வியாழன், 10 நவம்பர், 2016

அமெரிக்க தேர்தல் மூன்று தமிழர் தெரிவு .. பிரமிளா ஜெயபால் ,கமலா ஹாரிஸ் ,ராஜா கிருஷ்ணமூர்த்தி .

சென்னை: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முதல்முறையாக தமிழகத்தைச்
சேர்ந்த கமலா ஹாரிஸ், பிரமிளா ஜெயபால் ஆகியோர் உள்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலுடன் செனட் சபை, பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்(51) ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), பிரமிளா ஜெயபால் (51) ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். >பிரமிளா ஜெயபால்< சியாட்டில் தொகுதியில் இருந்து முதல்முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார் பிரமிளா ஜெயபால். 1965ம் ஆண்டு சென்னையில் பிறந்த அவருக்கு 5 வயது இருந்த போது அவரது குடும்பத்தினர் இந்தோனேசியாவுக்கு குடியேறினார். இவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்குத் தேர்வாகும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் சென்னையைச் சேர்ந்தவர். இவரது தாயார் டாக்டர் சியாமளா கோபாலன் புற்றுநோய் நிபுணர். கடந்த 1960 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். கலிபோர்னியா மாநிலம், ஆக்லாந்தில் கமலா ஹாரிஸ் பிறந்தார். கலிபோர்னியா அரசு தலைமை வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்
செனட் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் லோரட்டா சான்செஸை (56), 19,4714 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிப் பெற்றுள்ளார். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் செனட் உறுப்பினராக இந்தியர் ஒருவர், குறிப்பாக பெண் ஒருவர், தேர்வானது இதுவே முதல் முறை.
ராஜா கிருஷ்ணமூர்த்தி
அமெரிக்க வாழ் இந்தியரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு 81,263 வாக்குகள் பெற்று பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பை ராஜா கிருஷ்ணமூர்த்தி பெற்றுள்ளார். தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் டெல்லியில் வசித்து வந்தனர்.
அதன் பிறகு, அவர் 3 மாத குழந்தையாக இருக்கும் போது, அவரது பெற்றோர்கள் நியூயார்க் நகரத்துக்கு குடிபெயர்ந்தனர். அங்கேயே சட்டப்படிப்பை முடித்த அவர், அரசியலில் ஈடுபட்டு தற்போது பிரதிநிதிகள் சபைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: