புதன், 19 அக்டோபர், 2016

பழங்குடிகளுக்கு பயனளிக்குமா புதிய கல்விக்கொள்கை?


மினம்பலம்,காம் - லட்சுமணன்
573 வகையான பழங்குடிகள் இங்கே வாழ்கிறார்கள். அவர்களின் மொத்த மக்கள் தொகை 67 மில்லியன் பேருக்கும்மேல் என்கிறது அரசு ஆவணம். ஆனால் இதுவரை உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், பெரும்பான்மை சமவெளி மக்களை கருத்தில்கொண்டேதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பழங்குடிகளின் உண்மையான வாழ்நிலையையோ அவர்களின் பிரச்னைப்பாடுகளையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதற்கு இக்கொள்கைகளில் உள்ள பல ஷரத்துகள் சாட்சியாக நின்றுகொண்டிருக்கின்றன. பல்வேறு முயற்சிகள் எடுத்தபின்னும் பழங்குடிகள் கல்விக்கு வெளியே நின்றிருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாகப்படுகிறது.
பிரிட்டிஷ் அரசின் ஆளுகையின்கீழ் இந்தியா இருந்தபோது பழங்குடிகளுக்கான கல்வி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது விரும்பப்படவில்லை.
அதற்குப்பதிலாக பழங்குடிப் பகுதிகளில் கிறித்தவ மிஷினரிகளை கல்விப்பணிகளை செய்ய அனுமதித்தனர்.
1947க்குப் பின் உருவாக்கப்பட்ட பல கல்விக் கொள்கைகள் பழங்குடிகளின் பார்வையில் ஏற்படுத்தப்படவில்லையென்றாலும்கூட, அவற்றில் ஒரு சிறிய கரிசனம் இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிற கல்விக் கொள்கை 2016ன் வரைவு அறிக்கை, முழுக்க முழுக்க குலக்கல்விமுறையை நோக்கி நகர்த்தும் ரகசியத் திட்டத்தோடும் உலக வங்கியின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்க தயாரிக்கப்பட்ட ஈவிரக்கமற்ற ஒன்றாகவும் இருக்கிறது.
இதுவரை இவர்களால் கடைப்பிடித்துவந்த கல்விக் கொள்கையால் பெரும்பாலான மாணவர்கள் மிகக் கடுமையாகப் போராடி இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று தங்கள் எதிர்காலத்தை இழந்திருக்கிறார்கள். இப்போது வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை 8 சதவிகிதமுள்ள இந்த ஒன்றியத்தின் பூர்வகுடிகளை முட்டுச்சந்தில் கொண்டுபோய் நிறுத்தி இன்னும் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
மிகக்கூர்மையான அப்சர்விங் திறன்கொண்ட ஒரு சமூகத்திலிருந்து வருகிற குழந்தைகளை, ஒவ்வாத முறைகளால், மனசாட்சி துளியுமில்லாமல் பாழடிக்கிற வேலையை தொடர்ந்து செய்துவரும் இந்த கல்விக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும்.
சில பரிந்துரைகள்:
• உண்டு உறைவிடப் பள்ளிகள் PPP என்னும் public private partnership மூலம் தனியாருக்கு ஒப்படைப்பதை கைவிட வேண்டும், சில உண்டு உறைவிடப் பள்ளிகள் மடங்களுக்கு கையளிக்கப்பட்டது. அங்கே சைவ உணவுக்கு முக்கியத்துவம் அளித்து முட்டைகூட உணவில் தவிர்க்கப்பட்டது. அதிகாலையில் எழுப்பி அவர்களுக்கு சம்பந்தமில்லாத சமஸ்கிருத மந்திரங்களை மனனம் செய்ய கட்டயாப்படுத்தப்பட்டார்கள். இவை நம்மிடம் ஆவணமாக இருக்கின்றன. ஆகவே, உண்டு உறைவிடப் பள்ளிகளை அரசே நடத்த வேண்டும் அல்லது பழங்குடிகளின் கூட்டுறவுச் சங்கம், பழங்குடிகளால் இயக்கப்படும் அமைப்புகளுக்கு கையளிக்கப்பட வேண்டும்.
• கற்பித்தல் அந்தந்த பழங்குடிகளின் மொழியிலேயே இருக்க வேண்டும். • பழங்குடி நலத்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகளின் கண்காணிப்பும் மதிப்பீடும் ஆழமாக செய்யப்படுவதில் சுணக்கமே நீடிக்கிறது. ஆகவே, பழங்குடி நலத்துறையின்கீழ் இயங்கும் அனைத்து கல்விச் சாலைகளையும் கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் • உள்ளூரில் உள்ள கற்பித்தலில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டுணர்ந்து, அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் பயிற்சியளித்து பள்ளிகளில் நியமிக்க வேண்டும். அதுபோலவே, தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பழங்குடிகள்குறித்த Sensitization பயிலரங்குகள் வருடத்துக்கு இரண்டுமுறையாவது வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையில் பழங்குடி மூத்தோரின் தலையீடு கட்டாயம் இருக்க வேண்டும். • பழங்குடிகள் பெரும்பாலான பகுதிகளில் வேலைக்காகவும் இதர காரணங்களுக்காகவும் இடம்பெயர்வது அடிக்கடி நடக்கிறது. மேலும் நாடோடிப் பழங்குடிகள் தனக்கே உரித்தான பாரம்பரியத்தோடு அடிக்கடி இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள் அவர்களுக்கென்று சிறப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இடப்பெயர்வாகி வாழும் இடங்களில் இங்கே படிக்கும் அதே கல்வியை இடம்பெயர்ந்து பணிபுரியும் இடங்களில் உள்ள பள்ளிகளில் கொடுக்கலாம். இதற்கென சிறப்பு card system அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அல்லது வெறுங்கால் ஆசிரியர்கள் (Barefoot teachers) நியமிக்க வேண்டும் அல்லது இடப்பெயர்வுக்கால சிறப்பு விடுதிகள் (seasonal hostels) ஏற்படுத்த வேண்டும் • 100 சதவிகித தேர்ச்சியை இலக்காகக் கொண்டு 9 மற்றும் 11ஆம் நிலையில் படிக்கும் சுமாரான மாணவர்களை பெற்றோரை அழைத்துப்பேசி வற்புறுத்தி இணங்கச்செய்து பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறர்கள். அதைக் கண்காணிக்க 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் இடைநிற்கும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் பெறும் திட்டம் மாவட்ட கல்வி மையத்தோடு இணைக்கப்பட வேண்டும். அதற்கென குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தக் குழுவில் பழங்குடி அமைப்புகளுக்கு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். • மேற்படிப்பில் இடைநிற்கும் நிலை பெரும்பாலும் கல்லூரிகளின் தூரம் காரணமாகவே நிகழ்கிறது. ஆகவே, 20 கிலோமீட்டருக்கு ஒரு கல்லூரி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் விரிவாக்க மையங்களை (extension centers )மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும் பகுதிகளில் அமைக்க பெரிய பல்கலைக்கழகங்களை முன்வரவைக்க ஏதுவான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

• சிறப்புப் பணியாளர் அல்லது உளவியல் ஆலோசகர்கள் பழங்குடி பள்ளிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் நேரடி களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் குழந்தைகளின் வருகைப் பதிவுகளில் கல்வி கற்கும் ஆர்வங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்வகையில் தயார்படுத்தப்பட வேண்டும் • பாடத்திட்டம் (curriculum development) பழங்குடிச் சமூகத்தை வைத்தே உருவாக்கப்பட வேண்டும். மேலும் அது, அவர்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி இருக்க வேண்டும். அவர்களைக் கொண்டு உருவாக்கப்படமுடியாத பாடத் திட்டங்களை மறுஆய்வு செய்யவும் அவர்களுடைய யோசனைகளை கேட்டுப்பெறும்வகையில் நெகிழ்வுத்தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும்.
· பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியங்களை, அவர்களின் சொந்த வரலாறுகளை முதல் நிலையில் இருந்து கல்லூரி நிலை வரை தனி ஒரு பாடமாகவே வைக்க வேண்டும். இது, அவர்களை வரலாற்றுணர்வோடும் ஒரு பெருமிதத்தோடும் வைப்பது மட்டுமல்லாமல், மற்ற சமூகத்துக்கும் பழங்குடிகளைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
• Exchange classes வாரம் ஒருமுறை அருகாமை பள்ளிக்கும், மாதம் ஒருமுறை சமவெளிப் பள்ளிகளுக்கும் அழைத்துச்சென்று அங்கு நடக்கும் வகுப்புகளில் பங்குபெறும் திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். அது, மாணர்களின் கற்கும் திறனை விரிவடையச் செய்யவும் சமவெளி மாணவர்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் வலிமையை அவர்களுக்கு ஏற்படுத்தும். பள்ளிகளில் மாணவர்களின் வருகையையும் அதிகரிக்க உதவும். • பத்தாம் வகுப்பிலேயே கணிதமும் அறிவியலும் வரப்பெறாத மாணவர்களை A B என்று வகைப்படுத்தி, மற்ற பாடங்கள் மட்டுமே படிக்கும் நிலைக்குத் தள்ளுவது எதிர்காலத்தில் அறிவியல் தேவைப்படும் ஆய்வுக்கூடம் சம்பந்தமான பணிகளைக்கூட பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பிருக்கிறது. இம்முறையைத் திணிப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவது பழங்குடி மக்களாகத்தான் இருக்கும். ஆகவே, 10ஆம் நிலைக்குமேல் தொழிற்கல்விக்கு இடமளிக்க வேண்டும். அதுவும் தொழிற்பயிற்சி மையங்கள் பழங்குடிகள் பகுதியில் அமைக்கப்பட வேண்டும். • இடைநிற்றல் பெரும்பாலும் 5, 8 ,11 வகுப்புகளில் நிகழ்கிறது. அது, ஆரம்பப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிக்கும், நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கும், உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளிக்கும் மாறும்போது நிகழ்கிறது. இதைத்தடுக்க, அனைத்து வகுப்புகளும் அடங்கிய ‘ஒரே பள்ளித் திட்டம்’ விடுதி வசதியுடன் குறிப்பிட்ட தொலைவுக்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும். • பழங்குடிகளின் பண்பாடு, கலை, மொழி ஆகியவற்றுக்கு புத்துணர்வு அளிப்பதன்மூலமே பழங்குடி குழந்தைகளின் வாழ்வும் மனமும் கல்வியும் பக்குவப்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே, இரவுகளில் முறைசாரா, பண்பாட்டு இரவுப் பள்ளிகள் இளையோர்கூடங்கள்போல் உருவாக்கப்பட வேண்டும். • தண்டனைப் பகுதியாக கணக்கிட்டே பழங்குடிகளின் பகுதிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்நிலை மாறி, அர்ப்பணிப்பும் ஈடுபாடும் கல்வியில் புதியவற்றை சாதிக்கும் எண்ணம்கொண்ட ஆசிரியர்களையே பழங்குடி பகுதிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். • பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் இப்போது வெறும் கையெழுத்துப் பெறும் கழகமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. அந்தக் கூட்டங்களை கிளஸ்டர் முறையில் ஓரிடத்தை தேர்வுசெய்து பெற்றோருக்கான மாதாந்திரக் கல்வி விழிப்புணர்வு பயிற்சியாக மாற்றியமைக்க வேண்டும். குறிப்பாக, அவை உள்ளூர் விடுமுறை தினங்களை கணக்கில்கொண்டு நடத்தப்பட வேண்டும். இது, பெற்றோர்களின் கூட்ட வருகையை அதிகரிக்கவும் கல்விகுறித்த விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்தும்.
• பழங்குடிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிடத்திலேயே தங்கும் வசதிகள் செய்துதரப்பட வேண்டும். • விடுதியில் தங்கியிருந்தாலும் ஆசிரியர்கள் மாணவர்களின் ஊரில் வாரம் ஒருமுறையாவது தங்கி பொது வகுப்புகளை நடத்த வேண்டும். • பெரும்பாலான பழங்குடிகளின் நேரம், காலம், சமவெளி பண்பாட்டிலிருந்து மாறுபட்டது. அவர்களுடைய பள்ளி நேரத்தை பள்ளியின் நாட்களில் அவர்களோடு கலந்து மாற்றம்செய்ய வேண்டும். • பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் உள்ளூர் விழாக்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட வேண்டும். அதை தயாரிக்கும் பொறுப்பு பழங்குடி சமூக தலைமைகளிடம் விடப்படல் வேண்டும். • குழந்தைகளின் உடல்நலம் கருத்தில் கொள்ளப்பட்டு ஊரக மருத்துவத் திட்டத்தோடு இப்பள்ளிகள் இணைக்கப்பட வேண்டும். • பள்ளிகளில் சத்துணவுத் திட்டம் செயல்படுகிறது. இந்த சத்துணவுத் திட்டங்களில் அவர்களின் பாரம்பரியமான உணவுகள் ஒரு காலத்திலும் இடம்பெற்றதில்லை. வாரம் ஒருமுறையேனும் அவர்கள் உணவுகள் கொடுப்பது பள்ளியோடு இன்னும் நெருக்கமாக அவர்களை உணரச் செய்யும். • அங்கன்வாடிகள் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 25 குழந்தைகள் வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. பழங்குடிப் பகுதிகளில் அந்த வரையறையைத் தளர்த்தி, மாற்று முறைகளை பரிசீலிக்க வேண்டும். உதாரணமாக, Community anganwadis இது உள்ளூர் ஆசிரியர்களை வளர்த்தெடுப்பதற்கும் உதவிகரமாக இருக்கும்
• பழங்குடிகளின் கற்றல் முறை எப்போதும் மடை மாறிவருவது. அதுபோன்ற ஏதுவான சூழலும் மகிழ்ச்சிகரமான இயல்பான கற்பித்தல் முறையைக் கையாள வேண்டும். கற்பிக்கும் கல்வி உபகரணங்கள் பழங்குடிகளின் வாழ்வில் இருந்தே எடுக்கப்பட வேண்டும். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளை முழுவதுமாக சமூகமயமாக்கி மக்களிடம் ஒப்படைத்திருக்கிறது நாகலாந்து. தனியார் X அரசு என்ற இரு துருவங்களுக்குள் முடங்கிவிடாமல் மாற்றுக்கல்வி நிர்வாக முறையை முன்னெடுக்க இந்த அமைப்புமுறைக்குள்ளேயே நமக்கு வழிகாட்டுகிறது. அவர்களின் 3 T முறையைப் பரிசீலிக்கலாம்.
அது என்ன 3 T முறை? அடுத்த வாரம் பார்போம்.
கட்டுரையாளர் குறிப்பு: 1975இல் பிறந்த இவர், பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். சட்டம் பயின்றவர். அரும்புகள் வீதி நாடக இயக்கத்தின் கலைஞர். பழங்குடி மொழியில் வெளியான முதல் கவிதைத் தொகுதியான ஒடியன் (2010) தொகுப்பின் ஆசிரியர். பழங்குடி மக்களின் வாழ்வையும் போராட்டத்தையும் விவரிக்கும் நாளி (2012)ஆவணப்படத்தின் இயக்குநர்களின் ஒருவர். ஒளிப்பதிவாளர், பல ஆவணப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பவர். ’சப்பெ கொகால்’ என்னும் நூலின் ஆசிரியர். தமிழ்நாடு பழங்குடிசங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளில் உரிமைசார்ந்த நிகழ்வுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். பழங்குடி இலக்கியங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து இயங்குபவர்.

கருத்துகள் இல்லை: