சனி, 12 நவம்பர், 2016

வெளியேற்றப்பட்ட கட்ஜு: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? .. ஊழல் நிறைந்த நீதிபதிகள் ..சௌமியாவுக்கு நீதி கிடைக்காது !.


முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி,
உச்சநீதிமன்றத்தில் இருந்து காவலர்களால வெளியேற்றப்பட்டது
வழக்கறிஞர்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
நேற்று அடர்நீல நிற கோட் ஷூட்டும் சிகப்பு நிற டையும் கட்டிய நிலையில் கம்பீரமாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் ஆஜரானார்.
2011ஆம் ஆண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சவுமியா என்ற பெண் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விருதாச்சலத்தைச் சார்ந்த கோவிந்தசாமி என்பவரால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது.
மருத்துவமனையில் சவுமியா சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, இந்த வழக்கில் கோவிந்தசாமிக்கு திருச்சூர் மாவட்ட நீதிமன்றம், அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கோவிந்தசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ததோடு கொலை சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று கூறி பாலியல் வன்முறைக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை தன் முகநூல் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் கட்ஜு. இது உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவதிப்பதாகக் கருதியதால் சவுமியா கொலை வழக்கில் நீதிபதி கட்ஜு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பியது நீதிமன்றம். ஒரு வழக்கில் முன்னாள் நீதிபதியிடம் விளக்கம் கோரி மனு அனுப்புவது இதுவே முதன்முறை என்கிற நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார் மார்க்கண்டேய கட்ஜு.
சவுமியா கொலை வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்னால் விசாரணைக்கு வர, கோவிந்தசாமியின் தண்டனை குறைப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த ரஞ்சன் ரஞ்சன் கோகோய் விசாரணை முடிந்ததும் முன்வரிசையில் அமர்ந்திருந்த கட்ஜுவைப் பார்த்து, ‘யார் முன் வரிசையில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்கள் எழுந்து நிற்கலாம்’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹாக்கியிடமும் கட்ஜுவிடமும் அவர் விமர்சனம் எழுதிய பக்கங்களை வாசித்துப் பார்க்கும்படி கொடுத்தனர். கட்ஜு அனைவரையும் ஒருமுறை பார்த்தார். அப்போது நீதிபதி கோகோய், கட்ஜுவைப் பார்த்து ‘இதற்கு என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
‘இது சுதந்திரமான நாடு. நான் விரும்பியதை பேசும் உரிமை எனக்கு இருக்கிறது’ என்று கட்ஜு பதில் கூறினார். கட்ஜு எழுதிய பக்கங்களில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் கோடிட்டு காட்டப்பட்டிருந்தன. நீதிபதி கோகோய் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுலைப் பார்த்து, ‘கோடிட்டு காட்டப்பட்ட பகுதிகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?’ என்று கேட்டார். அதற்கு மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல், ‘அந்த வரிகள் இழிவாக உள்ளன’ என்று பதில் அளித்தார். உடனே நீதிபதி ரஞ்சன் கோகோய், “நல்லது, நாங்கள் நீதிபதி கட்ஜுவுக்கு எதிராக அவமதிப்பு நோட்டீஸ் வாழங்குகிறோம்’ என்றார். மேலும், ‘கோடிட்ட பகுதிகள் நீதிபதிகளுக்கு எதிராக கூறப்பட்ட தனிப்பட்ட கருத்துகள். சௌமியா கொலை வழக்கின் தீர்ப்பு குறித்த கருத்து அல்ல’ என்றார்.
அப்போது இடைமறித்த கட்ஜு, நீதிபதி கோகோய் அவர்களை பார்த்து, ‘முதலில் அடக்கமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இது உச்சநீதிமன்ற நீதிபதி நடந்துகொள்ளும் முறையல்ல. என்னை கோபத்துக்குள்ளாக்க வேண்டாம்; என்று வெகுண்டெழுந்து அறிவுரை
கூறினார். இதைக் கேட்ட கோகோய், ‘நீங்கள் எங்களை கோபமூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜுவை நீதிமன்றத்தைவிட்டு வெளியேற்ற இங்கே யாருமில்லையா?’ என்று கேட்டார். மேலும் கட்ஜுவை வெளியேற்ற பாதுகாப்பு படையிரை அழைத்தார்.
இதைக் கேட்ட வழக்கறிஞர்கள் அனைவரும், ‘தவறு, தவறு, தவறு’ என்று கட்ஜுவுக்கு ஆதரவாக கோஷமிடத் தொடங்கினார்கள். உடனே நீதிபதி கட்ஜு, ‘நீங்கள் தான் என்னை இங்கே அழைத்தீர்கள். நான் இங்கே வந்ததற்கு வருத்தப்படுகிறேன்’ என்றார். அதற்கு கோகோய், ‘நாங்களும் கூட வருந்துகிறோம்’ என்று கூறினார். அதன் பிறகு கட்ஜுவிடம் அவமதிப்பு ஆணையை வழங்கினார்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: