புதன், 9 நவம்பர், 2016

ஏழு அறக்கட்டளைகளும் ஸ்டாலின் வசம் .. ஸ்டாலினோ துர்க்கா வசம் .. ?

அரசியலில் எதுவும் நடக்கும் என்பார்கள். தென் மாவட்ட தி.மு.க-வையே தனது கண் அசைவில் வைத்திருந்த அழகிரி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்கூட இல்லாமல் போகும் அளவுக்கு காய்கள் நகர்த்தப்பட்டன. நொந்துபோன அழகிரியின் ஆதரவாளர்களேகூட ‘அரசியலில் இனி அழகிரி அஸ்தமம்’ என்று புலம்ப ஆரம்பித்தனர். ஆனால், இப்போது காற்று அழகிரியை நோக்கி வீச ஆரம்பித்துள்ளது. ‘மீண்டும் கட்சிக்குள் என்ட்ரி ஆகிறார் அழகிரி’ என்பதுதான் இப்போது தி.மு.க-வின் ஹாட் டாபிக்.>அழகிரி தி.மு.க-வில் இருந்து விலக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. திடீர் என இப்போது அழகிரி என்ட்ரி ஆவதற்கான காரணம் என்ன? தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது? என கோபாலபுரத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, “தலைவரே, ‘எனது அரசியல் வாரிசு ஸ்டாலின்தான்’ என்று சொல்லியதும், கட்சியினர் உற்சாகமாகத்தான் இருந்தார்கள். தலைவரின் உடல்நிலையும் கொஞ்சம் தளர்ந்துவிட்டதால், கட்சியின் செயல்பாடுகளை இப்போது ஸ்டாலின்தான் கவனித்து வருகிறார். தி.மு.க-வே கிட்டத்தட்ட தளபதியின் கட்டுபாட்டில்தான் இருந்துவருகிறது. கட்சியின் முக்கிய முடிவுகளை ஸ்டாலின்தான் எடுத்துவருகிறார். இதுதான் குடும்பத்தில் இப்போது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி குடும்பத்திலிருந்து நேரடி அரசியலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் உள்ளனர். ஆனால், ஆரம்பம் முதலே ஸ்டாலினை மட்டுமே முன்னிலைப்படுத்தி வந்ததில் பிறருக்கு கொஞ்சம் வருத்தம்தான். அழகிரி தி.மு.க-வில் அதிக கவனத்தைப் பெற்றதும் திருமங்கலம் இடைத்தேர் தலுக்குப் பிறகுதான். தன்னைப் போலவே அதிரடியாக எதையும் செய்யும் அழகிரியின் சுபாவம் கருணாநிதிக்கும் பிடித்திருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் அதே அதிரடி அரசியலால் தி.மு.க-வில் இருந்து நீக்கப்படும் நிலைக்கு வந்தார் அழகிரி. அதன் பிறகு கனிமொழி கொஞ்சம் செல்வாக்காக வலம் வந்தார். அவருக்கு என்று மாவட்டங்களில் தனி அணி உருவானது. கனிமொழி கட்சியில் முக்கியத்துவம் பெறுவதை ஸ்டாலின் தரப்பு விரும்பவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக கனிமொழியை கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுக்க ஆரம்பித்தது ஸ்டாலின் தரப்பு. இதை கனிமொழியும் உணராமல் இல்லை. ‘தலைவர் உடல்நிலை தளர்ந்து இருப்பதால், அவரால் முன்புபோல் வேகமாக செயல்பட முடியாது என்பதை அறிந்துதான் தனது அண்ணன் தரப்பு தன்னைப் புறக்கணிக்கிறது’ என்று கனிமொழி தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார். இதற்கிடையில், கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் பெரும் சிக்கலாக இருக்கிறது. அதனால்தான், ‘தீர்ப்பு வந்த பிறகு கட்சியில் நான் ஒரு ரவுண்டு வருவேன்’ என்று சொல்லியுள்ளார். அழகிரியும் இல்லை, கனிமொழியும் இல்லை என்ற நிலையில் ஒன்மேன் ஆர்மி போல ஸ்டாலின் மட்டுமே இப்போது தி.மு.க-வில் பவருடன் உள்ளார். ‘இப்படி முழுமையாக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் கட்சி சென்றால், பிற்காலத்தில் நாம் நினைத்தால் கூட நமக்கு கட்சியில் எந்த உரிமையும் இருக்காது’ என்பதை உணர்ந்த பின்தான் அழகிரியை கட்சிக்குள் என்ட்ரி செய்ய ஒட்டுமொத்தக் குடும்பமும் வேலை செய்து வருகிறது” என்கின்றனர். இதற்கு பின்னணியில் கருணாநிதியின் மகள் செல்வி உள்ளார். இது ராசாத்தி அம்மாளின் ஆசீர்வாதத்துடன் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த பத்து நாட்களில் மூன்று முறை கருணாநிதியை சந்தித்துள்ளார் அழகிரி. அழகிரியைப் பார்த்ததும் கருணாநிதியின் கண்கள் கலங்கியுள்ளது. அழகிரியும் அப்பாவைப் பார்த்து கண்கலங்கியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின்போது, ‘அண்ணனை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று செல்வி தொடர்ந்து தனது தந்தையிடம் எடுத்துச் சொல்லியுள்ளார். அதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட கருணாநிதி, ‘இடைத்தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று நம்பிக்கையோடு சொல்லியுள்ளார். இந்த நிலையில், அழகிரி கோபாலபுரம் வந்து கிளம்பிய சில நிமிடங்களில், அங்கு என்ன பேசிக் கொண்டார்கள், என்பதை ஸ்டாலின் விவரமாகக் கேட்டறிந்துள்ளார். ஏற்கெனவே, இரண்டு மாதங்களுக்கு முன்பே அன்பழகனை சந்தித்தார் அழகிரி. அப்போது, ‘நீங்கள் கட்சிக்குள் வருவதை நான் தடுக்கமாட்டேன். உங்கள் வீட்டில் முதலில் முடிவு செய்யுங்கள்’ என்று சொல்லியுள்ளார் அன்பழகன். அதன் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக கருணாநிதி மனதை கரைக்கும் வேலையை செய்துள்ளார்கள். அழகிரி என்ட்ரிக்கு இது தவிர மற்றொரு காரணமும் உள்ளது என்கிறார்கள் தி.மு.க-வினர். 

தி.மு.க-வுக்கு சொந்தமாக இப்போது ஏழு அறக்கட்டளைகள் உள்ளன. இந்த ஏழு அறக் கட்டளைகளும் இப்போது ஸ்டாலின் கட்டுப் பாட்டில்தான் உள்ளது. முரசொலி அறக்கட்டளையை இப்போது உதயநிதிதான் பார்த்துவருகிறாராம். அழகிரி ‘என்னைக் கட்சியில் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. எனது மகனை இரண்டு அறக்கட்டளைகளில் பொறுப்பாளராக நியமியுங்கள்’ என்று சொல்லியிருந்தார். ஆனால், அதுவும் ஸ்டாலினால் நிராகரிக்கப்பட்டது. மற்ற உறுப்பினர்களும், ‘தன்னைப் புறக்கணிக்கிறார்கள்’ என்ற வருத்தத்தில் உள்ளனராம். இவற்றின் பின்புலமாகத் தான் ‘அதிகாரம் ஒரு இடத்தில் இருந்தால் இனி நம்மால் எதுவும் செய்யமுடியாது’ என்ற முடிவுக்கு வந்து அழகிரியை உள்ளே கொண்டுவரும் வேலையை செய்யத் துவங்கிவிட்டார்கள் ஒட்டு மொத்தக் குடும்பத்தினரும். அழகிரி கோபாலபுரம் வந்தபோது தமிழரசு, செல்வி, கனிமொழி என அனைவரும் அங்கு வந்ததற்கு காரணமும் அதுதானாம். ‘செல்வி சொல்லி கருணாநிதி எதையும் தட்டமாட்டார்’ என்பதால், செல்வியை வைத்தே இந்தக் காரியங்கள் நடக்கத் துவங்கிவிட்டன. அழகிரி என்ட்ரிக்கு கருணாநிதியும் பச்சைக் கொடி காட்டிவிட்டதால் ஸ்டாலின் ஏகக் கடுப்பில் இருக்கிறாராம். தயாநிதி மாறன் தரப்பும் அழகிரி என்ட்ரிக்கு ஓ.கே சொல்லிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

அழகிரியும் கருணாநிதியை சந்தித்துவிட்டு தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டார். இடைத்தேர்தல் முடிந்துதான் திரும்ப உள்ளாராம். இடைத்தேர்தலுக்கு இங்கு இருந்தால், தன்மீது தேவையில்லாத சர்ச்சைகள் வரும் என இந்தப் பயணத்தை திட்டமிட்டுள்ளார் அழகிரி. கருணாநிதி சி.ஐ.டி காலனிக்கு இப்போது செல்வது இல்லை என்பதால், ராசாத்தி அம்மாள் கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதியைப் பார்த்துச் செல்கிறார். ஆனால், ராசாத்தி அம்மாளால் இங்கு எதையும் பேசமுடியாத நிலை உள்ளதாம். கருணாநிதியிடம் என்ன பேசினாலும் அந்தத் தகவல் ஸ்டாலினுக்கு சென்றுவிடுவதால், தனது மகளின் நிலை குறித்துகூட கணவரிடம் பேசமுடியாத நிலையில் தவித்து வருகிறார். அதனால்தான் கருணாநிதிக்கு கொஞ்சம் உடல்நிலை சீரானதும் சி.ஐ.டி காலனிக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டும் என  சொல்லியுள்ளாராம். ஸ்டாலின் மீது இருக்கும் வருத்தத்தைவிட அவர் மனைவி துர்கா மீதுதான் கடும் கோபத்தில் உள்ளார்களாம் கருணாநிதி குடும்பத்தினர். அவர்தான் யாரையும் கட்சிக்குள் இல்லாமல் செய்யும் வேலையை  பார்த்துவருகிறார் என்கிறார்கள்.
ஸ்டாலின் ஏற்கெனவே ‘அழகிரி கட்சிக்குள் வந்தால், நான் வெளியே போகிறேன்’ என்று  சொல் லியிருந்தார். ஆனால், இப்போது ஒட்டுமொத்தக் குடும்பமும் தனக்கு எதிராக இறங்கிவிட்டதால், இனி அழகிரி என்ட்ரியைத் தவிர்க்க முடியாதோ என்று நினைத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ‘கட்சிக்குள் வரட்டும்; ஆனால் பொறுப்பு கேட்கக் கூடாது’ என்று சிலர் ஸ்டாலினை சமாதானம் செய்தும் வருகிறார்களாம். இதற்கிடையில், ஸ்டாலின் பக்கம் போன அழகிரியின் ஆதரவாளர்கள் ‘அண்ணன்-தம்பி பிரச்னையில் எங்களை சிக்கவைத்துவிடாதீர்கள்’ என்று இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.  ‘நீ ஒத்துக்கொள்ளா விட்டாலும், அழகிரி இணைப்பை நானே அறிவித்து விடுவேன்’ என்று  கருணாநிதி ஸ்டாலினிடம் சொல்லியுள்ளார் என்றால், இதன் வீரியத்தைப் புரிந்துகொள்ளலாம். ‘அழகிரி எனது மகனே அல்ல’ என்று சொன்ன கருணாநிதியே அழகிரி இணைப்பை விரைவில் அறிவிப்பார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கோபாலபுரம் குடும்பத்தில் மீண்டும் கோபக் கணைகள் வீசப்படுகின்றன!

- அ.சையது அபுதாஹிர்,
படங்கள்: சு.குமரேசன்
அட்டை ஓவியம்: ஹாசிப்கான்  விகடன்.காம்

கருத்துகள் இல்லை: