற்றுகை

PP Logo
பத்திரிக்கைச் செய்தி நாள் : 9-11-16 அன்புடையீர் வணக்கம், 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அரசு நேற்று இரவு 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தது. 120 கோடி மக்கள் உள்ள மிகப்பெரிய ஜனநாயக’நாட்டில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வை முடக்குவதன் மூலம் கருப்பு பணத்தை, ஊழல் பணத்தை மீட்க முடியும் என அனைவரையும் நம்ப சொல்கிறார். இது மோடியின் கருப்புப் பண மோசடி!
இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி, எஸ்ஸார், மிட்டல் போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்புப்பணத்தை 500, 1000, ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை. மோடியின் இந்த அதிரடி உத்தரவால் சசிகலா-ஜெயலலிதா, வைகுண்டராஜன், பி.ஆர்.பி, நத்தம் விசுவநாதன், ஒரத்தநாடு வைத்தியலிங்கம், எடப்பாடி பழநிச்சாமி, சைதை துரைசாமி, ரெட்டி சகோதரர்கள்,என இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நபர்களின் எந்த அசையும் அசையா சொத்துக்களையும் இத்தகைய நடவடிக்கையால் முடக்க முடியாது. கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் வாராக் கடன் ஏழரை லட்சம் கோடி ரூபாய்! இந்த மோசடிப் பேர்வழிகளின் பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கும் மோடியா, கருப்புப் பணத்தை மீட்கப் போகிறார்?

ரொக்கப்பணம் மட்டும் கருப்புப் பணம் அல்ல. கருப்புப் பண முதலைகளின் எந்த வகை முதலீடுகளையும் முடக்காமல் சாமானிய மக்களின் சேமிப்பையும்  சம்பளத்தையும் வழிப்பறி செய்வதே மோடியின் இந்த திடீர்த் தாக்குதலின் நோக்கம். மேலும் நான் பிரதமரானால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிகணக்கிலும் ரூ.15 லட்சம்  போடுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திறமையான அரசு நிர்வாகம் என அனைத்திலும் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. இதை மூடி மறைக்கவே மக்கள் மீதான இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை !
மறுபுறம் பி.ஜே.பி. சங்பரிவார் அமைப்புகள் மாட்டுக்கறி, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வி கொள்கை, இஸ்லாமிய எதிர்ப்பு, காவிரியில் கன்னட இன வெறி அரசியல், இட ஒதுக்கீடு ரத்து, ராமன் பார்க், தேசிய வெறி என மக்களிடையே கலவரத்தை தூண்டி மனித சமூகத்தையே கற்காலத்திற்கு பின்னோக்கி இழுத்து செல்ல முயற்சிக்கின்றனர்.
மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி, கோடிக்கணக்கான சாதாரண மக்களை நள்ளிரவில் நடுத்தெருவிற்கு தள்ளியுள்ளது. கருப்புப் பண முதலைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கி வைத்த பணத்தை வெளிக் கொண்டு வராது நகைகளாகவும், சொத்துக்களாகவும், நிலங்களாகவும், பதுக்கப்பட்ட கருப்புப்பண முதலீடுகளை ஒன்றும் செய்யாது.
பெரும்பான்மை மக்களை வங்கி கணக்கு என்கிற வலைக்குள் சிக்க வைத்து ஆதார் என்கிற போலீசு கண்காணிப்பின் மூலம் வரிவிதிப்பை அதிகரிக்கவும், மான்யத்தை ரத்து செய்யவும், கோடிக்கணக்கான மக்களின் சிறுவாட்டு சேமிப்பு காசையும் வங்கிக்கு கொண்டு வந்து  அம்பானி அதானி மிட்டல்,போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு  தாரை வார்க்கத்தான் மக்கள் மீதான மோடியின் இந்த பொருளாதார பயங்கரவாத தாக்குதல்.
கள்ளப்பணம், கருப்புப் பணம் குவியவும், லஞ்ச ஊழல் பெருகவும் மக்களா காரணம்?  கருப்புப் பண முதலைகள் செய்யும் குற்றங்களுக்காக சாமானிய மக்கள் சாப்பாடும், மருந்தும் வாங்க வழியில்லாமல் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?. சாமானிய மக்கள் மீதான தற்போதைய பொருளாதாரத் தாக்குதலை எதிர்க்காவிட்டால்  ஹிட்லர் வடிவில் மீண்டும் ஒரு எமர்ஜென்சி அரசியல் பாசிச பயங்கரவாதத் தாக்குதலாக வரும், அனைத்துப் பிரிவினரும் போராடாமல் மோடியின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க முடியாது!
தோழமையுடன்
வழக்குரைஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
______________________
500, 1000 நோட்டுக்கள் செல்லாது !
மோடியின் கருப்புப் பண மோசடி!
பிஜேபி தலைமை அலுவலகம் முற்றுகை
நாள் : 10.11.2016 நேரம் : காலை 11.30 மணி
இடம் : தி.நகர்
தலைமை : தோழர்.சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம்

கருத்துகள் இல்லை: